கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்

பேராசிரியர் வாயில் ஹல்லாக்கின் ‘Shariah : Theory, Practice and Transformations‘ நூல் மீதான வாசிப்பு

பேராசிரியர் வாயில் ஹல்லாக் ஃபலஸ்தீனைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது அமெரிக்காவில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியச் சட்டப்பாரம்பரியம் மற்றும் அதன் முறையியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இஸ்லாமிய ஃபிக்ஹ் (சட்டவியல்) சிந்தனையின் பின்புலத் தத்துவம், தோற்றம், வளர்ச்சிக் கட்டங்கள், தொழிற்பாட்டு முறைகள், அதைக் கோட்பாட்டாக்கம் செய்தல் ஆகியவை அவருடைய ஆய்வுப் புலங்களாகும்.

இஸ்லாமிய ஃபிக்ஹ் சிந்தனை தொடர்பான அவருடைய ஆக்கங்கள் சர்வதேச ரீதியாக நீண்ட உரையாடலுக்கு வழியமைத்தவை. அதற்கான காரணம் என்னவெனில், இஸ்லாமிய ஃபிக்ஹ் சிந்தனையின் மீது கீழைத்தேயவாதிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவரின் ஆக்கங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டன. இஸ்லாமிய ஃபிக்ஹ் பாரம்பரியத்துடன் மூன்று தசாப்த காலமாய் நெருக்கமாக உரையாடி வருபவர் பேராசிரியர் ஹல்லாக். அந்த அனுபவத்திலிருந்து பெற்ற அறுவடையையே தனது ‘ஷரீஆ: கோட்பாடு, நடைமுறை மற்றும் நிலைமாற்றங்கள்’ நூலின் வழியாக அவர் முன்வைக்கிறார்.

இரண்டு பிரதான கேள்விகளுக்கான விடையைத் தேடிச் செல்கிறது அவருடைய இந்த ஆக்கம். அதிலொன்று, நவீனத்திற்கு முந்தைய இஸ்லாமிய உலகில் ஷரீஆவின் இயங்கியல் எவ்வாறு காணப்பட்டது என்பதாகும். மற்றொன்று, காலனியத்தின் வருகையுடன் ஷரீஆவின் தொழிற்பாடும், இயங்குதளமும், அது குறித்த சிந்திப்பும் எவ்வாறு நிலைமாற்றம் அடைந்தன, அதன் பரிமாணங்கள் யாவை என்பனவாகும். இந்த அடிப்படைகளில் நூலின் பிரதான விவாதங்களை சுருக்கமாக முன்வைப்பதற்கு இக்கட்டுரை முயல்கிறது.

1. ஃபத்வாக்களும் நீதிமன்றத் தீர்ப்புகளும்

காலனியத்திற்கு முந்தைய இஸ்லாமிய ஃபிக்ஹ் பாரம்பரியம் என்பது முஸ்லிம் சமூகத்தின் உற்பத்தியாகும். முஸ்லிம் சமூகம் தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆரம்பித்த சமூக உரையாடலின் விளைவுதான் அது. இதன் பொருள் என்னவென்றால், அரசுடைய செயல்திட்டங்களின் அடிப்படையிலோ அல்லது அதன் பலத்தின் துணையுடனோ அதன் நிழலிலோ அது வளர்ச்சியடைவில்லை என்பதே. இதுதான் நூலின் முதல் பாகம் விவாதிக்கும் அம்சத்தின் சுருக்கம்.

