கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் – ஸஃபர் பங்காஷ்

[மெல்லினம் வெளியீடாக பிரசுரிக்கப்பட்ட ‘மக்கா படுகொலைகள் (1987): பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அத்தியாயம் இது. நூலாசிரியர் – ஸஃபர் பங்காஷ்]

13576841_1151087561599600_7690559554818565953_o

இஸ்லாமிய உலகு மீது மேற்குலகு நாசகரமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது —இறைத்தூதர் மற்றும் குலஃபாயே ராஷிதீன்களின் வாழ்வுதாரணத்தை விட்டுவிலகி குறைபாடுகள் நிறைந்திருந்த போதிலும் தொடர்ச்சியாக நிலைபெற்றிருந்த— முஸ்லிம்களின் அரசியல் வாழ்வை சீர்குலைத்தது மட்டுமின்றி, இஸ்லாமிய கலாச்சாரத்தையும் கீழறுப்பு செய்தது. பின்னர் முஸ்லிம்கள் சுதந்திரம் அடைந்தபோதும், அந்த சுதந்திரம் முற்றிலும் போலியானதாகவே இருந்தது; மற்றும், இஸ்லாமிய விழுமியங்களோடு முரண்படுகிறதொரு உருவமைப்பிலேயே இருந்தது. மேற்கத்தியர்கள், தங்களுக்குப் பிறகு முஸ்லிம்களை ஆட்சி செய்வதற்காக மேற்கத்தியமயமான மேல்தட்டு மக்களை விட்டுச்சென்றனர். இவர்கள் பெயரளவில் முஸ்லிம்களாகவும், ஆனால் நோக்கிலும் போக்கிலும் முழுமையாக மேற்கத்தியர்கள் போலவும் இருந்ததோடு, மேற்குலகுக்கு பணிந்து சேவையாற்றினர். இவ்வாறு, காலனித்துவத்தை தொடர்ந்து அதைவிட நாசகரமான தாக்கம் கொண்ட நவ-காலனித்துவம் உருவானது.

கடந்த நூறு வருடங்களாக முஸ்லிம்கள் —குறிப்பாக, அதிகாரப் பொறுப்புகளில் உள்ளவர்கள்— குர்ஆனிய போதனைகளிலிருந்து மெல்ல மெல்ல, ஆனால் மீட்கமுடியாத வகையில், விலகிச் செல்வதைக் கண்கூடாக காணமுடிகிறது. ஏன், மிகப் புரட்சிகரமான மற்றும் அரசியல் பொதிந்த நூலான குர்ஆனே —அல்லாஹ்வின் வெளிப்பாடும் முழு மனிதகுலத்தின் வழிகாட்டியுமான குர்ஆனே— அரசியல் நீக்கம் செயப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகங்களோடு சேர்த்து இஸ்லாமும் மதச்சார்பின்மை நடவடிக்கைக்கு பலியாகியுள்ளது. மேற்குலகு கிறிஸ்தவத்தை நோக்குகின்ற பாணியிலேயே, இந்த மேற்கத்தியமயமான மேல்தட்டினர் பலரும் இஸ்லாத்தை நோக்கத் தலைப்பட்டுள்ளனர். அவர்கள் சீசருக்குச் சேரவேண்டியதென நம்புவதை சீசருக்கே ஒப்படைத்துவிட்டு, எஞ்சியதை இறைவனுக்காக விட்டுள்ளனர். இவ்வாறு தெய்வீகம்-லௌகீகம் என்று பிரித்து, மேல்தட்டு ஆளும் வர்க்கம் உம்மத்தின் மீது திணித்துள்ள சூழல்தான் பிரச்சினையின் ஆணிவேராக அமைந்துள்ளது. இக்கண்ணோட்டத்தை முழு உம்மத்தும் அவசியமாக ஏற்பதில்லை என்ற போதிலும், இந்த இஸ்லாத்தின் மதச்சார்பின்மையாக்கல் பல வகைகளில் மார்க்கத்தின் சில அடிப்படைத் தூண்களையே பாதித்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஹஜ் இதற்கு நல்லதோர் உதாரணம். எப்போதுமே உம்மத்தின் வருடாந்திர ஒருங்குதிரளாகவும் மிகுந்த அரசியல்தன்மை கொண்டதாகவும் விளங்கும் ஹஜ் இன்று வெறும் கிரியைகளாக சுருங்கியுள்ளது. தாகூத்துக்கு எதிரான முதல் ‘கலகக்காரராக’ திகழ்ந்த இறைத்தூதர் இப்ராஹீமின்(அலை) போராட்டத்திலிருந்தே தன் அடிப்படைகளை பெற்றுள்ள ஹஜ் குறித்து இன்று, அது வெறுமனே ஒரு வழிபாட்டுச் சடங்கு எனும் கருத்தோட்டம் முஸ்லிம் மனங்களில் ஆழப் பதிந்துள்ளது. எந்தளவிற்கெனில், ஹஜ்ஜை அதன் குர்ஆனிய அடிப்படையில் புனரமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையே சில தரப்பினர் விரோதமாகவும் அச்சுறுத்தலாகவும் பார்க்கின்றனர். ஹஜ்ஜின் கிரியைகள் (மனாசிக்) முக்கியமானவையே என்பதில் சந்தேகமில்லை. எனினும், அவற்றுள் பொதிந்துள்ள அரசியல் செய்தியிலிருந்து அவற்றை தனியே பிரித்தெடுக்க முடியாது.

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) நம்ரூதின் அதிகாரத்துக்கு சவால் விட்டதால், அவனது கோபத்துக்கு ஆளாகி நெருப்பில் வீசியெறியப்பட்டார். காரணம், அவர் ஒரேயொரு அதிகாரத்துக்கு மட்டுமே —அதாவது அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவுக்கு மட்டுமே— அடிபணிந்தார். உலகியல் அதிகாரத்துக்கு எதிராக இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) துவக்கிவைத்த அந்த அறைகூவல் இன்றும் உயிரோட்டத்துடன் தல்பியாவில் பிரதிபலிக்கிறது. ஹாஜிகள் இவ்வுலகு சார்ந்த சகலத்தையும் உதறிவிட்டு இஹ்ராமை அணிந்து கொண்டு அந்த தல்பியாவை இப்படி முழங்குகிறார்கள்:

லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீக்க லக லப்பைக் (இதோ நான் வருகிறேன், என் இறைவா! இதோ நான் வருகிறேன். இதோ நான் வருகிறேன், என் இறைவா! உனக்கு இணையேதும் இல்லை. இதோ நான் வருகிறேன்…).

இது ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கே சமர்ப்பணம் என்பதாக ஒவ்வொரு முஸ்லிமும் உரைக்கும் அத்துணை சக்திமிகுந்த, சமரசமற்ற வாசகம். எந்தளவிற்கெனில், இது தனக்கு முன்னிலையில் உள்ள அனைத்தையும் தகர்த்து விடுகிறது. எனினும், இன்று பல முஸ்லிம்கள் இதை வாய்ப்பாடாகவே ஓதுகின்றனர்; இதன் தாத்பரியத்தை உணர்வ தில்லை என்பது கவலைக்குரிய நிதர்சனமான ஓர் உண்மை. ஹஜ்ஜின் மற்ற பல அம்சங்களை பொறுத்தும் இதுதான் நிலைமை. உண்மையில், ஹரமைனை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கிற அரசும், அதன் அரசவை உலமா பரிவாரமும், முஸ்லிம் உலகிலுள்ள பிற அரசுகளும் ஹஜ்ஜை சக்தியற்றதாகவும், அரசியலற்றதாகவும் மாற்றுவதற்கு பெரும் முனைப்புகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களது சதித்திட்டங்களுக்காக குர்ஆனின் அடிப்படைச் செய்தி மற்றும் அர்த்தத்தையே கூட உருச்சிதைக்கத் தயங்குவதில்லை.

‘ஹஜ்ஜில் அரசியல் கூடாது’ என்ற கொள்கையை முன்னிறுத்துபவர்கள், தங்களது வாதத்திற்கு ஆதாரமாகப் பின்வரும் குர்ஆன் வசனத்தின் குறுகிய விளக்கமளிப்பை முன்வைக்கின்றனர்: “ஹஜ் ஜின் போது ஆபாசமோ, வசைபேச்சோ கோபமான உரையாடலோ (இருக்கக்) கூடாது” (2:197). இன்று மக்காவில் மஸ்ஜித் அல்-ஹராமுக்கு அருகிலேயே ஆபாசத்தின் அறிகுறிகளை காண்பதற்கு ஒருவர் மிகுந்த சிரத்தையெடுக்கவோ வெகுதொலைவில் நோக்கவோ தேவையில்லை என்ற பட்சத்தில், இவ்வாறு குர்ஆனியக் கட்டளைக்கு எதிரான சவூதிகளின் அத்துமீறல்கள் குறித்து வெகுசிலரே கேள்வி எழுப்பியிருக்கின்றனர். எனினும், இதே வசனத்தின் மற்றொரு பகுதி சர்ச்சைக் களமாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஜிதால் (வாக்குவாதம்) எனும் குர்ஆனியப் பதத்துக்கு விளக்கமாக, ஹஜ்ஜின் போது எவ்விதமான வாக்குவாதமும் —மற்றும், வாக்குவாதத்திற்கு வழிவகுக்கக்கூடிய— பேரணியும் நடைபெறக்கூடாது எனக் கூறப்படுகிறது. அந்த வாக்குவாதம் நிலைநாட்டுகிற கருத்து சத்தியத்திற்காகவா (ஹக்) அசத்தியத்திற்காகவா (பாதில்) என்பது குறித்தெல்லாம் வேறுபாடு காணப்படுவதில்லை. ஜிதால் என்ற பதத்துக்குச் சவூதிகள் வழங்கும் இக்குறுகிய விளக்கமளிப்பை பல அதிகாரப்பூர்வமான முன்னணி குர்ஆன் விரிவுரையாளர்கள் (முஃபஸ்ஸிரூன்) ஆமோதிப்பதில்லை.

