கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 7

போரில் ஈடுபடாத பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், பொது மக்கள் என எந்தப் பாரபட்சமும் பாராமல் இந்த ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகள் தாமே முன்னின்று கணக்கின்றி சிந்தும் இரத்தம் போதாதென்று, ஆங்காங்கே இருக்கும் தம் ஆதரவாளர்களையும் இயன்றளவு இரத்தத்தை ஓட்ட வேண்டுமெனத் தூண்டி விடுகின்றனர்.

“இது ஃகலீஃபாவின் ஆணை… ஒன்று ஃகிலாஃபத்தின் ஆளுகைக்கு புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) வரவேண்டும். அல்லது, அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால் அவர் சிலுவையாதிக்க வீரர்களையும், அவர்களின் கூட்டணியினரையும், றாஃபிழாக்களையும், தாகூத்களையும், அவர்களின் முர்ததுப் படையணிகளையும் -எங்கிருந்த போதிலும் சரி- கிடைப்பதைக் கொண்டு தாக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு எவ்வித தயக்கமும் காட்டக் கூடாது. இந்தக் கடமையைப் பற்றி ‘அறிஞர்கள்’ என்று கூறப்படும் எவரிடமும் ஆலோசனை கேட்கக் கூடாது. ஜாஹிலிய்யாவின் நிலையில் மரணம் அடைந்துவிடக் கூடாது என்பதால், அவர் ஃகிலாஃபத்திற்கு விசுவாசப் பிரமாணத்தை (பைஅத்) பிரகடனப்படுத்தி விட்டு தாக்குதலை தொடுக்க வேண்டும்.” (Dabiq இதழ் 9)

‘ஃகலீஃபாவின்’ இக்கட்டளைக்கு செவிமடுக்கும் அதன் ஆதரவாளர்கள் தத்தமது பகுதிகளில் இயன்றளவு அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கு வசதியாக பொதுமக்கள் கூடும் எளிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தி தமது விசுவாசத்தை நிரூபிக்கின்றனர். தாக்குதலுக்கு முன் மறவாமல் முகநூல் வழியே ISIS-ன் ஃகலீஃபாவுக்கு பைஅத் பிரமாணம் செய்கின்றனர்.

ISIS-ம் கொஞ்சமும் குற்றவுணர்வு இன்றி பொதுமக்கள் மீதான அப்படுகொலைகளுக்கு உரிமை கோரி, தமது Knights-களை உயிர்த்தியாகிகள் என்று புகழ்ந்து வீடியோக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு குரூர மகிழ்ச்சி அடைந்து கொள்கிறது. இஸ்லாத்தைக் குறித்தும் அதன் அமலாக்கத்தைக் குறித்தும் உலக மக்கள் மனதில் வெறுப்பை விதைத்துவிட்ட திருப்தியில் அடுத்த தாக்குதலுக்கும் அடுத்த அறிக்கைக்கும் தயாராகின்றது.

பெல்ஜியம், சான்பெர்னார்டினோ, பாரிஸ், பங்களாதேஷ், துனீஷியா, ஒர்லாண்டோ என உலகெங்கும் பல்வேறு இடங்களில் ISIS ஆதரவாளர்கள் இத்தகைய தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

ஏகாதிபத்தியவாதிகளும் ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி அப்பாவி முஸ்லிம்களை அழித்து வருவதற்கு பழிவாங்கும் முகமாகவே தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தி, எதிரிகளின் பாதுகாப்பை உருக்குலைக்க முனைகிறோம் என்று கூறி, போரில் ஈடுபடாத பொதுமக்களின் மீது தாம் நடத்தும் படுகொலைகளுக்கு உலக முஸ்லிம்களின் மனங்களில் ஒருவித சட்டஏற்பினை ஏற்படுத்த முனைகிறார்கள்.

இது உண்மையில் பித்தலாட்டம். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கூட அறியாத ஏமாளிகளிடமும், சாகச விரும்பிகளிடமும் மட்டுமே இவர்களின் இந்த அரைவேக்காட்டுத் தனமான வாதங்கள் எடுபடும். இதற்கு அவர்கள் பல்வேறு வித குயுக்திகளைப் பயன்படுத்துகிறார்கள்.

1. போரில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என திருக்குர்ஆனும் நபிகளாரின் சீறாவும் ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ள நியமங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, சில வரலாற்று நிகழ்வுகளை அவற்றின் சூழமைவிலிருந்து துண்டித்து, பிழையாகப் பொருள் கற்பித்து அவ்வொளியில் தமது குற்றச் செயல்களை நியாயமானவை போல் சித்தரிக்கின்றனர்.

