கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமும் மதச்சார்பற்ற கல்விமுறையும் – ஜாஸிர் அவ்தா

மார்ச் 12 அன்று திருச்சி அஸ்ஸலாம் கல்லூரியில் எஸ்ஐஓ நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் அறிஞர் ஜாஸிர் அவ்தா ஆற்றிய உரையின் சுருக்கம்.

புதிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்ள உங்களுடைய இந்த வயதுதான் சரியானது என்று நம்புகிறேன். முற்காலத்தில் இஸ்லாத்தைத் தம் தோள்களில் சுமந்த பல சஹாபாக்கள் பதின்ம வயதுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள். அலி, அர்கம், முஸ்அப் பின் உமைர், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) போன்றோர் இதற்கு சில உதாரணங்கள். அவர்கள் உலகையே மாற்றியமைப்பதற்கான பார்வையைக் கொண்டிருந்ததோடு, உலகின் போக்கை மாற்றியமைக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு.

அந்த வகையில் உங்களின் முன்பு, மகாஸிதுஷ்ஷரீஆ குறித்துப் பேசுவதை என் கடமையாக உணர்கிறேன். அது இஸ்லாமியச் சிந்தனையின் ஒரு கிளை மட்டுமின்றி, அது இஸ்லாம் குறித்ததொரு புதிய பார்வை. அதை உள்வாங்கிக்கொள்வதற்கு நாம் இஸ்லாம் அல்லாத சிந்தனைமுறைகளிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். இஸ்லாத்துக்காகப் பணியாற்றுவோர் மதச்சார்பற்ற அணுகுமுறையைக் கைக்கொள்வது இஸ்லாத்துக்குப் பயனளிக்காது.

ஏனெனில், ஐம்புலன்களுக்குப் புலப்படும் பெளதீக யதார்த்தம் (material reality) மட்டுமே உண்மையானது என்று வாதிடுவது மதச்சார்பின்மைவாதக் கண்ணோட்டமாகும். புலன்களுக்கு எட்டாத எதன் இருப்பையும் அது அங்கீகரிப்பதில்லை. இஸ்லாம் போன்ற சமயங்களை அது பெளதீக அதீதம் (Metaphysics), இறையியல்கள், பழங்கதைகள் என்றே வரையறுக்கிறது. நாம் இந்தக் கண்ணோட்டத்தை வரித்துக்கொண்டு இஸ்லாத்துக்குப் பணியாற்றுவது சாத்தியமற்ற ஒன்று. ஆனால், முஸ்லிம் சமூகங்களில் இந்தப் பிழையான பார்வை பரவலாக உள்ளது.

அநேகர் தீனையும் துன்யாவையும் வேறுபடுத்திப் பார்க்கும் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தீன் என்றால் தொழுகை, ஸஜாத், ஹஜ், நோன்பு போன்றவற்றைக் கடைப்பிடிப்பது. அதைத் தாண்டி, ஹலால் உணவை உண்பது, வட்டியைத் தவிர்ப்பது, திருமணம் விஷயத்தில் இஸ்லாமியச் சட்டத்தைப் பேணுவது ஆகியவைதாம்.

அரசியல் என்று வரும்போது அவர்கள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தை மறந்து, மதச்சார்பற்ற நோக்கில் அதைச் சிந்திக்கிறார்கள். வாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவிய மார்க்கமாக அவர்கள் இஸ்லாத்தை அணுகுவதில்லை.

அரசியல், சமூகவியல், பொருளியல், கட்டடக்கலை முதலான யாவும் இன்று மதச்சார்பற்ற கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே கற்பிக்கப்படுகின்றன. எனவேதான் இந்தத் துறைகளெல்லாம் இஸ்லாமியச் சட்டவியலுக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்டு வருகிறது. இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில்கூட ஜனநாயகம், முதலாளியம் போன்ற மதிப்பீடுகளின்படியே கல்வி புகட்டப்படுகிறது. நாம் புரிந்துகொள்ள வேண்டியது, இஸ்லாம் வேறு, முதலாளியமும் பொதுவுடைவாதமும் வேறு. இஸ்லாம் முன்வைப்பது ஜனநாயகமும் அல்ல, சர்வாதிகாரமும் அல்ல. இஸ்லாத்துக்கென்று தனித்துவமான கண்ணோட்டம் இருக்கிறது என்பதையே.