முஹம்மது இப்னு அஹ்மது அபூ அப்துல்லாஹ் அல்-குர்துபி (இ. ஹி.671/கி.பி.1273): இவர் அல்-ஜாமிஉ லி-அஹ்காம் அல்-குர்ஆன் எனும் தனது திருக்குர்ஆன் விரிவுரையில், ஜிதால் குறித்து ஆறு கண்ணோட்டங்களை தந்திருக்கிறார். அவர் மாலிகி ஃபிக்ஹை பின்பற்றிவந்த போதிலும், மாற்றுக் கருத்துக்களையும் சமயதர்க்க வாதமின்றி முன்வைக்கிறார். அவரது விரிவுரையில் பல ஹதீஸ் சுட்டுக் குறிப்புகள் அடங்கியுள்ளன. மற்றும் அது, முஸ்லிம்களின் பொது சன மார்க்கப்பற்று, சட்டவியல், மொழியியல் கருதுதல்கள் ஆகியன குறித்தும் உணர்வுநுட்பம் காட்டுகிறது. இப்னு மஸ்ஊதையும், இப்னு அப்பாஸையும் மேற்கோள்காட்டி அல்-குர்துபி ஜிதால் என்பதன் பொருளை விளக்குகிறார். ஒருதரப்பினர் சினமுற்று மறு தரப்பினரை அவமதிக்கத் துவங்கும் அளவுக்கு விவாதம் செய்தல் என்று விளக்குகிறார்.

மேலும், ஹஜ் காலத்தில் ‘இல்ம்’ (அறிவு) சார்ந்த விவாதத்தை பொறுத்தவரை, அதற்கு தடையேதும் இல்லை என்கிறார். இரண்டாவதாக, கதாதாவின் (ரழி) கண்ணோட்டத்தை அல்-குர்துபி மேற்கோள் காட்டுகிறார். அதன்படி ஜிதால் என்பது அவமதிப்பை குறிக்கிறது எனக் கூறுகிறார். சில மேதைகளின் கருத்தில், ஜிதால் என்றால் குறிப்பிட்ட ஒருவரின் ஹஜ் மற்றவர்களின் ஹஜ்ஜை காட்டிலும் சிறந்ததென நிரூபிப்பதற்கான வாக்குவாதம்; அல்லது குடும்பப் பெருமை, தேசியவாதம், கோத்திரவாதம் முதலானவை குறித்த பகட்டுப் பேச்சு எனச் சுட்டப்படுகிறது. எனினும், குர்துபி முன்னிடம் அளிக்கும் வேறு இரண்டு விளக்கங்கள், இப்னு ஸைத் மற்றும் அனஸ் இப்னு மாலிக் மூலம் அறிவிக்கப்படுபவை. அவற்றின்படி, குறைஷிகளும் மற்ற கோத்திரத்தாரும் ஹஜ்ஜின் இடம்-நாள் குறித்த சர்ச்சைகளில் ஈடுபடுவார்கள்; எனவே, அத்தகு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா இவ்வசனத்தை இறக்கியருளினான் என்பதாக கூறப்படுகிறது.

இஸ்மாயில் இமாதுத்தீன் அபுல் ஃபிதா இப்னு கஸீர் (இ. ஹி.774/கி.பி.1373): இவர் ஒரு பிரபல ஷாஃபியீ சட்ட நிபுணர். தஃப்சீரை பொறுத்தவரை ‘பழமைவாத’ போக்கைச் சார்ந்தவர். இப்னு கஸீர் பல தொகுதிகளாக இயற்றியுள்ள தஃப்சீர் அல்-குர்ஆன் அல்-அழீம் என்கிற விரிவுரைக்கே பல அறிஞர்கள் முன்னிடம் அளிக்கின்றனர். அதன் மரபார்ந்த அணுகுமுறையும் முஸ்லிம் வரலாறு தொடர்பான பரந்த வீச்சும்தான் இதற்கு காரணம். இவர் இப்னு தைமிய்யாவின் மாணவர்களுள் ஒருவர் மற்றும் அவரது தீவிர ஆதரவாளர். வஹாபிகளும், இஸ்லாமிய சட்டம் குறித்த தங்களது இறுக்கமான நேர்பொருள் விளக்கமளிப்புகளை இப்னு தைமிய்யாவின் போதனைகளின் அடிப்படையிலேயே அமைத்திருப்பதாக கூறிக்கொள்கின்றனர்.

இப்னு கஸீரின் கருத்தில், ஜிதால் என்றால், ஒருவரின் உடமையைத் தொலைத்துவிட்ட அல்லது சேதப்படுத்திவிட்ட இன்னொருவர் மீது தவிர, வேறு எவரிடமும் கோபம் கொள்வதாகும். ஹஜ் காலத்தில் ஒருவர் இத்தகு இழப்பால் கோபம் மிகைத்து இன்னொருவரை அடிப்பதும் கூட ஆகுமானதே எனக் கூறுமளவுக்கு அவர் செல்கிறார். இதற்கு ஆதாரமாக, அபூ பக்கர் (ரழி) தொடர்பான சம்பவத்தைக் கூறுகிறார். ஹஜ்ஜின் போது தனது ஒட்டகத்தைத் தொலைத்து விட்ட தனது பணியாளரை அபூபக்கர் (ரழி) லேசாக அடித்தபோது, இதைப் பார்த்துப் புன்னகைத்த இறைத்தூதர் (ஸல்) அபூ பக்கரை (ரழி) லேசாகக் கண்டித்தார்கள். இதிலிருந்து, அந்தச் செயல் விரும்பப்படாதது (மக்ரூஹ்) தான்; தடுக்கப்பட்டது (ஹராம்) அல்ல என்பது மறைமுகமாகச் சுட்டப்படுகிறது.

சையித் முஹம்மது ஹுசைன் அத்-தபதபாயி (இ. ஹி.1402/கி.பி.1981): இவர் அல்-மீஸான் ஃபீ தஃப்சீர் அல்-குர்ஆன் என்கிற தனது பல-தொகுதிப் படைப்பில், ஜிதால் என்றால் விவாதம் புரிதல் என்கிறார். அல்லாமா தபதபாயி, ஜாஃபரி இஸ்னாஅஷரி சிந்தனா வழியைச் சேர்ந்தவர். அவர் குர்ஆன் வசனங்களைப் பெரும்பாலும் தத்துவயியல், சமூகவியல் மற்றும் மரபுவழிக் கண்ணோட்டங்களில் அணுகியுள்ளார். எனினும், இந்த வசனத்துக்கு அவர் அதிக விவரங்களை அளித்திருக்கவில்லை. அதை, விவாதம் புரிதல் என்று சித்தரிப்பதோடு நிறுத்திக்கொண்டார்.

ஃபக்ருத்தீன் அர்-ராஸி (இ. ஹி.606/கி.பி.1209): இவர் தஃப்சீர் துறையில் தத்துவயியல் போக்கை பின்பற்றியவர். இவரது பாரிய ஆக்கமான அல்-தஃப்சீர் அல்-கபீர் பொதுவாக மஃபாதிஹ் அல்- கப் என்பதாக அழைக்கப்பெறுகிறது. ஜிதால் என்றால் விவாதம் என்பதாக ராஸி சித்தரித்துவிட்டு, அதன் மீது ஒட்டுமொத்த தடை உள்ளதா எனக் கேள்வியெழுப்புகிறார். மேலும், ஒருவர் தனது ‘இல்ம்’ (அறிவு) வளர்ச்சிக்காகவும், தீனின் விடயங்களிலும் விவாதம் புரிவது அனுமதிக்கப்பட்ட செயல் மட்டுமல்ல; அது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியும் செயலும் ஆகும் என்று அவர் கூறுகிறார். ஜிதால் இரு வகைப்படும் என ராஸி கருதுகிறார்: ஒன்று, அசத்தியத்தை (அல்-பாதில்) உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவது. எடுத்துக்காட்டாக உலகில் கௌரவம், அதிகாரம், அந்தஸ்து, பதவி, பணம், செல்வம் போன்றவற்றை அடைவதற்காக விவாதம் புரிதல். இது தடுக்கப்பட்ட செயல். மற்றது, சத்தியத்தை (அல்-ஹக்) உறுதிப்படுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் பாதையில் அழைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுவது; இது போற்றுதலுக்குரியது.

