கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 4

இத்தக்ஃபீரிகள் இஸ்லாத்தின் அடிப்படை விடயங்கள் சிலவற்றில் தம்முடன் கருத்து மாறுபடும் பிற முஸ்லிம்களையும் கூட ‘காஃபிர்கள்’ என்று பிரகடனப்படுத்துவதில் துவங்கி, பிறகு கொஞ்சமும் ஏற்கத்தகாத வறட்டுத்தனமான நியாயங்களைக் கூறிக் கொண்டு அம்முஸ்லிம்களையும் கூட எவ்வாறு உறுத்தல் எதுவுமின்றி கொத்துக் கொத்தாக படுகொலை செய்வதில் ஈடுபடுகிறார்கள் என்பதையும், அதற்கு அவர்கள் முன்வைக்கும் வாதங்களில் உள்ள ‘அறிவார்ந்த’ அபத்தத்தையும் கடந்த பதிவில் “இமாம்” அபூ முஸ்அப் அல்-ஸர்காவியின் (ரஹ் ????) உதாரணத்தின் வழியாகக் கண்டோம்.

இத்தக்ஃபீரிகள் செய்யும் அக்கப்போரினால் உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களான ‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஷரீஆ’, ‘ஜிஹாது’ போன்றவையெல்லாம் மிகத் தீவிரமாக உருச்சிதைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டே நாம் இத்தொடரை துவங்கியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர்கள் நியாயமான அடிப்படைகளின் மீது நின்றுதான் ‘இஸ்லாத்தின் எதிரிகளுடன்’ போரில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், போருக்கென்று இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள நியமங்கள் அனைத்தையும் இவர்கள் துச்சமென கால்களுக்கடியில் போட்டு மிதித்திருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் வேண்டாம்.

அது பற்றி சில உதாரணங்களைப் பயன்படுத்தி சுருக்கமாக தொட்டுக் காட்டுவதே இப்பதிவின் நோக்கம்.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் தம்முடைய உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், தமது கள்ளக் குழந்தையாம் ஸியோனிச இஸ்ரேலைப் பாதுகாக்கவும் வேண்டி, ஒன்றையடுத்து ஒன்றாக ஓயாமல் முஸ்லிம் நாடுகளின் மீது போர் தொடுத்து இப்பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாக மட்டும் இருபது இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் பொதுமக்களை கொன்றுகுவித்து இருக்கிறார்கள். எண்ணிக்கை இன்னும் முடிந்துவிடவும் இல்லை.

‘இதற்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர்’ என்று கிளம்பியிருக்கும் இத்தக்ஃபீரிகள், ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்கு ‘அவசியமான’ Political Unrest நிலைமையை உருவாக்குகிறோம் என்ற ‘அதிநுட்பமான’ இராணுவ-வியூக நியாயத்தைக் கூறிக்கொண்டு, முஸ்லிம் நாடுகளையெல்லாம் வாழத்தகுதியற்ற பிணக்காடாக்கி வருகிறார்கள். தமதிந்த செயற்பாடுகள் அனைத்துக்கும் ‘மிக வலுவான’ இஸ்லாமிய அடிப்படைகள் இருக்கின்றன என்று வேறு குமட்டல் ஏற்படுத்தும் விதத்தில் வாதிடுகிறார்கள்.

ஏகாதிபத்திய எதிரிகள் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி நாசக்காடாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அநியாயக்கார ஆக்கிரமிப்பாளர்களை அவர்களின் கோட்டையில் வைத்தே தாக்கி நிலைகுலையச் செய்ய வேண்டுமென்று வாதிடுவது ஒரு வகையில் நியாயம்தான். எனினும், இத்தக்ஃபீரிகள் செய்வது என்ன?

தம்முடைய ‘ஃகிலாஃபாவுடன்’ போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள், கடற்கரை போன்று பெருந்திரளாக மக்கள் கூடும் இடங்களைத் தெரிவுசெய்து, துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், வாகனங்களை ஓட்டி நசுக்கியும் இயன்றளவு அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை கொன்று குவிப்பதில் உள்ள இவர்களின் ‘நியாயத்தை’ புரிந்துகொள்ளாத நாமெல்லாம் ‘மேற்கத்திய விபச்சார ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு’ பலியாகி உள்ளவர்களாம்!

“என்னடா உங்கள் பொல்லாத நியாயம்?” என்று அழுத்திக் கேட்டால், ‘அவர்கள் நம்மைத் தாக்குவது போல் நாம் அவர்களைத் தாக்குவது இறைவனின் கட்டளை’ எனும் அரிய முத்தினை உதிர்க்கிறார்கள்.

திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களை இவர்களைக் காட்டிலும் அதிகம் யாரும் கேவலப்படுத்திவிட முடியாது (நஊது பில்லாஹ்).