2. எதிரிகள் வரம்பு மீறுவதால் நாமும் அவ்வாறு வரம்பு மீற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்று பசப்புகின்றனர்.

3. எதிரி நாட்டு மக்கள் ‘காஃபிர்கள்’ என்பதால் அவர்களின் உயிருக்கு எந்தவொரு பெறுமானமும் இல்லை என்றும், அவர்கள் மீதான தாக்குதல்கள் முற்றிலும் நியாயம் என்றும் இஸ்லாத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் பிதற்றுகின்றனர்.

4. எதிரி நாடுகளின் அரசுகளையும் தலைவர்களையும் அந்நாட்டு மக்கள்தான் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதால், அவ்வரசுகளின் குற்றங்களுக்கு அம்மக்களும் ஒருவகையில் பொறுப்பாளிகள்தான் என்றும்; அவர்களைத் தண்டிப்பது ஆகுமானதென்றும் உளறுகின்றனர்.

5. நவீன காலத்தில் போர்முறையும் ஆயுதங்களின் இயல்பும் மாறிவிட்டதால், போரில் ஈடுபடாத பொதுமக்கள் உயிரிழப்பதை தவிர்க்க முடியாது என அவர்களின் ஆதரவாளர்கள் நாடகம் ஆடுகின்றனர்.

தம்முடைய ‘ஃகிலாஃபா’ அரசுடன் போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளின் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்வது இஸ்லாத்தின் அடிப்படையில் ஆகுமானதென்று இக்கிரிமினல் கும்பல் நம்மை நம்பச் சொல்கின்றது.

அதாவது, நபிகளாரின் மதீனா அரசுடன் மக்கத்து குறைஷிகள் போரில் ஈடுபட்டிருந்தனர். மக்காவிலிருந்த முஸ்லிம்கள் பலர் ஹிஜ்ரத் செய்ய முடியாமல் இறுதி (மக்கா வெற்றி) வரையும் கூட அங்கேயே தங்கியிருந்தனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இவர்களின் தர்க்கத்தின் படி பார்த்தால் நபியவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?!மக்காவிலுள்ள முஸ்லிம்களுக்கு இப்படியொரு செய்தி அனுப்பியிருக்க வேண்டும்:

அதாவது, “ஹிஜ்ரத் செய்ய முடியாமல் மக்காவில் தங்கியிருக்கும் முஸ்லிம்கள் எல்லாம் கையில் கிடைக்கும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சந்தைகளிலும் பொதுவிடங்களிலும் புகுந்து தாக்குதல் நடத்தி, இயன்றளவு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி எதிரியை நிலைகுலையச் செய்யுங்கள்.”

அண்ணலார் அப்படிச் செய்தார்களா? இந்த அழகில் இவர்கள் ‘நபிகளாரின் முன்மாதிரியின் மீதமைந்த இஸ்லாமிய அரசை’ நிறுவியுள்ளார்களாமாம்!
இக்கிரிமினல் கும்பலின் மாபாதகங்களுக்கும் காருண்ய நபிகளாருக்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை சீறா குறித்த குறைந்தபட்ச புரிதலுள்ள எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

அடுத்ததாக, ‘காஃபிர்கள்’ என்றாலே நசுக்கி அழிக்க வேண்டிய விஷ ஜந்துக்கள் என்பது போன்று இத்தக்ஃபீரிகள் பேசுகிறார்கள். எனவே, காஃபிர்களான பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி இவர்களுக்கு ஒரு துளியும் குற்றவுணர்வு இருப்பதில்லை. திருக்குர்ஆனையும் நபிகளாரையும் கற்ற எவரொருவரும் இப்படி நடந்துகொள்வது பற்றி கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்பது மட்டும் திண்ணம்.

‘குஃப்ரு’ என்பது இறைவனை நிராகரிக்கும் ஒரு சித்தாந்த நிலைப்பாடு. அது முற்றிலும் அசத்தியம் என்பதிலோ, ஈருலக வாழ்விலும் பெருநஷ்டம் விளைவிக்கும் ஒன்று என்பதிலோ எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும், அப்படியொரு நிலைப்பாட்டினை எடுக்கும் உரிமையை இறைவனே வழங்கியுள்ளான். இவ்வாறிருக்க, அதனைக் காரணம் காட்டி உயிரைப் பறிக்கும் இக்கயவர்கள் உண்மையில் இஸ்லாத்திற்கே தீங்கு விளைவிக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள நாம் பெரிய ஆய்வொன்றும் செய்யத் தேவையில்லை.