மேற்கூறியதிலிருந்து, இஸ்லாத்தின் மாமேதைகள் ஜிதால் குறித்து தெளிவான விளக்கமளிப்புகளை தந்துள்ளது மட்டுமின்றி, ஒருவர் தனது அறிவை அதிகரித்துக்கொள்ளவோ அல்லது அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டவோ மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் போற்றுதலுக்குரியவையே எனவும் உறுதிபடக் கூறியிருக்கின்றனர். ஆக, சத்தியத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் இணை வைப்பவர்களை விட்டுப் பொறுப்பு விலகல் பிரகடனம் செவதற்காகவும் இறைநம்பிக்கையாளர்கள் ஒருங்கமைக்கும் பேரணிகள் பாராட்டுக்குரியதே. இறைத்தூதரின் தூதுத்துவ பணியின் ஆறாவது ஆண்டில் உமர் இப்னு அல்-கத்தாப் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது மாபெரும் பேரணி ஒன்று கஅபாவில் நடத்தப் பெற்றது. அதற்கு ஒருபக்கம் உமரும் (ரழி), மறுபக்கம் இறைத் தூதரின் சிறியதந்தை ஹம்ஸாவும் (ரழி) தலைமை தாங்கினர்.1

மட்டுமன்றி, இணை வைப்பவர்களை விட்டு பொறுப்பு விலகல் என்பது ஒரு குர்ஆனியக் கட்டளையாகும். அது அத்தியாயம் அத்-தவ்பாவின் (அத்தியாயம் பராஅத் என்றும் இது அழைக்கப்படுகிறது) ஆரம்ப வசனங்களில் மிக வலுவாக உரைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில், இணை வைப்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளும், அவர்களுடனான ஒப்பந்தங்களை முடித்துக் கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு தெளிவான உத்தரவும் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயம் தன்னுள் கடுமையான எச்சரிக்கைகளை கொண்டுள்ளதாலேயே, குர்ஆனில் ‘பஸ்மலாஹ்’ இல்லாத ஒரே அத்தியாயமாக இது விளங்குகிறது என குர்ஆன் விரிவுரையாளர்கள் சிலர் விளக்கமளித்துள்ளனர். இது, அல்-ஃபாழிஹா அல்லது இணை வைப்பவர்களை வெளிப்படுத்தும் செய்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்கள் பின் வருமாறு:

நீங்கள் ஒப்பந்தம் செய்துள்ள இணை வைப்பாளர்களை விட்டு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பொறுப்பு விலகிக் கொண்டனர் (என்று அறிவிக்கப்படுகிறது). எனவே, (இணைவைப்பாளர்களான) நீங்கள் நான்கு மாதங்களுக்கு பூமியில் நடமாடிக் கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்யமுடியாது என்பதையும், இறை நிராகரிப்பாளர்களை நிச்சயமாக அல்லாஹ் (தன் வழிகாட்டுதலால்) தோல்வியுறச் செய்வான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்! மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சார்பாக மனிதர்கள் யாவருக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வும், அவனது தூதரும் இணைவைப்போரை (முஷ்ரிகீன்) விட்டுப் பொறுப்பு விலகி விட்டார்கள். (9:1-3)

இந்த அத்தியாயத்தின் பிற வசனங்கள் பலவும் ஹிஜ்ரி 9-ம் ஆண்டு துல்ஹஜ் மாதத்திலேயே இறக்கியருளப்பட்டன. அப்போது, அபூ பக்கர் (ரழி) தலைமையில் சுமார் 300 முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக ஏற்கனவே மக்காவுக்குக் கிளம்பிச் சென்றிருந்தனர். இந்த வசனங்கள் இறங்கியதும், இவற்றை ஹஜ் சமயத்தில் அறிவிப்புச் செய்யவேண்டி, இறைத்தூதர் (ஸல்) இமாம் அலீயை (ரழி) உடனடியாக மதீனாவிலிருந்து மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த வசனங்களில் பொதிந்துள்ள செய்தி பருண்மையாக அரசியல் தன்மை கொண்டுள்ளது. எந்தளவிற்கெனில், ஹஜ்ஜானது வெறுமனே கிரியைகள் சார்ந்த விடயம்தான் எனச் சுட்டுவதற்கு கூட எவருக்கும் தைரியம் ஏற்படாது என்றே தோன்றுகிறது —அவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எதிராக பகிரங்கமான கலகம் செய்தாலொழிய. இந்த வசனங்கள், இணை வைப்பாளர்களை விட் டு பொறுப்பு விலகுதலை அறிவிப்பது மட்டுமின்றி, நிராகரிப்பாளர்களுக்கு எதிராகப் போர் தொடுக்குமாறும் இறை நம்பிக்கையாளர்களை ஏவுகின்றன. இறைத்தூதர் (ஸல்) இவ்வசனங்களை அறிவிப்புச் செய்வதற்காக, ஹாஜிகள் மக்காவிலிருந்து திரும்பும்வரை காத்திருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் (ஸல்) அவ்வாறு செய்யவில்லை. அதேபோல், அதற்கடுத்த ஆண்டு இறைத்தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்கு சென்ற போது, அரஃபாத் மைதானத்தில் நிகழ்த்திய ஹஜ்ஜதுல் விதா (இறுதி ஹஜ்) பேருரையும் கூட ஹஜ்ஜின் அரசியல் இயல்பு குறித்த மிக வலுவானதொரு பிரகடனமே.2

ஆக, முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் சவூதுக் குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளை பின்பற்றுவதா? அல்லது, அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவின் கட்டளைகளையும் அவனது அன்புத் தூதரின் (ஸல்) வழிமுறையையும் பின்பற்றுவதா?

இஸ்லாமிய வரலாறு மீது ஒரு வேகப் பார்வை செலுத்துவதும் ஹஜ்ஜின் பங்கு குறித்த இந்தப் புரிதலை வழங்குகிறது. நேர்வழி நின்ற கலீஃபாக்கள் (குலஃபாயே ராஷிதீன்) காலத்திற்குப் பிறகு முஸ்லிம் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக குர்ஆன் மற்றும் இறைத்தூதரின் வழிமுறையை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்து விட்டது என்றாலும், கடந்த சுமார் 200 வருடங்களாகத்தான் குஃப்ரு சக்திகள் முஸ்லிம்களை அடிபணிய வைத்துள்ளன. இறையச்சமில்லா ஆட்சிக்கு எதிரான முதல் எதிர்ப்புப் போராட்டத்தை இஸ்லாத்தின் மாபெரும் வீரத்தியாகியும் இறைத் தூதரின்(ஸல்) பேரருமான இமாம் ஹுசைன் (ரழி) அவர்கள் நிகழ்த்திக் காட்டி உதாரணம் படைத்தார்கள். ஹிஜ்ரி 681-ல் இமாம் ஹுசைன் (ரழி) கூஃபாவுக்குக் கிளம்பிச் செல்லுமுன், ஹஜ்ஜுக்காக மதீனாவிலிருந்து மக்கா சென்றார். (எனினும், அதனை அவர் நிறைவு செய்யவில்லை.) அவர் யஸீதின் படைகளுக்கெதிராக நடத்திய போராட்டம், அன்றுமுதல் முஸ்லிம்களுக்கு நிரந்தர முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.

முஸ்லிம்கள் சமீபகால வரலாற்றில் ஐரோப்பிய காலனித்துவத்தின் தலைமையிலான குஃப்ரு சக்திகளை எதிர்கொண்டுள்ளனர். ஐரோப்பியர்கள் கொள்ளை மற்றும் சுரண்டலுக்கான படையெடுப்புகளை நடத்தி முஸ்லிம் பூமிகளுக்கு வந்திறங்கியபோது, முஸ்லிம்கள் வலுவின்றி பிரிந்து கிடந்ததை கண்டனர். சீர்கெட்ட ஆட்சியாளர்களின் கீழ் இயங்கிய முஸ்லிம் படைகளால் ஐரோப்பிய பீரங்கிகளுக்கோ, சூழ்ச்சிகளுக்கோ சற்றும் ஈடுகொடுக்க முடியவில்லை. என்றாலும், முஸ்லிம்கள் மேற்கத்திய காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடவே இல்லை என அர்த்தமல்ல. இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆட்சியாளர்களின் தரப்பிலிருந்து வரவில்லை, அவ்வளவுதான். பெரும்பாலும் மார்க்க அறிஞர்களும் (உலமா) இன்னபிற புரட்சிகர முஸ்லிம்களுமே அதனை முன்னின்று நடத்தினர். காலனியாதிக்கத்துக்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பெற்ற சமூகத்தின் எதிர்ப்புப் போராட்டத்தை அணி திரட்டியதிலும், ஒருங்கிணைத்ததிலும் ஹஜ் ஒரு மிக முக்கியப் பங்கு வகித்தது.

இந்தோ-பாகிஸ்தானில் ரா பரேலியைச் சேர்ந்த சையித் அஹ்மது தலைமையேற்று நடத்திய குறுகியகால ஜிஹாது இயக்கம் அசலில், அவர் 1822-23ல்3 ஹஜ்ஜுக்கு சென்றுவந்த பிறகே துவக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனியவாதிகள், இந்து மற்றும் சீக்கிய நிலப்பற்று வெறியர்கள் ஆகியோரின் கைகளில் சிக்குண்ட இந்திய முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் அவலநிலை பற்றி சையித் அஹ்மது மக்காவில் வைத்து சக முஸ்லிம்களோடு கலந்துரையாடியதாக நம்பப்படுகிறது. அவர் ஹஜ்ஜிலிருந்து திரும்பியதும் ஜிஹாது இயக்கத்தை ஒருங்கமைத்தார். அதில் ஷா வலியுல்லாஹ்வின் (இ. 1762) பேரர் ஷா இஸ்மாயீல் போன்ற பிற மேன்மையான ஆளுமைகளும் இணைந்து கொண்டனர். சையித் அஹ்மது, ஷா இஸ்மாயீல் இருவரும் 1831-ல் (இன்றைய பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்திலுள்ள) பாலகோட்டில் சீக்கியருக்கு எதிரானதொரு போரில் வீரமரணம் அடைந்தனர். எனினும், சையித் அஹ்மதின் பின்பற்றாளர்கள் பிரிட்டிஷ் காலனியவாதிகளுக்கு எதிராக தங்களது ஜிஹாதை தொடர்ந்து நடத்திவந்தனர். 1890 வரையிலும் கூட எல்லைப்புற மாகாணத்தின் பல பகுதிகளில் அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்திருந்ததாகத் தகவல்கள் உள்ளன.