பொருளியலை எடுத்துக்கொண்டால், பணத்தை, வளர்ச்சியை இஸ்லாம் அதற்கே உரிய பாணியில் வரையறுக்கிறது. அரசியலில் ஷூரா எனும் கருத்தாக்கத்தை இஸ்லாம் முன்வைக்கிறது. ஷூரா முறை வேறு, வாக்களிக்கும் முறை வேறு என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

சமகால ஜனநாயக நடைமுறை, பொருளாதாரக் கொள்கைகள், நவீனத்துவ கட்டடக்கலை, நவீன மருத்துவமுறை, கலை உள்ளிட்ட பல்வேறு தளங்களை இஸ்லாம் விமர்சனப்பூர்வமாய் அணுகுகிறது. இந்தத் துறைகள் எதுவும் இஸ்லாமியச் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. அதற்கு உட்பட்டதுதான். ஏனெனில், விழுமியங்கள், தத்துவங்களை அடிப்படையாகக் கொள்ளாமல் எந்தத் துறையும் இயங்க முடியாது. உதாரணத்துக்கு, சமூக ஊடகச் செயலியையோ செயற்கை நுண்ணறிவுத் தளங்களையோ நீங்கள் உருவாக்குவதாகக் கொள்வோம். அதை உருவாக்கவும் ஒரு தத்துவார்த்த அடிப்படை, விழுமியம் தேவைப்படும் இல்லையா? எந்தச் சார்பும் இல்லாமல் அதை உருவாக்க முடியாது அல்லவா?

வாழ்வியல் விவகாரங்களை நாம் தீன் – துன்யா என வேறுபடுத்திப் பார்ப்பதும், மதச்சார்பின்மைவாதக் கண்ணோட்டத்தில் கல்வியைக் கற்பதும் இன்றைக்கு ஒரு பிரச்னைக்குரிய போக்காக மேலெழுந்துள்ளது. அது இஸ்லாமிய மார்க்கத்தை பொது விவகாரங்களிலிருந்து விலக்கி நிறுத்துவதாக அமைந்துள்ளது.

பிரிட்டீஷ், பிரஞ்சு, இத்தாலி, டச்சு, ரஷ்யா முதலான நாடுகளின் பிடியில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் சிக்கியிருந்த நிலையில், இந்தக் காலனிய சக்திகள் நம் சிந்தனைமுறையை மாற்றியமைப்பதில் வெற்றிபெற்றிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான், நமது இஸ்லாமியச் சிந்தனைமுறை மதச்சார்பற்ற சிந்தனைமுறையாக உருமாற்றப்பட்டிருக்கிறது. கல்வியும், கல்விப்புல ஆய்வுகளும் மதச்சார்பற்றதாகவும், சந்தையை மையப்படுத்தியதாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் காலனியத்துக்கு முன்பு கல்வி இஸ்லாமியப்பட்டிருந்தது. மதரசாக்கள் வெறுமனே இஸ்லாமியச் சட்டவியலை மட்டும் கற்பிக்காமல், மருத்துவம், வானியல், வேதியியல், விலங்கியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்தையும் அவை கற்பித்து வந்தன. பாக்தாதில் பைத்துல் ஹிக்மா இருந்ததுபோலவே வட ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பிற பகுதிகளிலும் ஆய்வு மையங்களை முஸ்லிம்கள் நிறுவியிருந்தனர். நான் அங்குள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு ஃபிக்ஹு, தஃப்சீர் நூல்களைத் தாண்டி பல்வேறு துறைசார் ஆய்வு நூல்கள் காணப்படுகின்றன.