‘போர்முறை மாறிவிட்டது’, ‘ஆயுதங்களின் இயல்பு மாறிவிட்டது’ என அவர்களின் ஆதரவாளர்கள் கூறுவதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு. இவர்கள் என்னவோ இராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைப்பது போலவும், ஆயிரக் கணக்கான மக்களும் வேறு வழியின்றி கொல்லப்படுவது போலவும் இருக்கிறது இவ்வாதம்! மிக அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கில், நன்கு திட்டமிட்டு பொதுமக்கள் கூடுமிடங்களின் மீது தாக்குதல் நடத்திக் கொன்றுவிட்டு, சும்மா நல்ல பிள்ளைகள் போல் நாடகமாடுகின்றனர்.

எதிரி அரசுகளின் குற்றங்களுக்காக, அவ்வரசுகளுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களை கொலை செய்யலாம் என்றால், காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசுகள் இழைத்து வரும் குற்றங்களுக்காக நம் அனைவரையும் கொல்லுவது நியாயமாகி விடுமா?! என்னேயொரு தர்க்க அறிவு?! மிடில…..

எதிரிகள் வரம்பு மீறுவதால் நாங்களும் வரம்பு மீறுவோம் என்று சொல்வீர்களாயின், “எதிரிகள் நமது குடும்பத்துப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொலை செய்வார்களேயானால், நாம் அவர்களின் குடும்பத்துப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொலை செய்வது நியாயமாகி விடுமா?!”

இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதற்கு உங்களை விட வேறு யாரும் தேவையில்லை! இவர்களின் மூளைச் சலவைக்குப் பலியானவர்களை பார்த்து நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்:

இரத்த வெறிபிடித்த இக்கும்பலின் பின்னால் சென்று உங்களின் ஈருலக வாழ்வையும் நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்! உலக மக்களுக்கு ஒரு சாபக் கேடாக அமைந்து விடாதீர்கள்! திருக்குர்ஆனையும் நபி வாழ்வையும் ஆழக் கற்பதன் மூலம் இக்கும்பலின் அசத்திய இயல்பை விளங்கிக் கொள்ள முயலுங்கள்! இவர்களின் பெயரில் மட்டும் தான் ‘இஸ்லாம்’ இருக்கிறதேயொழிய, இவர்களுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நான் முன்பே கூறியிருந்தது போல், “வீட்டில் எவரேனும் பெரியவர்கள் இருந்தால்” அழைத்து வந்து, ‘ISIS-ன் அட்டூழியங்கள்’ என இத்தொடர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு குற்றச்சாட்டையேனும் மறுத்து, அது எப்படி இஸ்லாமிய ரீதியில் சரியானது என்பதை நிறுவச் சொல்லுங்கள்.

தக்ஃபீரிகள் மட்டுமின்றி வேறு சில இயக்கங்களும் தனிநபர்களும் கூட கீழ்வரும் கேள்விகளின் விடயத்தில் முறையான புரிதலின்றித் தடுமாறுவதைப் பார்க்க முடிகிறது:

1. ‘ஜனநாயகம் என்பது குஃப்ரு அல்லவா? எனில், அதில் பங்கெடுப்பவர்கள் காஃபிர்கள் தானே?!’

2. ‘முர்ததுகள் கொல்லப்பட வேண்டும் என்பது தானே இஸ்லாமிய சட்டம்?!’

3. ‘போரில் சிறைபிடிக்கப்படும் பெண்களை அடிமைப் பெண்களாக ஆக்குவதும், அவர்களை பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதும், சந்தையில் விற்றுவிடுவதும் ஆகுமானது தானே?!’

இவை போன்ற கேள்விகள் பலரின் உள்ளங்களை அரித்துக் கொண்டுள்ளன என்பது யாவரும் அறிந்ததே.

இவை பற்றி விரிவாக தனிப் பதிவுகள் எழுதும் எண்ணமிருக்கிறது, இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு:

இத்தொடரில் பேசப்பட்ட எது குறித்தேனும் உங்களுக்கு கேள்விகள் இருப்பின் அறியத் தரவும். பின்னூட்டங்களின் வழியாகவோ, தனிப் பதிவுகளாகவோ பதிலளிக்க முனைகிறேன், இன்ஷா அல்லாஹ்.

Related posts

Leave a Comment