சையித் அஹ்மது ஷஹீதின் ஜிஹாது இயக்கத்துக்கு முன்னரே, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வங்காளத்தில் ஷரீஅத்துல்லாஹ் ஓர் இயக்கத்தைத் துவக்கியிருந்தார். அவரது இயக்கத்திலும் ஹஜ் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. 1782-ல் ஹஜ்ஜுக்கு சென்ற ஷரீஅத்துல்லாஹ், 1802-வரை மக்காவில் தங்கியிருந்தார். அக்காலகட்டத்தில் அவர் ஷாஃபியீ ஷெய்கு ஒருவரின் சீடரானார். அவர் பிறகு வங்காளத்துக்கு திரும்பியதும் ஃபராயிழி இயக்கத்தைத் தோற்றுவித்தார். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை ஒழித்துக்கட்டுவதே அதன் முக்கியத் தேட்டமாக இருந்தது. ‘ஏனெனில், இந்தியா இனியும் ஒரு தாருல் இஸ்லாம் (இஸ்லாம் கோலோச் சும் பூமி) அல்ல; அது ஒரு தாருல் ஹர்ப் (யுத்த பூமி) நிலைக்கு மாறி விட்டிருந்தது.’4 முஸ்லிம்கள் மீது பிரிட்டிஷார் தங்களது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு துணை புரிந்து, சந்தேகமின்றி, பிரிட்டிஷ் ஆதரிப்பை பெற்றுக்கொண்ட அப்பகுதியின் நிலப்பிரபுக்களை எதிர்த்தும் ஷரீஅத்துல்லாஹ்வின் இயக்கம் செயல்பட்டது. அவரது மரணத்துக்குப் பின், அவருடைய மகன் தாதுமியான் இந்த இயக்கத்தை முன்னெடுத்து சென்றார். இன்றும் கூட இவ்வியக்கத்தின் பின்பற்றாளர்களை வங்காளத்தின் சில பகுதிகளில் காணலாம்.

பின்பு, இவ்வியக்கங்கள் 1857-ல் முதல் விடுதலைப் போராக வளர்ச்சி கண்டன. அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்தியக் கலகம் என்று பொருத்தமற்ற வகையில் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. உண்மையில், ஏராளமான மார்க்க அறிஞர்கள் 1857 கிளர்ச்சியில் பங்கெடுத்தனர். அவர்களில் பலர் ஷா வலியுல்லாஹ், சையித் அஹ்மது, ஷா அப்துல் அஸீஸ், ஷா இஸ்மாயில், ஷரீஅத்துல்லாஹ் ஆகியோரின் வழித்தோன்றல்கள் மற்றும் சீடர்கள். 1857 கிளர்ச்சியின் தோல்விக்குப் பிறகு, மௌலானா மஹ்மூதுல் ஹசன் (இ. 1921) பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்காக மக்காவிலிருந்து ஃபத்வா ஒன்றை வேண்டிப்பெற்றார். அவர் மக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த வழியில் கைதுசெயப்பட்டு, மால்டாவில் பல்லாண்டு காலம் சிறைவைக்கப்பட்டார். இவ்வாறாக மீண்டும், இந்தோ-பாகிஸ்தான் துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக நடத்தப்பெற்ற போராட்ட இயக்கங்களுக்கு மக்காவும், ஹஜ்ஜும் தான் குவிமையங்களாக விளங்கின.

இத்தகு ஜிஹாது நடவடிக்கைகள், இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல; அதேபோல், தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு மக்கா மற்றும் ஹஜ்ஜை வலியுறுத்தும் வழக்கமும் அவர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பண்பு அல்ல. காவ்கசஸின் இமாம் ஷாமில், அல்ஜீரியாவை சேர்ந்த அமீர் அப்துல் காதிர், முஹம்மது இப்னு அலீ சனூசி ஆகியோரும் கூட மக்காவின் பக்கமே மீண்டு, ஹஜ் சமயத்தில் நிகழும் உம்மத்தின் மாபெரும் சம்மேளனத்திலிருந்து பயன்பெற்றனர்.

1827-ல் முல்லா முஹம்மது என்பாரின் போதனைகளிலிருந்து ஜிஹாது இயக்கம் ஒன்று தீப்பிழம்பாக உருவெடுத்தது. அது காவ்கசஸில் ஜார் மன்னர்களை எதிர்த்துப் போரிட்டது. இதில், முல்லா முஹம்மதின் மார்க்கப் பாடசாலையில் படித்த இறையியல் மாணவர்கள் இருவர் —காஸி முஹம்மது, ஷாமில்— மிகவும் பிரபலம டைந்தனர். 1828-ல் ஷாமில் ஹஜ்ஜுக்கு சென்றார். அங்கே வந்திருந்த, அல்ஜீரியாவை சேர்ந்த அமீர் அப்துல் காதிரை அவர் மக்காவில் வைத்து சந்தித்தார். இந்த வருங்கால இஸ்லாமிய விடுதலைப் போராட்ட நாயகர்கள் இருவரும் ஹஜ்ஜின் போது மக்காவில் வைத்து தங்களது போர்களை திட்டமிட்டனர். அப்துல் காதிர் அல்ஜீரியாவில் பிரெஞ்சுக்கு எதிராகவும், இமாம் ஷாமில் காவ்கசஸில் ஜார் மன்னர்களுக்கு எதிராகவும் போராடினர்.5

வடஆப்பிரிக்காவில் முஹம்மது இப்னு அலீ சனூசி தலைமையேற்று நடத்திய இயக்கம், உண்மையில் மக்காவில் தான் உருவெடுத்தது. சனூசி வழியமைப்பு என்பதாக பின்னாட்களில் அழைக்கப் பெற்ற அது, அசலில் அஹ்மது இப்னு இத்ரீஸ் (இ. 1837) தோற்றுவித்த இத்ரீஸி வழியமைப்பின் ஒரு கிளையாகவே உருவானது.6 மொராக்கோவை சேர்ந்தவரும் முஹம்மது நபிகளாரின் —அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!— வழித்தோன்றலுமான இத்ரீஸ், முன்னதாக மக்காவில் குடியேறியிருந்தார். அப்போது அவர் நிறுவிய தரீக்கா முஹம்மதியா சிறிதுகாலம் அசீர் மாகாணத்தில் அரசியல் அதிகாரம் பெற்றுத்திகழ்ந்தது. இந்தத் தரீக்காவே மூவேறு புதிய இயக்கங்களை பெற்றெடுத்தது: ராஷிதியா, அமீர்கானியா மற்றும் சனூசியா. ராஷிதியா தரீக்கா அல்ஜீரியாவின் வட்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டது. எனினும், அமீர்கானியாவும், சனூசியாவும் பிற பகுதிகளுக்கு பரவின. அமீர்கானியாவின் செல்வாக்கு சூடானிலும், நூபியாவிலும் பரவிய அதேவேளை, சனூசியாவின் பரவல் பூமத்தியரேகை ஆப்பிரிக்காவிலும், லிபியா மற்றும் எகிப்திலும் முன்னேற்றம் கண்டது.

சனூசியா வழியமைப்பை நிறுவியவர், முஹம்மது இப்னு அலீ அஸ்-ஸனூசி (இ. 1859). அவர் அல்ஜீரியாவை சேர்ந்தவர். எனினும் மக்காவில் குடியேறி அங்கு அஹ்மது இப்னு இத்ரீஸின் சீடரானார். சனூசியா வழியமைப்பு ஒரு செயல்வீரர்கள் இயக்கம். அது சூஃபித்துவ தொடக்கம் கொண்டிருந்தபோதிலும், தற்காப்பு கலையை பெரிதும் வலியுறுத்தியது; மேலும், விவசாயம் மற்றும் வணிகத்தில் ஈடுபடுமாறும் தனது பின்பற்றாளர்களை ஊக்குவித்தது. இந்த சனூசியா வழியமைப்புதான் பிற்காலத்தில் பூமத்திய ரேகை ஆப்பிரிக்காவில் பிரெஞ்சு காலனியாதிக்கத்தையும், லிபியாவில் இத்தாலியரையும், எகிப்தில் பிரிட்டிஷாரையும் எதிர்த்துப் போர் செய்தது.

இவ்வனைத்து இயக்கங்களுக்கும் இடையில் பல பொதுவான பண்புகளை காணமுடிகிறது: அவை அனைத்தும் வரலாற்றில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோன்றின. அவை அனைத்துமே ஹஜ் மற்றும் மக்காவுடன் தொடர்பு கொண்டிருந்தன. அவை தோன்றிய காலகட்டம், இஸ்லாமிய பூமிகள் மீது காலனியாதிக்க தாக்குதல் தொடுக்கப்பட்ட காலகட்டமாக இருந்தது. அதற்கு முன்பிருந்தே முஸ்லிம்களின் ஆட்சியதிகாரம் வீழ்ச்சியுறத் துவங்கியிருந்த போதிலும், இத்தகு ஒருசேர குஃப்ரு சக்திகள் முஸ்லிம்கள் மீது படையெடுத்து அவர்களை அடிபணியவைத்து அவர்களது பூமிகளை ஆக்கிரமித்திருக்கும் சூழலை முஸ்லிம்கள் சந்தித்ததில்லை.