மேற்கூறிய அவதானத்தை நிறுவுவதற்குத் துணைசெய்யுமொரு நுணுக்கமான வரலாற்றுக் குறிப்பைச் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் ஹல்லாக். இஸ்லாமிய வரலாற்றில் சமூக ரீதியாக ஃபத்வாக்கள் முக்கியத்துவம் பெற்றிருந்த அளவுக்கு, நீதிமன்றத் தீர்ப்புகள் (கழா) பேசுபொருளாக இருக்கவில்லை என்பதுதான் அது. ஃபத்வாக்கள் தொகுக்கப்பட்டதுபோல் நீதிபதிகளின் தீர்ப்புகள் தொகுக்கப்படவில்லை. ஃபத்வாக்கள் சமூக ரீதியான உரையாடலுக்கும் விவாதத்துக்கும் உட்படுத்தப்பட்டன. பின்பு, சட்டச் சிந்தனையாளர்களின் மாணவர்கள் அதை விரிவுபடுத்தவும், விமர்சனம் செய்யவும், கோட்பாட்டாக்கம் செய்யவும் தலைப்பட்டனர். மேலும், தங்கள் மாணவர்களுக்கு அதைக் கற்பிக்கவும் செய்தனர்.

குறிப்பிட்டவொரு சமூக அல்லது தனிப்பட்ட பிரச்னைக்கான இஸ்லாமியச் சட்டம் என்ன என்பது பற்றிய ஒரு சட்டச் சிந்தனையாளரின் (ஃபகீஹ்) தனிப்பட்ட நிலைப்பாடே ஃபத்வாவாகும். ஆனால், அதை வெறுமனே அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு என்று உதாசீனப்படுத்தவும் முடியாது. ஏனெனில், சமூகம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னையை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதன் பின்புலங்களை அறிந்து, அதன் விளைவுகளை மதிப்பிட்டு, குறித்த சமூகத்தின் வாழ்வுப் போக்கை ஆராய்ந்து பார்த்து, மிக நுணுக்கமாக முன்வைக்கப்படும் இஸ்லாமியச் சட்ட முடிவு அது.

சமூகத்திற்கும் ஃபகீஹிற்கும் (சட்டவியலாளர்) இடையிலான தொடர்ச்சியான உரையாடல்களின் வழியாகவே ஃபத்வாக்கள் உருவாயின. நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின் வழங்கப்படும் தீர்ப்புகள் அல்ல ஃபத்வாக்கள். இவ்விரு பொறிமுறைகளின் இயல்புகளும் செயல்முறைகளும் வித்தியாசமானவை. மேலும், ஒவ்வொரு ஃபத்வாவின் பின்னாலும் ஃபகீஹிற்கும் சமூகத்திற்கும் இடையிலான உரையாடலும் விவாதமும் குறுக்கு விசாரணையும் இடம்பெற்றிருந்தன. இதையே இன்னொரு வகையில் சொன்னால், சமூகமும் ஃபகீஹூம் இணைந்துதான் ஃபத்வாக்களை உருவாக்கினர். ஏனெனில், ஃபகீஹைப் போன்றே அவரை விசாரணை செய்யும் சட்ட அறிவை சமூகமும் காத்திரமாகப் பெற்றிருந்தது. இந்தப் பொறிமுறைதான் இஸ்லாமிய வரலாற்றில் ஃபத்வாக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொடுத்தது. சமூக ரீதியான ஏற்பை வழங்கியது.

மேலும், இஸ்லாமியச் சட்டப் பாரம்பரியத்தில் பல்வேறு வித்தியாசமான நிலைப்பாடுகள் (Legal Pluralism) தோற்றம் பெறுவதற்கும் அதுவே காரணமானது. வெறுமனே, சட்ட மூலாதாரங்களின் ஆதாரங்களைப் புரிந்துகொள்வதில் மாறுபட்ட நிலைப்பாடுகள் எடுப்பது மட்டுமே இஸ்லாமியச் சட்டத்துறையின் செழுமையான பன்மைத்துவத்தைப் பிரசவிக்கவில்லை. மாறாக, இஸ்லாமியச் சட்டத்துறையின் உள்ளடக்கமும் இயங்கியலும் விவாதப் பொருள்களும் தன்னளவிலேயே சமூகத்தின் பல்வேறுபட்ட விவாதங்களை, விமர்சனங்களை, பங்கேற்பை உள்வாங்கிய நிலையில் கட்டியெழுப்பப்பட்டன. ஒவ்வொரு பிரச்னையையும் சட்ட அறிஞர்கள் தனித்துவமான ஒன்றாகவே கையாண்டார்கள். தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான நிலைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஃபகீஹூம் சமூகமும் இணைந்து பயணித்த பயணம்தான் இஸ்லாமிய ஃபிக்ஹ்ப் பாரம்பரியம் என்கிறார் பேராசிரியர் ஹல்லாக். இதனிடையே, இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அரச அதிகாரத்தின் மீது சார்ந்துதான் இஸ்லாமியச் சட்டப்பாரம்பரியம் வளர்ச்சியடைந்தது என்ற நவீன காலப் புரிதல்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் நூலாசிரியர்.