“எதிரிகள் நமது குடும்பத்துப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொலை செய்வார்களேயானால், நாம் அவர்களின் குடும்பத்துப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொலை செய்வது முற்றிலும் நியாயம்!” என்றாகி விடுமா?

இஸ்லாத்தைக் குறித்து இவர்களுக்குள்ள ‘ஆழமான’ புரிதலை நினைக்கும்போதே நம் மனம் அப்படியே புளகாங்கிதம் அடைகிறது!

இவ்வாறு பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் கோழைத்தனமான தாக்குதல்களுக்கு கீழ்வரும் கூற்றுதான் ‘இஸ்லாமிய’ நியாயமாம்; நாம் இதிலுள்ள ‘நியாயத்தை’ ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்:

//சன்பேர்டினோ, ஒர்லேண்டோ, பெல்ஜியம் போன்ற இடங்களில் தாக்குதல்களை நடத்திய “தீவிரவாதிகள்” யாருமே ஷிரியாவில் இருந்தோ, ஈராக்கில் இருந்தோ பயிற்சி அளிக்கப்பட்டு அனுபப்பட்டவர்களல்ல. மாறாக இவர்கள் ஐஸிஸ் இன் கொள்கையை ஏற்றுக்கொண்டு, ஐஸிஸை ஒரு தனி அரசாங்கமாக ஏற்றுக்கொண்டதனால், தங்கள் அரசுடன் (கிலாபத்) யுத்தம் செய்து கொண்டிருக்கும் நாடுகளில் காபிர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர். தாக்குதல்களுக்கு முன்னர் ஏதோ ஒரு வகையில் இவர்கள் பையத் செய்தது தெரிந்ததும் ஐஸிஸ் தனது உத்தியோகபூர்வ செய்தித் தளங்கள் மூலமாக இப்படியான தாக்குதல்களை உரிமை கோருகின்றனர். அதில் ஈடுபடுவோரை knights என அழைக்கின்றனர்.//

[குறிப்பு: இவர்களால் உருச்சிதைக்கப்பட்டுள்ளதாக நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள இஸ்லாமிய எண்ணக்கருக்களுடன் இப்போது ‘பைஅத்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.]

இவ்வாறு தாக்குதல் நடத்தும் யாருக்கும் இவர்கள் பயிற்சி கொடுப்பதில்லையாம்; “எந்தவொரு அறிஞரின் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை, உலகெங்குமுள்ள சிலுவை ஆதிக்க வீரர்களை தாக்கி அழியுங்கள்” என்று உசுப்பேற்றி மட்டும்தான் விடுவார்களாம்; பிறகு, இந்த Knights-கள் தம்முடைய ‘புனிதத் தாக்குதல்களை’ நடத்தியவுடன், அவர்களின் முகநூல் பதிவுகளின் வழியாக ‘இஸ்லாமிய அரசுக்கு’ பைஅத் செய்துள்ளார்களா என்று உறுதிசெய்து கொண்டபிறகு, ‘ஃகிலாஃபத்தின்’ செய்தித் தொடர்பாளர்கள்’ இத்தாக்குதல்களுக்கு உரிமைகோரி அறிக்கை விடுவார்களாம்.

‘நபிகளார் இப்படிச் செய்திருக்கிறார்கள்; இன்ன நபித்தோழரின் இன்ன சம்பவம் உங்களுக்குத் தெரியுமா?’ என்று இவர்களின் ஆதரவாளர்கள் இந்நடவடிக்கைகளுக்கான ‘வலுவான ஆதாரங்களை’ முன்வைத்து நம்மை மடக்கும்போது, நாம் பேந்தப் பேந்த முழிக்கிறோமாம். நாம் திருக்குர்ஆனை ஒரு முறையேனும் அதன் விளக்கத்துடன் படித்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லையாம். அதனால்தான் இப்படியாம்!

ஷ்ஷப்பா…. இப்பவே கண்ணைக் கட்டுதே…..

சரி, நாங்கள் வடிகட்டிய அறிவீனர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம்! திருக்குர்ஆனையும் நபிகளாரின் சீறாவையும் கரைத்துக் குடித்திருக்கும் ISIS ஆதரவு ‘அறிஞர்களாகிய’ நீங்களாவது, இக்கொலைகளும் தாக்குதல்களும் “இஸ்லாமிய ரீதியில் எப்படி மிகச் சரியானவை?” என்பதற்கும், “அவை எவ்வகையில் நபிகளாருடைய முன்மாதிரியின் அடியொற்றி அமைந்தவை?” என்பதற்கும் வண்டி வண்டியாக ஆதாரங்களை கொண்டுவந்து கொட்டி எங்களைப் போன்ற பாமரர்களை ‘ஜாஹிலிய்யாவிலிருந்து’ மீட்பீர்களா?

“செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?”

Related posts

Leave a Comment