சலாஹுத்தீன் பாலஸ்தீனைச் சுற்றியிருந்த அரசுகளின் ஆட்சியாளர்களை ‘கவனித்த’ பிறகே, சிலுவைப் படையினரின் ஜெரூசல ஆக்கிரமிப்பை (1099-1187) அகற்றினார். இவ்வாட்சியாளர்கள் எல்லாம் தங்களுக்கிடையே நிலவிய சில்லறையான சண்டை சச்சரவுகளுக்காகச் சிலுவைப் படையினரோடு சேர்ந்துகொண்டு, ஒருவருக்கெதிராக ஒருவர் சதிசெய்வதில் ஈடுபட்டு, முஸ்லிம்களை அடிமைத்தளையிலேயே வைப்பதற்கு துணைபுரிந்து கொண்டிருந்தவர்கள். மற்றொரு விதிவிலக்கான நிகழ்ச்சி, 1492-ல் கத்தோலிக அரசர்களிடம் கிராணடாவின் வீழ்ச்சி. எனினும் பதினாறாம் நூற் றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய உஸ்மானிய கிலாஃபத், இந்த வீழ்ச்சியை ஓரளவு ஈடுகட்டிவிட்டது.

முஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர். ஹஜ்ஜில் மட்டும்தான் முழு உம்மத்தும் அதன் நுண்மாதிரி வடிவில் பிரதிநிதித்துவம் பெறுகிறது. அந்த எளிய கனசதுர கஅபா, அல்லாஹ்வின் இல்லம் என்ற வகையில் இஸ்லாத்தில் நித்தியத் தன்மையையும், நிலைத்தன்மையையும் குறித்து நிற்கிறது. இந்த கஅபாவையே முஸ்லிம்கள் தங்களது அன்றாடத் தொழுகைகளில் முன்னோக்குகின்றனர் என்பது மட்டுமின்றி, அவர்கள் சோதனைக் காலங்களில் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மற்றும் அருளை வேண்டும் பொழுதும் இந்த கஅபாவின் பக்கமே இயல்பாகத் திரும்புகின்றனர்.

குர்ஆனிலுள்ள அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவினது கட்டளைகளின் அடிப்படையிலும், இறைத் தூதரின் —அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!— வாழ்வுதாரண அடிப்படையிலும் இந்த உம்மத் இறையில்லத்தின் (பைத்துல்லாஹ்) வரலாற்றுப் பாத்திரத்தையும், ஹஜ்ஜின் பாத்திரத்தையும் நன்கு விளங்கி வைத்திருந்தது. ஹரமைனை இன்று ஆக்கிரமித்திருப்போர் ஹஜ்ஜின் இந்த பரந்துபட்ட பாத்திரத்தை எவ்வளவு வெறுத்த போதிலும், முஸ்லிம்கள் ஹஜ்ஜின் உண்மை அம்சங்களை விளங்குவதும் அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா வின் கட்டளைக்கேற்ப அதன் அசல்பணியை மீட்பதும் அவர்கள் மீது கடமையாகும்.

இன்றும்கூட இஸ்லாமிய உலகு குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொண்டே வருகிறது. இந்த குஃப்ரு சக்திகள், தாங்கள் இஸ்லாத்தோடு சுமூகமாக வாழ விரும்புவதாகச் செய்து கொண்டிருந்த பாசாங்கு எல்லாம், ஈரானிய இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு உதிர்ந்துவிட்டன. வாஷிங்டன், மாஸ்கோ, பாரிஸ், லண்டன், டெல் அவீவ், புதுதில்லி போன்ற குஃப்ரின் அதிகார மையங்களிலிருந்து வெளியிடப்படும் அறிக்கைகளே அவர்களின் உண்மை நோக்கங்களை உறுதிப்படுத்தப் போதுமானவை. காலனித்துவம் தோன்றிய காலத்தில் போன்றே, இன்றும் இஸ்லாமிய உலகு தனது வளங்களை திரட்டி கொடிய சக்திகளை போரிட்டுத் தோற்கடிக்கவேண்டிய அவசியம் உள்ளது. இதுகுறித்து குர்ஆனில் வரும் அல்லாஹ்வின் கட்டளைகள் தெள்ளத்தெளிவாக பேசுகின்றன:

அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான் —அவன் அதைக்கொண்டு மற்ற மார்க்கங்களை மிகைக்கச் செய்வதற்காக! இது இணை வைப்பவர்களுக்கு எத்துணை வெறுப்பாக இருப்பினும் சரியே!” (9:33, 61:9)

(இதே கட்டளை, சிறிது மாறுபட்ட வடிவில் 48:28-ல் மீண்டும் வருகிறது).

இஸ்லாமிய உலகின் அரசுகள் பலவும் இதே குஃப்ரு சக்திகளுக்கு அடிபணிந்து கிடக்கும் சூழலில், நிச்சயமாக இக்கட்டளையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி, இஸ்லாத்தின் புனிதத்தலங்கள் இத்தகு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்குமெனில் —இன்று சவூது குடும்பம் இருப்பதுபோல இருக்குமெனில்— யதார்த்தத்தில் அவை குஃப்ரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே பொருள், அத்தகு கட்டுப்பாடு நேரடியாக இல்லாவிட்டாலும் கூட.

‘ஹஜ்ஜில் அரசியல் கூடாது’ என்கிற வாதமெல்லாம் சவூதுக் குடும்பம் செய்கிற தந்திர விளையாட்டே. முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பிட்ட சிலவகை கருத்துகள் பரவிவிடக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம். தங்களுக்குப் பொருத்தமாக அமையும் போதெல்லாம் அவர்கள் தங்களது சோந்த அரசியல் கண்ணோட் டத்தை முன்னிறுத்துவதற்கு ஹஜ்ஜைப் பயன்படுத்தியே வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சவூதிகள் 1980 வரை ஒவ்வொரு ஹஜ்ஜின் போதும், ராபிதா அல்-ஆலம் அல்-இஸ்லாமியின் குடைக்கு கீழ் வருடாந்திர மாநாடு ஒன்றை வழக்கமாக நடத்துவார்கள். அந்த மாநாட்டுக்கு இயல்பாகவே, சவூதி கண்ணோட்டத்தோடு சம்மதிப்போர் மாத்திரமே அழைக்கப்படுவார்கள். சரிதான், மக்காவில் தளம் கொண்ட ஒரு சவூதி முகப்பு அமைப்பிடமிருந்து பெரிதாக வேறெதனையும் எதிர்பார்க்க முடியுமா?

இங்கு கவனிக்கத்தக்கதொரு சுவாரஸ்யமான விடயம் யாதெனில், 1980 முதல் இம்மாநாடுகள் கைவிடப்பட்டு விட்டன. ஏன்? 1979 பிப்ரவரியில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றியடைந்திருந்தது. மற்றும், 1979 நவம்பரில் ஹரமில் கிளர்ச்சி நடந்திருந்தது. இந்த கிளர்ச்சி, சவூதுக் குடும்பத்தின் அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்துவிட்டது.

இது தொடர்பாக சவூதிகளின் நயவஞ்சகத்தை 1985-ம் ஆண்டின் ஒரு சம்பவத்திலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். அந்த ஆண்டு ஹஜ்ஜின் போது, பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்றொரு முற்றிலும் மதச்சார்பற்ற அமைப்பின் தலைவர், யாசிர் அரஃபாத், அரஃபா மைதானத்திலுள்ள மஸ்ஜிதுந் நிம்ராவில் குத்பா ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அரஃபா தினம் தான் (இதை யாசிர் அரஃபாத்துடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்!) ஹஜ்ஜுடைய தினம் என்பதாக இறைத்தூதர் —அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!— கூறியிருக்கிறார்கள். இருப்பினும், அந்த தினத்தில் யாசிர் அரஃபாத் போன்றதொரு மதச்சார்பின்மை தேசியவாதியை சவூதுக் குடும்பம் தெரிவுசெய்து, அரஃபா பள்ளத்தாக்கில் குழுமியிருந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் குத்பா வழங்க ஏற்பாடுசெய்தது. இந்த அரஃபாத் எதைப் பற்றிப் பேசினார்? சந்தேகமின்றி, பாலஸ்தீன விடுதலை பற்றியே பேசினார். ஆனால், அதை மதச்சார்பின்மை தேசியவாதக் கட்டமைவுக்குள் வைத்தே பேசினார்.