2. ஒரு சமூக நிறுவனமாக நீதித்துறை!

காலனியத்திற்கு முந்தைய இஸ்லாமிய உலகில் ஒரு சிவில் சமூக நிறுவனமாகவே நீதித்துறையும் (கழா) புரிந்துகொள்ளப்பட்டிருந்தது. சமூகத்தின் சகல விவகாரங்களுக்கும் தலைமை தாங்குபவராகவே நீதிபதி அறியப்பட்டார். அதேபோன்று, காலனியத்திற்கு முந்தைய இஸ்லாமிய உலகின் நீதித்துறையையும் இன்றுள்ள நீதித்துறையையும் ஒப்பீடுசெய்ய முடியாது என்பதும் பேராசிரியரின் மற்றொரு பிரதான வாதம். ஏனெனில், இவ்விரண்டின் பின்புலத் தத்துவங்களும் வித்தியாசமானவை என்கிறார் அவர்.

அன்று சமூகத்தின் பொதுச் சொத்துகள், கைவிடப்பட்ட அநாதைகள், வறுமையில் உழலும் மக்கள், தனிப்பட்ட/ குடும்பப் பிரச்னைகள், கொடுக்கல் வாங்கல்கள் என அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பை நீதிபதியிடமே (காழீ) சமூகம் ஒப்படைத்திருந்தது. எனவேதான், இஸ்லாமிய வரலாற்றில் நீதிபதிகளின் சமூகப் பாத்திரம் தொடர்பாகக் கூறும்போது, ‘சமூகத்தின் நலவாழ்வை மேற்பார்வை செய்யும் பொறுப்பில் நீதிபதி இருந்தார்’ என்று பேராசிரியர் ஹல்லாக் கூறுகிறார். அதாவது, சமூகநலனை முன்னுரிமைப்படுத்தி இயங்கும் சமூக நிர்வாகிகளாகவே நீதிபதிகள் கருதப்பட்டார்கள்.

நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின் தீர்ப்பு வழங்குதல் அவருடைய பல கடமைகளுள் ஒன்றே தவிர, அது மட்டுமே அவருடைய சமூகப் பிரசன்னமாக இருக்கவில்லை. இதனால்தான், நீதிமன்ற விசாரணைகளுக்கு வராமலேயே அதிகமான சமூகப் பிரச்னைகளைத் தனிப்பட்ட முறையில் நீதிபதி தீர்த்துவைக்கும் போக்கு அன்றைக்கு இருந்தது.

இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் கட்டமைப்புகளுக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்ட ஒரு நிறுவனமாக நீதித்துறை இருக்கவில்லை. நீதிபதிகள் அவ்வப்போது அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், நீதிபதிகள் சம்பளம் பெறும் அரசின் ஊழியர்கள் என்ற நிலை உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் இறுதிக் காலப் பிரிவில்தான் உருவானது. அதற்கு முன்பு பெரும்பாலும் நீதிபதிகள் தனது வாழ்வாதாரத் தேவைகளுக்காக வேறு சொந்தத் தொழில்கள் செய்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள்; அல்லது பொது மக்களின் வக்ஃப் சொத்துகளிலிருந்து பயன்பெற்றிருக்கிறார்கள்.