நான் தங்களிடம் பேச நினைத்தது, ஃபிக்ஹு துறையை நாம் இன்னும் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும் என்பது குறித்தே. வணக்க வழிபாடுகள் சார்ந்த சட்டங்கள், குடும்பவியல் சட்டங்கள் ஆகிய முக்கியமான விஷயங்கள் ஃபிக்ஹு எனும் வகைப்பாட்டுக்குள் வருவதுதான் என்றாலும், அவை மட்டுமே ஃபிக்ஹு அல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியல், பொருளியல், சட்டம், தத்துவம், சர்வதேச உறவுகள் போன்ற இன்னபிற துறைகளும் அந்த வகைமைக்குள் உள்ளடங்குவதுதான்.

அறபியிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள எனது மகாஸித் முறையியல் பற்றிய நூலை நீங்கள் வாசிக்கலாம். அந்த முறையியல் இஸ்லாத்தின் மூலாதார நூலான குர்ஆனை அடிபடையாகக் கொண்டது. குர்ஆனை ஆழ்ந்து வாசிக்கும் எவரும் மதச்சார்பின்மைவாதியாக இருக்க மாட்டார். ஏனெனில் குர்ஆன் அரசியல், வரலாறு, இயற்கை, மறுமை வாழ்வு என சகலத்தையும் குறித்துப் பேசுகிறது. குர்ஆனை வெறுமனே மனனம் செய்யாமல், அதை முறையாகப் புரிந்துகொண்டால் உலகம் பற்றிய நம் கண்ணோட்டத்தை அது மாற்றியமைத்துவிடும். நீங்கள் யதார்த்தத்தை விளங்குவதற்கு அது சரியான அணுகுமுறையை உங்களுக்கு வழங்கும்.

ஆனால் மதச்சார்பற்ற கல்வி நம் வாழ்விலிருந்து இஸ்லாத்தைத் துண்டிக்கிறது. குறிப்பிட்ட சில சட்டதிட்டங்களைக் கொண்டதாக இஸ்லாமியக் கல்வியை சுருக்குகிறது. நாம் இஸ்லாமியக் கல்வியை மதச்சார்பின்மைவாத நோக்கில் வரையறுப்பதைத் தவிர்க்க வேண்டியுள்ளது. அவ்வாறு செய்வதால் மதச்சார்பற்ற அமைப்புமுறைகள்தாம் பலப்படுத்தப்படுகின்றன. நம் அணுகுமுறையை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அமைத்துக்கொள்ளாமல் இருப்பது முதலாளியத்தையும், அநீதியான அரசியல் முறைகளையும் வளர்க்கவே உதவுகிறது.

ஒரு கருவியை, ஒரு செயலியை உருவாக்குகிறோம் அல்லது ஒரு நகரத்தை உருவாக்குகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். அதை எந்த விழுமியத்தின், மதிப்பீட்டின் அடிப்படையில், எந்த நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லையா? அங்குதான் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அவசியம் மேலெழுகிறது. சமூக ஊடகம் கோலோச்சும் தற்காலத்தில் எது உண்மை (truth) என்றால், எதற்கு பிரபல்யமும், பரவலான ஏற்பும் இருக்கிறதோ அதுதான். இந்தக் கண்ணோட்டம் சரியா? குர்ஆன் கூறுகிறது: “(நபியே!) உம்மை மனிதர்கள் அனைவருக்கும் நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அன்றி நாம் அனுப்பவில்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டார்கள்” (34:28). இஸ்லாத்தைப் பொருத்தவரை, உண்மைக்கு பெரும்பான்மை ஏற்பு ஓர் அளவுகோல் அல்ல என்பது தெளிவு. ஆனால், தற்கால சமூக ஊடகம் இஸ்லாமிய மதிப்பீட்டின்படி இயங்கவில்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இஸ்லாத்துக்கென்று தனித்துவமான அறிவுசார் அடித்தளம் இருக்கிறது. அது அல்லாஹ்வின் வேதத்தையும், நபிகளாரின் வழிமுறையையும் அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாத்தை தனிநபர் வழிபாடாகவும் சடங்காகவும் சுருக்கும் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தை விட்டும், காலனியம் வகுத்தளித்த சிந்தனைமுறையை விட்டும் நாம் விடுபடாதவரை இஸ்லாத்துக்கு நம்மால் பணியாற்ற முடியாது என்பது திண்ணம்.

(எழுத்தாக்கம்: அபூ அம்ரா)

Related posts

Leave a Comment