ஆக, சவூதுக் குடும்பத்தைப் பொறுத்தவரை, ஹஜ்ஜுடைய தினத்தன்று அரஃபா மைதானத்தில் வைத்து மதச்சார்பின்மைக் கட்டமைவில் அரசியல் பேசுவது ஆட்சேபணைக்கு உரியதல்ல; ஆனால், முஸ்லிம்கள் இஸ்லாமியக் கட்டமைவில் இவ்விவகாரங்களை விவாதிப்பது தடுக்கப்பட்ட செயல்! இதனால்தான், முஸ்லிம்கள் இஸ்லாமியக் கொடியின் கீழ் திரண்டு, குர்ஆனில் அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா அருளியுள்ள கட்டளைகளின் அடிப்படையில் நிராகரிப்பவர்களை விட்டும் இணை வைப்பவர்களை விட்டும் பொறுப்பு விலகல் பிரகடனப் பேரணிகளை கண்டிப்பாக நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால், அவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்வதற்கு அங்கே சவூதிப் படை வீரர்கள் தயாராக இருப்பார்கள்.

ஹரமின் புனிதத்துவமும் பாதுகாப்பும்

ஹஜ் என்பது உம்மத்தின் வருடாந்திர சம்மேளனம். கஅபாவை இலட்சோபலட்ச முஸ்லிம்கள் வலம் வருவதே (தவாஃப்) ஒரு மாபெரும் பேரணிதான். , அதில் அவர்கள், ஒரே அதிகார சக்தியான அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவை தவிர்த்த மற்றெல்லா சக்திகளையும் மறுத்து உரைக்கின்றனர். உண்மையில், ஹஜ்ஜின் கிரியைகள் அனைத்துமே உம்மத்தின் பேரணிதான் என வகைப்படுத்தலாம். சஃபா-மர்வா குன்றுகளுக்கு இடையிலான ஓட்டத்தை (சயீ) வேறெப்படி வருணிப்பது? உயர்ந்து நிற்கும் ஜபலுர் ரஹ்மாவின் கீழே அரஃபா பெருவெளியில் ஒன்று கூடுவது, ஒரு பேரணியே அன்றி வேறென்ன?

இறைநம்பிக்கையின் அடிப்படைத் தூண்களுள் ஒன்றுதான் ஹஜ். அதை வாழ்நாளில் ஒரு முறையேனும் நிறைவேற்ற வேண்டுமென்பது சகல முஸ்லிம்கள் மீதும் கடமையாகும். அப்பயணத்தை மேற்கொள்ள வசதியற்றோருக்கு மாத்திரமே விதிவிலக்கு உண்டு. இதுபற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

மேலும், ஹஜ் செய்யுமாறு மக்களுக்கு பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் பயணம் செய்து உம்மிடம் வருவார்கள்; அவர்கள் ஒவ்வொரு ஆழமான கணவாயிலிருந்தும் வருவார்கள். அங்கு தங்களுக்கு நன்மையளிப்பவற்றை அவர்கள் காணட்டும். மேலும், அல்லாஹ் அவர்களுக்கு அருளிய கால்நடைகள் மீது அந்தக் குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயரை கூறட்டும் (அறுக்கட்டும்) (22:27-28).

இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ள கருத்துச்சூழலானது, புனித இல்லத்துக்கு யாத்திரை செல்வோருக்காக அதை பாதுகாப்பான இடமாக ஆக்கும் நடவடிக்கையை ஒட்டியே அமைந்துள்ளது. எனவே, அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுகிறான்:

மேலும் நினைவுகூறுங்கள், நாம் இந்த (இறை) இல்லத்தை மக்களுக்கு ஒரு ஒன்றுகூடும் மையமாகவும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்… (2:125).

மற்றொரு வசனத்தில் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

திண்ணமாக, மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் சரணாலயம் பக்காவில் (மக்கா) உள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்டதாகவும், அகிலத்தாருக்கு வழிகாட்டுதலாகவும் அது இருக்கிறது (3:96).

ஹஜ்ஜுக் காலத்தில் பாதுகாப்பும், அபயமும் அதிமுக்கியமானவை; அத்தியாவசியமானவை. எனவேதான் அல்லாஹ், தன் அளவிலா ஞானத்தாலும் கருணையாலும், அவற்றை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட நீட்டித்திருக்கிறான். ஆம், புனித யாத்திரையின் போது பறவைகளையோ, பிற விலங்குகளையோ வேட்டையாடுதலை (அல்லது காயப்படுத்தலை) தடுத்து குர்ஆன் திட்டவட்டமான போதனையை வழங்குகிறது: “இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் ஹஜ் மேற்கொள்ளும் நிலையில் வனவிலங்குகளை கொல்லாதீர்…” (5:95). அடுத்த வசனத்திலேயே இது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது:

“நீங்கள் ஹஜ் மேற்கொள்ளும் நிலையில் இருக்கும்வரை, நிலத்தில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடை செயப்பட்டுள்ளது” (5:96).

ஹஜ்ஜின் பாதுகாப்பு மற்றும் அபய அம்சங்கள் குர்ஆனில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகின்றன. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மீண்டும் அத்தியாயம் அல்-மாயிதாவில், இறை நம்பிக்கையாளர்களுக்கு பின்வருமாறு கட்டளையிடுகிறான்:

இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் சின்னங்களையோ, சங்கைக் குரிய மாதத்தையோ, பலிப் பிராணிகளையோ, (அவற்றின்) அடையாள மாலைகளையோ அவமதிக்காதீர். இன்னும், இறைவனின் கிருபையையும் திருப்பொருத்தத்தையும் நாடிப் புனித இல்லம் (கஅபா) நோக்கிச் செல்வோரையும் (அவமதிக்காதீர்)…. (5:2).

பாதுகாப்பு-அபயம் எனும் இரட்டை அம்சங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுவதற்கு காரணம், ஹஜ்ஜானது உம்மத்தின் ஒற்றுமையையும், வேற்றுமையையும் குறித்து நிற்கிறது. இந்த உம்மத், ஆன்மிக வாழ்வை நோக்கிய தனது பயணத்தில் இறைநம்பிக்கையின் வெளிப்பாடுகளை உணர்ந்துகொள்வதற்கு, பாதுகாப்பும் அபயமும் மிக்கதொரு சூழல் முதன்மை முக்கியத்துவம் கொண்டது. அத்தகையதொரு சூழலில்தான் உம்மத்தின் மொழியியல், கலாச்சார மற்றும் புவியியல் வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமை இணக்கத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த சிந்தனை இணக்கம் வளர்ந்து செயல் இணக்கத்துக்கு வழிவகுக்கும். இத்தகு குர்ஆனிய அடிப்படையிலேயே உலகில் சமத்துவத்தையும், நீதியையும் நிலைநாட்ட முடியும்.

ஆயிரக்கணக்கான இறைத்தூதர்களின் தூதுத்துவ பணியைப் பொறுத்தவரை, அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் ஏக ஒருமையை பிரகடனம் செய்வதே அவர்கள் அனைவருக்கும் முதன்மை கடமையாக இருந்திருக்கிறது. மற்றெல்லா கடந்தகால, நிகழ்கால அதிகாரமும் தீர்க்கமாக, ஆணித்தரமாக நிராகரிக்கப்பட்டது. இதன் இயல்பான விளைவாக, ஷிர்க் என்பது (அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது) அல்லாஹ்வினால் மன்னிக்கப்படாத ஒரே பாவமாகி விடுகிறது. எனவே, ஒரு முஸ்லிம் இவ்வுலக விவகாரங்களிலிருந்து விலகி அல்லாஹ்வின் இல்லத்தை (கஅபா) நோக்கி செல்லும் புலப்பெயர்வாக (ஹிஜ்ரா) விளங்கும் ஹஜ்ஜானது, தெள்ளத்தெளிவாக இணை வைப்பவர்களை விட்டுப் பொறுப்பு விலகல் பிரகடனம் செய்யப்படும் சூழலிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இதுகுறித்து எவ்வித சந்தேகத்திற்கும் இடந்தராத வகையில் குர்ஆனியக் கட்டளைகள் அமைந்துள்ளன:

மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சார்பாக மனிதர்கள் யாவருக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வும், அவனது தூதரும் இணை வைப்போரை (முஷ்ரிகீன்) விட்டு பொறுப்பு விலகி விட்டார்கள்…. (9:3).

அல்லாஹ் பின்வருமாறு கட்டளையிடும் போது இந்த கருத்துப்பொருள் மேலும் ஆழமாக எடுத்துச் செல்லப்படுகிறது:

“இணை வைப்பவர்கள் அசுத்தமானவர்களே (நஜஸ்). எனவே, இந்த ஆண்டுக்குப் பிறகு அவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமை நெருங்க வேண்டாம்…” (9:28).

அன்று முதலே, இவ்வாறு மக்காவின் எல்லைகளுக்குள் இணை வைப்பவர்களுக்கு நுழைவு மறுக்கும் தடை தொடர்ந்து வருகிறது. இவ்வாறிருக்க, சவூதுக் குடும்பமோ, இந்த குர்ஆனிய விதியையும் அப்பட்டமாக மீறியுள்ளது. மக்காவுக்கான மாநகர வடிவமைப்பு பெருந்திட்டம் அமெரிக்காவின் போர்ட்லாந்தில் (ஆரிகான்) உள்ள போர்ட்லாந்து மாகாண பல்கலை கழகத்தின் நகர்ப்புற திட்டமிடல் துறையிடமே ஒப்பந்தத்துக்கு விடப்பட்டுள்ளது. அத்துறைக்கு எகிப்திய முஸ்லிம் ஒருவரே தலைமை வகிக்கின்ற போதிலும், அவரது சகாக்களுள் பெரும்பாலானோர் முஸ்லிம் அல்லாதவர்களே. நன்கறியப்பட்ட ஸியோனிஸ்டும், இணைப் பேராசிரியருமான ஒருவரும் அதில் அடக்கம். அந்த ஸியோனிஸ்டு பேராசிரியர், கடந்த சில வருடங்களில் பலமுறை சவூதி அரேபியாவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் ‘கௌரவ முஸ்லிம்’ பட்டம் கொடுக்கப்பட்டு மக்காவினுள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், மெல்லிய ‘இஸ்லாமிய’ போர்வையின் கீழ், அமெரிக்க-பிரிட்டிஷ் கட்டுமான கம்பெனிகளையும் தொழில்முறை ஆலோசனை நிறுவனங்களையும் மக்கா-மதீனாவில், ஏன் மஸ்ஜித் அல்-ஹராமிலேயே கூட, செயல்பட சவூதிகள் அனுமதித்திருப்பது மூலம், குர்ஆனிய போதனைகளை அப்பட்டமாக அவமதித்துள்ளனர்.