சமூக வாழ்வை வழிநடத்திய ஃபகீஹூம், காழியும் எவ்வாறு தமது பொறுப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டார்கள் என்பது பற்றி பேராசிரியர் ஹல்லாக் இவ்வாறு கூறுகிறார்: “சமூகத்தில் நீதிபதியாகச் செயல்படுபவர் பெரும்பாலும் அப்பிராந்திய சட்டச் சிந்தனையாளரின் மாணவராகவே இருந்தார்; அல்லது சட்டச் சிந்தனையாளரின் வகுப்புகளில் பங்கெடுப்பவராக இருந்தார். எனவே, வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் சட்டச் சிந்தனையாளருடன் நீதிபதி உரையாடிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. சிலபோது, நீதிபதி தன் மாணவர்களுடன் விவாதித்துதான் முடிவெடுப்பார்.

”இதன் விளைவாக, ஃபகீஹிடம் எதிர்பார்க்கப்படும் அதே அறிவுத் தகமை நீதிபதியிடமும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடமும் இருக்கவில்லை. ஏனெனில், மறைமுகமாக நீதிமன்றத் தீர்ப்புகளும்கூட சமூக விவாதத்திற்கு உட்பட்ட பிறகு வெளியிடப்படும் போக்குதான் நிலவியது. மறுபுறம், நீதிமன்றத் தீர்ப்புகள் என்பன வெறுமனே ‘தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்ற அடிப்படையில் வழங்கப்படுபவையல்ல. மாறாக சமூக நலன், சமூக ஒருமைப்பாடு, பொதுவாழ்வொழுங்கு போன்றவற்றைக் கருத்தில்கொண்ட நிலையில் அவை கையாளப்பட்டன.”

இஸ்லாமிய வரலாற்றில் சட்டச் சிந்தனைப் பாரம்பரியமும் நீதித்துறையும் எவ்வாறு இயங்கின என்பது குறித்த மிக முக்கியமானதொரு சமூகவியல் புரிதலை இவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னெவென்றால், இஸ்லாமியச் சட்டச் சிந்தனையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஃபகீஹ்கள் சமூகத்தின் மேல்மட்டத்தினராக இருக்கவில்லை என்பதாகும். அவர்கள் சமூகத்தின் அடிமட்ட மற்றும் நடுத்தர வகுப்பையே பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். எனவேதான், நீதிபதிகளையும் ஃபகீஹ்களையும் சமூகத்தின் பிரதிநிதிகளாகவே ஆட்சியாளர்களும் கருதினார்கள். அரசின் ஒரு பகுதியாக (State organ) அவர்களை அதிகாரச் சக்திகள் கருதவில்லை.

அவ்வப்போது முஸ்லிம் உலகை ஆட்சி செய்த அல்லது ஆக்கிரமித்த ஆட்சியாளர்களையும் சுல்தான்களையும் ஏற்றுக் கொள்வதற்கான அடிப்படை நிபந்தனையாக நீதித்துறையும், சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டப் பரப்பும் பொதுச் சமூகக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியிருந்தது. இன்னொரு வசனத்தில் சொன்னால், சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத் துறை பொதுமக்களின் சமூக அதிகாரத்திற்குட்பட்டதாகவே இருக்க வேண்டியிருந்தது.

இஸ்லாமிய வரலாற்றில் எந்தக் கட்டத்திலும் அதிகாரச் சக்திகளது கட்டுப்பாட்டில் இஸ்லாமியச் சட்டப்பரப்பு இருக்கவில்லை. எனவே, சுல்தான்களுக்கு எதிரான பலமான எதிர்ச் சக்தியாக பொதுச் சமூகத்திற்குத் தலைமைதாங்கிய ஃபகீஹூ பார்க்கப்பட்டார். ஒருவிதத்தில் உண்மையான ஜனநாயகம் அல்லது அதிகார சமநிலைப்படுத்தல் இங்குதான் நிலவியது எனலாம் என்கிறார் ஹல்லாக்.

