மாணவச் செயற்பாட்டாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான ஷர்ஜீல் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராகப் போராடியதற்காக ஜனவரி 2020ல் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இன்றுடன் மூன்று வருடங்களை நிறைவுசெய்கிறார். திகார் சிறையிலிருக்கும் ஷர்ஜீல் இமாம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே
பெரும்பான்மையின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவது, கருத்தொருமிப்பின் அடிப்படையில் உருவான அரசியல் சட்டத்தின் ஆளுகை (Constitutional Governance) முதலியவற்றை நாம் ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகள் என்கிறோம். இவை ஒவ்வொன்றுமே ஆழமான பல தத்துவார்த்தப் பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளன.
”பெரும்பான்மை” எனும்போது அதன் மறுதலையாக ”சிறுபான்மை” ஒன்று இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தில் அந்தச் சிறுபான்மையின் பங்கு என்ன? பெரும்பான்மையின் ஆட்சி என்கிறபோது ”பெரும்பான்மை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது” (Majority Takes All) என்ற பொருள் வந்துவிடுகிறது. அப்படி ஆகும்போது அது ஜனநாயகம் என்பதாகவன்றி ஜெஃபர்சன் சொல்வதுபோல ”கும்பலாட்சி” (Mob Rule) ஆகிவிடுகிறது. பெரும்பான்மையின் ஆட்சி என்றால் 51 பேர் 49 பேர்களை ஒடுக்குவதுதானே என்றார் அவர். ஆக, ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையினரும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துகளைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும், அதைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்குமான முழு வாய்ப்பும் அளிக்கப்படுவதுதான் ஜனநாயகம்.
இத்தனை திரளான மக்கள் கூட்டம் கூடிக்கலைந்த பின்னும் நம்முடைய நிகழ்ச்சிநிரல் என்ன மாற்றமடைந்திருக்கிறது? ஒடுக்குமுறைக்கு எதிராக களம்கண்ட இத்தனை லட்சம் இளைஞர்களின் அடிப்படை அறத்தை நாம் என்ன செய்யப் போகிறோம்? நேர்மையான சமூகத்தின்பால், அறத்தின்பாற்பட்ட அரசியலின் பால் அவர்களை செலுத்த நம்மிடமுள்ள திட்டங்களும், செயல்பாடுகளும் என்னென்ன?