சவூதுக் குடும்பம் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஹரமைனை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது முதல், (இரு புனிதத் தலங்களின் சேவகன் (‘ஃகாதிமுல் ஹரமைன்’) எனும் பட்டத்தை தனக்குத் தானே வழங்கிக்கொண்டது. தற்போதைய மன்னர் ஃபஹது சமீபத்தில் சூட்டிக்கொண்டது தான் இந்த ‘சேவகன்’ பட்டம். அவரது இஸ்லாத்துக்கு முரணான வாழ்க்கைப் பாணி —மது அருந்துதல், சூதாட்டம், விபச்சாரம் எனப் பலவும் வெளிச்சத்துக்கு வந்தன— பற்றிய விமர்சனம் அதிகரிப்பதாலும், அதன் விளைவாக அவரைச் சூழ்ந்துள்ள எதிர்மறை விளம்பரத்தாலுமே அவர் இதைச் செய்தார். கடந்த காலத்தில், ‘ஹரமைனின் காப்பாளர்கள்’ (‘ஹாஃபிழுல் ஹரமைன்’) என்றே அடுத்தடுத்து வந்த சவூதி மன்னர்கள் தங்களை அழைத்துக் கொண்டிருந்தனர். யார் புனிதத் தலங்களை காத்து பராமரிக்கவேண்டும் என்பது பற்றி திருக்குர்ஆன் தெளிவுபடக் கூறுகிறது:

எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு முறையாக தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றாரோ அத்தகையவரே இறை இல்லங்களை பராமரிப்பவராக (அவற்றின் ஊழியர்களாக) இருக்க முடியும்! அத்தகையோரே நேர்வழி நிற்பார்கள் என எதிர்பார்க்க முடியும். (9:18).

தற்போதைய மன்னர் உட்பட சவூதி மன்னர்கள் அனைவருமே நியமமாக தொழுகையை பேணி, ஸகாத்தை வழங்கி இன்னபிற வழிபாடுகளை செய்து வருகிறார்களென்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் ‘அல்லாஹ்வை தவிர வேறெவருக்கும் அஞ்சாதிருத்தல்’ என்ற நிபந்தனையை பூர்த்தி செய்வதில்லை.

பாகிஸ்தானியர், பங்களாதேஷியர், ஜோர்டானியர், மொராக்கோ நாட்டவர், இப்போது எகிப்தியர் என சவூதுக் குடும்பம் எப்போதும் தனது பாதுகாப்புக்கு வெளிநாட்டுக் கூலிப்படை சிப்பாகளையே சார்ந்திருக்கிறது.7 அதிலும் குறிப்பாக, மக்காவில் நிகழ்த்தப்பெற்ற படுகொலைக்குப் பிறகு, சவூதுக் குடும்பம் தனது பாதுகாப்புக்காக பெரும் படைப்பிரிவுகள் அடங்கிய எகிப்து மற்றும் மொராக்கோ துருப்புகளை கூலிக்கு அமர்த்தியுள்ளது.8 இந்த சவூதுக் குடும்பம், இன்று இஸ்லாத்தின் இரண்டு மிகப்பெரும் எதிரிகளான அமெரிக்கா மற்றும் ஸியோனிஸ்டுகளின் நலன்களுக்கு முழுமையாக அடிபணிந்து சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. இதனால், ஹரமைனை நிர்வகிப்பதற்கு சிறிதும் அருகதையற்றதாக ஆகிவிட்டுள்ளது. அமெரிக்காவும், அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலும் தான் இன்று குஃப்ரு சக்திகளின் பிரதிநிதிகளாக விளங்குகின்றன. அவையிரண்டும் தான், உலக அரங்கில் இஸ்லாமிய மீளெழுச்சியின் எவ்வித வெளிப்பாட்டையும் முறியடிக்கப் போவதாக பகிரங்கமாக சூளுரைத்திருக்கின்றன.

இன்னும் தெளிவாகச் சோன்னால், உலக அளவில் இஸ்லாமிய இயக்கத்துக்கு எதிராக அணிசேர்ந்திருக்கும் அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், பிரான்சு, சோவியத் யூனியன், இந்தியா, சீனா முதலான குஃப்ரு சக்தியின் பிரதிநிதிகள் தங்களது இஸ்லாமிய எதிர்ப்பு சிலுவை யுத்தத்தை நடத்துவதற்கு கூட்டாளிகளாக சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, குவைத், ஈராக், பாகிஸ்தான், இந்தோனீசியா போன்ற முஸ்லிம் உலக அரசுகளுடன் கைகோர்த்துள்ளன. இந்த இஸ்லாமிய எதிர்ப்பு சிலுவை யுத்தத்தில் சவூதுக் குடும்பமே முன்னணியில் நிற்கிறது —தனது பொருளாதார வளங்களை பயன்படுத்துவதிலும் சரி; அமெரிக்காவின் இராணுவ, அரசியல், பொருளாதார நலன்களுக்கு முழுமையாக அடிபணிந்து சேவையாற்றுவதிலும் சரி— சவூதுக் குடும்பம் வெளிப்படுத்திவரும் இத்தகு நடத்தை குறித்த குர்ஆனின் கண்டனம் மிகத் தெளிவாக உள்ளது: “அவர்களிடம் கூறுவீராக, ‘அல்லாஹ்வை விடுத்து, உங்களுக்கு இழப்பையோ, லாபத்தையோ அளிப்பதற்கு சக்தியற்றதற்கா நீங்கள் பணிவிடை செய்கிறீர்கள்?”(5:76).

முஸ்லிம்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் (இன்றைய மொழியில் சொல்வதென்றால் ஸியோனிஸ்டுகளையும் ஏகாதிபத்தியவாதிகளையுமே இது குறிக்கும் —மொழிபெயர்ப்பாளர்) தங்களது பாதுகாப்பு நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டாம் எனக் கூறி அதை குர்ஆன் மிகத் தெளிவாகத் தடைசெய்துள்ளது (5:51). மேலும், உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்கள் மற்றும் நிராகரிப்பவர்களுள் (காஃபிரூன்) எவர்கள் உங்களுடைய மார்க்கத்தை கேலிக்கும், விளையாட்டுக்கும் உட்படுத்துகிறார்களோ அவர்களை “உங்களது உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” எனவும் அது முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டிருக்கிறது (5:57). ஏன்?… ஏனெனில், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

திண்ணமாக, மரியமுடைய குமாரர் மசீஹ் தான் அல்லாஹ் எனக் கூறுபவர்கள் சந்தேகமின்றி நிராகரித்தவர்களாகி விட்டார்கள். உண்மையில் மசீஹ் இப்படித்தான் கூறியிருந்தார்: ‘இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!’ எவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறாரோ, திண்ணமாக அல்லாஹ் அவருக்குச் சுவனத்தைத் தடைசெய்திருக்கிறான். அவருடைய இருப்பிடம் நரகமாகும். ஆம், அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. ‘நிச்சயமாக, அல்லாஹ் மூவரில் மூன்றாமவன்’ என்று கூறியவர்களும் திண்ணமாக நிராகரிப்பவர்களாகி விட்டார்கள். உண்மையில் ஒரே இறைவனைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை (5:72-73).

மேற்கண்ட வசனங்களிலிருந்து, எவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறார்களோ அவர்கள் ஷிர்க் வைக்கின்றனர் என்பதையும், அதனால் நிராகரிப்பவர்களாகி விடுகின்றனர் என்பதையும் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இன்று தங்களை யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் பெரும்பாலான மக்கள் இந்த வகைப்பாட்டிலேயே அடங்குவர். அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கின்றனர்; அல்லாஹ்வின் தீனை (இஸ்லாம்) கேலிக்குரியதாக ஆக்குகின்றனர்; அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எதிராக கலகம் செய்து முஸ்லிம்கள் மீது கடும் பகைமை காட்டுகின்றனர்.

எனினும், இதுவெல்லாம் எதிர்பார்க்க வேண்டிய விடயம்தான். ஏனெனில், அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவே இறை நம்பிக்கையாளர்களுக்கு பின்வரும் எச்சரிக்கையை குர்ஆனில் வழங்கியிருக்கின்றான்: “திண்ணமாக, மனிதர்களிலேயே யூதர்கள் (என்பதாக தங்களை நம்பிக்கொள்பவர்கள்) மற்றும் இணைவைப்பவர்கள் தான் இறைநம்பிக்கையாளர்களுக்கு மிகக் கடும் பகைவர்களாக இருப்பதை நீர் காண்பீர்…” (5:82). உண்மையில், அவர்களது பகைமை முஸ்லிம்களோடு மட்டும் நின்று விடுவதில்லை. அல்லாஹ்வுக்கும் அவர்கள் பகைவர்கள்தான். காரணம், அவர்கள் அல்லாஹ்வை நம்ப மறுக்கின்றனர்; பூமியில் சீர்கேட்டை பரப்புகின்றனர்; மற்றும், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றனர். ஆதலாலேயே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டோரே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்…” (60:1).