எந்தவிதமான வெளித்தாக்கங்களும் இன்றி சுதந்திரமாகச் சமூகமும் ஃபகீஹூம் இணைந்து தனக்கான ஷரீஆவை உற்பத்தி செய்துகொண்டனர். ஆக, இஸ்லாமியச் சட்டம் என்பது சமூகத்தின் உருவாக்கம். அதுவொரு சமூகத் தொழிற்பாடு. இஸ்லாமிய ஃபிக்ஹ்ப் பாரம்பரியமானது சமூகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலோ, ஷரீஆவின் நிழலில் மக்களைப் பட்டை தீட்டவேண்டும் என்ற அடிப்படையிலோ நீதிமன்றத் தீர்ப்புகளாக அல்லது அரச ஆணைகளாக (State orders) முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல.

ஒருவேளை அவ்வாறு அரசு தனது அதிகாரத்தால் நடைமுறைப்படுத்தும் ஒன்றாக இஸ்லாமிய ஷரீஆ இருந்திருந்தால், இந்த அளவு பன்மைத்துவத்தையும் செறிவையும் ஆழமான விவாதங்களையும் கொண்டதாக இஸ்லாமியச் சட்டப் பாரம்பரியம் இருந்திருக்க முடியாது என்கிறார் பேராசிரியர் ஹல்லாக்.

இந்தப் பின்னணியில், இஸ்லாமியச் சட்டப் பாரம்பரியத்தையும் அதன் முறைமையையும் கற்பது பற்றி அவர் கூறும்போது: “பாரம்பரிய இஸ்லாமியச் சட்டத்தைக் கற்றல் என்பது வரலாற்றில் ஃபுகஹாக்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்புகளைக் கற்பதன்று. மாறாக, ஒவ்வொரு புத்தகமும் அக்காலச் சமூகத்தின் வாழ்வியல் வெளிப்பாடுகளாகும். அதாவது, ஓவ்வொரு சட்டநிலைப்பாடும் சமூகத்திற்கும் அதன் சட்டச் சிந்தனையாளருக்கும் இடையில் பல மணிநேரங்கள் அல்லது பல நாட்கள் இடம்பெற்ற விவாதங்களின் இறுதி வடிவமாகும்.

“அது மட்டுமன்றி, அக்காலப்பிரிவில் வாழ்ந்த சூஃபிகள், தத்துவவியலாளர்கள், தர்க்கவியலாளர்கள், சமூகவியலாளர்கள் போன்றோரின் கேள்விகளும் விமர்சனங்களும் உரையாடல்களும் இணைந்துதான் இஸ்லாமியச் சட்டப் பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கின்றன.

“எனவே, இஸ்லாமியச் சட்டப் பாரம்பரியத்தைக் கற்பதென்பது அன்றைய சமூகங்கள் எவ்வாறு வாழ்ந்தன, அவர்களுடைய பொருளாதார, சமூக, குடும்ப உறவுகள் எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டிருந்தன, அக்காலத்தில் சமூகப் பிரச்னைகள் எவ்வாறு தோற்றம்பெற்றன, அதன் மூலங்கள் எவை, அரச அதிகாரத்தின் எல்லை என்ன, அதன் தொழிற்பாடு எவ்வாறிருந்தது, அறிவுசார் விவாதங்களில் செல்வாக்கு செலுத்திய ஏனைய சிந்தனைப் பள்ளிகள் யாவை, இஸ்லாமியச் சட்ட மரபில் அவற்றின் தாக்கமென்ன என்பன போன்ற நுணுக்கமான பின்புலத்தோடு இணைத்துப் படிக்கப்பட வேண்டியது அது” என்கிறார் பேராசிரியர் ஹல்லாக்.