இவ்வாறிருக்க, நாம் சவூதுக் குடும்பத்தின் —குறிப்பாக, தற்போதைய ஆட்சியாளர் ஃபஹதின் தலைமையிலுள்ள அக்குடும்பத்தின்— சரித்திர பதிவேட்டை ஆய்வு செய்யும்போது, அது குஃப்ரு சக்திகளோடு நெருங்கி அணி சேர்ந்திருப்பதையும் அல்லாஹ்வின் எதிரிகளுக்காக உழைத்து வருவதையும் காண்கிறோம். இன்று மேற்கத்திய ஊடகத்தில் இஸ்லாமும், முஸ்லிம்களும் வழமையாகவே ஏளனம் செயப்பட்டு வருகின்றனர். இஸ்லாத்தின் உயர்வுக்காகவும், அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் உழைக்கின்ற முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது விரோதம் குறித்து வெள்ளை மாளிகைத் தலைவரும் அவரது நிர்வாகமும் இரகசியம் காப்பதில்லை. எனினும், ‘ஹரமைனின் பாதுகாவலர்கள்’ என சுய பட்டம் சூட்டிக்கொண்டுள்ள இவர்களுக்கு அதில் தவறேதும் தெரிவதில்லை. அது மட்டுமல்ல, அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இஸ்லாத்தை முன்னிறுத்தவும் இவர்கள் கடினமாக உழைக்கின்றனர். மேலும், ஹஜ்ஜை அதன் அசல்நிலைக்கு மீட்டுக் காண விரும்பும் முஸ்லிம்களை —ஹஜ் என்பது உம்மத்தின் வருடாந்திர சம்மேளனமாக விளங்கி, அங்கு நிர்பந்தமோ அச்சமோ அற்றதொரு சூழலில் அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்பட வேண்டும் என விரும்பும் முஸ்லிம்களை— தாக்கவும், கொலை செய்யவும் முனைந்துள்ளனர்.

‘ஹரமைனின் பாதுகாவலர்கள்’ என்ற தங்களது பட்டம் குறித்து தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் மீதான அல்லாஹ்வின் கண்டனம், அன்று இறைத்தூதர் —அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!— காலத்து குறைஷியர்களுக்கு பொருந்துவது போன்றே, இன்று சவூதுக் குடும்பத்துக்கும் பொருந்தும். சவூதுக் குடும்பம், குறிப்பிட்ட சில இடங்களில் யாத்திரிகர்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வருவதை பெரிதாக விளம்பரம் செய்கிறது. ஆனால், வழங்கப்படாத பல சேவைகளுக்காக தாங்கள் யானை விலை கட்டணம் வசூலிப்பது பற்றி மூச்சும் விடுவதில்லை. அந்த காலத்தில் யாத்திரிகர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வந்தது குறித்து குறைஷியர்கள் மிகுந்த கர்வம் கொண்டிருந்தனர். ஆனால், தங்களது ஷிர்க்கான வழிமுறைகளை கைவிட மறுத்தனர். இவர்களை நோக்கி பின்வரும் குர்ஆனிய வசனங்கள் கூறுவதை கேளுங்கள்:

ஹாஜிகளுக்கு தண்ணீர் புகட்டுவதையும், மஸ்ஜித் அல்-ஹராமை நிர்வகித்துப் பராமரிப்பதையும், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போராடும் ஒருவருக்கு (அவரது அந்தஸ்துக்கு) சமமாக கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் பார்வையில் இவையிரண்டும் சமமாக மாட்டா. அல்லாஹ் அநியாயக்கார சமூகத்துக்கு (ழாலிமீன்) நேர்வழி காட்டுவதில்லை. எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி, தங்களது உடமைகளை கொண்டும் உயிர்களை கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடியுள்ளார்களோ அவர்களே அல்லாஹ்வின் பார்வையில் மிக்க மேலானவர்கள்… (9:19-20).

இது குறைஷிய கர்வத்துக்கு பொருந்தும் அளவே சவூதுக் குடும்பத்தின் நடத்தைக்கும் பொருந்தும். ஆக, சவூதிகளும் அவர்களது உலகளாவிய அனுதாபிகளின் வலைப்பின்னலும், ஹரமைனின் கட்டுப்பாட்டை பயன்படுத்தி சவூதுக் குடும்பத்துக்கு அங்கீகார நியாயம் வழங்க முனைந்துள்ள அதேவேளை, அல்லாஹ்வின் தீர்ப்போ முற்றிலும் வேறுவிதமாக அமைந்துள்ளது.

சவூதுக் குடும்பம் மக்காவில் வைத்து ஹாஜிகளை படுகொலை செய்த விதமே, அறிந்து செய்த ஒரு புனிதக்கேடுதான். அவர்கள் அதனைச் செய்தது மூலம் ஹாஜிகளின் பாதுகாப்பான சூழலை நாசமாக்கியது மட்டுமின்றி, ஹரமின் புனிதத்தையும் இழிவுபடுத்தி விட்டனர். பாதுகாப்பு, புனிதத்துவம் இரண்டும் குர்ஆனியக் கட்டளைகளாகும். சவூதுக் குடும்பம் கடந்த காலத்தில் மக்கா, மதீனாவிலிருந்த புனிதத் தலங்களை இழிவுபடுத்திய மற்றும் இடித்துத் தரைமட்டமாக்கிய கொடுஞ்செயல்களுக்குப் பின்பும் குற்றச்சாட்டின்றி தப்பித்துக்கொண்டது போலவே, இம்முறையும் தப்பித்துக் கொள்ளுமா? ஒருவிதத்தில், சென்ற ஆண்டு ஹஜ்ஜின் போது சவூதுக் குடும்பம் இழைத்த கொடுங்குற்றத்திற்கான பொறுப்பில் உம்மத்துக்கும் பங்கு உண்டு. இந்த உம்மத் ஹரமைன் மீதான சவூதிக் கட்டுப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியும்; வரலாற்றுத் தலங்களின் புனிதத்துக்கு அவர்கள் ஏற்படுத்திய இழிவை எதிர்த்தும்; 1979 நவம்பர்-டிசம்பரில் மஸ்ஜித் அல்-ஹராம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை (அடுத்த அத்தியாயத்தில் பார்க்கவும்.) கண்டித்தும் போராடியிருந்தால், அநேகமாக சவூதுக் குடும்பத்துக்கு இத்தகையதொரு கொடுங்குற்றத்தை புரிந்திட துணிவு பிறந்திருக்காது.

சவூதுக் குடும்பத்தின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் உம்மத்துக்கு விடப்படும் பகிரங்க சவால்களாக விளங்குகின்றன. அவர்களின் கரங்களிலிருந்து ஹரமைனின் கட்டுப்பாட்டை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், மஸ்ஜித் அல்-அக்ஸாவை ஒத்த பேரபாயம் காத்திருக்கிறது. அதாவது, இஸ்லாத்தின் இரு மேலான புனிதத்தலங்கள் மீதுள்ள நேரடிக் கட்டுப்பாட்டையும் முஸ்லிம்கள் இழக்கும் சாத்தியம் இருக்கிறது.

குறிப்புகள்

1. கான், மஜீத் அலீ. பக்திமிகு கலீஃபாக்கள் (ஆங்.), இஸ்லாமிக் புக் பப்ளிஷர்ஸ், குவைத், 1982. பக்.69.

2. ஸஃபருல் இஸ்லாம் கான் – யாகூப் ஸகீ (பதி.). ஹஜ்: ஒரு சிறப்புப் பார்வை (ஆங்.), தி ஓபன் பிரஸ், டொராண்டோ, லண்டன், 1986. பக்.77-79.

3. ஃபஸ்லுர் ரஹ்மான். இஸ்லாம் (ஆங்.), எ டபுள்டே ஆன்கர் புக், நியூயார்க், 1968. பக். 25-251. இதைவிட வருணனை மிகுந்த சரித்திரத்துக்கு பார்க்க, ஆபாத் ஷாபூரி, சையத் பாதுஷா கா கஃபிலா (மாபெரும் சையதின் பயணக் கூட்டம்) (உருது),, மக்தபே திக்ரா, ராம்பூர், இந்தியா, 1986.

4. மேலது, பக்.251.

5. கிரசண்ட் இன்டர்நேஷனல் (ஆங்.), தொ.16, எண்.8, டொராண்டோ, ஜூலை 1-15, 1987.

6. ஃபஸ்லுர் ரஹ்மான். இஸ்லாம் (ஆங்.), எ டபுள்டே ஆன்கர் புக், நியூயார்க், 1968. பக். 254-257.

7. தி இண்டிபென்டன்ட் (ஆங்.), லண்டன், டிசம்பர் 12, 1987 – ஜனவரி 2, 1988.

8. கிரசண்ட் இன்டர்நேஷனல் (ஆங்.), தொ.16, எண்.14, டொராண்டோ, அக்டோபர் 1-15, 1987.

Related posts

Leave a Comment