3. இஸ்லாமியச் சட்டவாழ்வும், உஸ்மானிய சாம்ராஜ்யமும்

இஸ்லாமியச் சட்டச் சிந்தனை, அதன் உருவாக்கம், சமூகத் தொழிற்பாட்டுப் பொறிமுறை ஆகியவை உஸ்மானிய சாம்ராஜ்ய காலப்பிரிவில் எவ்வாறெல்லாம் கட்டமைப்பு மாற்றம் பெற்றன என்பதை விரிவாக ஆய்வு செய்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, உஸ்மானிய சாம்ராஜ்ய காலப்பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு வீரியமடைந்த மதரஸா கட்டமைப்பையும், சட்டச் சிந்தனை உருவாக்கத்தின் மீது அது ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவும் விரிவாகப் பேசுகிறார்.

இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலாக முழு சாம்ராஜ்யத்தையும் மைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகளை உஸ்மானியர்களே தொடங்கினார்கள். அதிலொரு அங்கமாகவே இஸ்லாமிய ஃபிக்ஹ் கல்வியை நெறிப்படுத்துவதற்கு மதரஸா கட்டமைப்பை உஸ்மானியர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். தொடக்கத்தில் அங்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் உள்ளடக்கமும் சட்டச் சிந்தனையாளரின் சுதந்திர செயல்பாடும் புதிய கட்டமைப்பு மாற்றங்களால் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

பின்னாட்களில் ‘ஷெய்குல் இஸ்லாம்’ என்றொரு பதவியை உஸ்மானியர்கள் அறிமுகம் செய்தார்கள். இஸ்லாமியச் சட்டவியல் நடைமுறைகளை வழிநடத்தும் ஏக அதிகாரம் அவரிடம் கொடுக்கப்பட்டது. நீதிபதிகள் நியமனம், அவர்களைப் பதவிநீக்கம் செய்தல், நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்குதல் ஆகியவற்றை ஷெய்குல் இஸ்லாம் பார்த்துக்கொண்டார். இஸ்லாமியச் சட்டத்தைக் கற்பிக்கும் மதரஸாக்களில் பயின்றவர்கள் சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்துறையில் நிபுணர்களாகவும் அலுவலர்களாகவும் உள்வாங்கிக் கொள்ளப்பட்டார்கள்.

இவ்வனைத்து கட்டமைப்பு ரீதியான மாற்றங்களும் இணைந்து பொதுச்சமூகத்தின் மீது ஏற்படுத்திய சமூகவியல் தாக்கங்களை பேராசிரியர் ஹல்லாக் விரிவாகப் பட்டியலிடுகிறார். அதிலொன்று, இஸ்லாமியச் சட்டத்தைக் கற்பதும் கற்பிப்பதும் அரசாங்கப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக ஆகியது.

இரண்டாவது, இஸ்லாமியச் சட்டத்துறையில் கற்று வெளியேறியவர்களும் அவர்களின் குடும்பங்களும் சமூகத்தில் உயர் வகுப்பினராக (Elite) படிப்படியாக நிலைமாற்றமடைந்தார்கள். இதனால்தான், உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் பிற்பட்ட காலப்பிரிவில் சமூகத்தின் அடிமட்டத்திருந்து வந்த இஸ்லாமியச் சட்டவியலாளர் எவரையும் காண முடியாமல் போனது. பெரும்பாலானவர்கள் சமூகத்தின் உயர்வகுப்பைச் சார்ந்த அரசாங்க அலுவலர்களாகவே இருந்தனர்.

மூன்றாவது, நீதித்துறை முழுமையாக முறைப்படுத்தப்பட்டது. அதன் அலுவலர்கள் சம்பளம் பெறும் அரச அலுவலர்களாக மாறினார்கள். நீதித்துறையை நடத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஹனஃபி மத்ஹப் சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ மத்ஹபாக பிரகடனம் செய்யப்பட்டது.

இதனால் ஏற்பட்ட சமூக விளைவை நுணுக்கமாகக் கவனப்படுத்துகிறார் பேராசிரியர் ஹல்லாக்: “அரசக் கட்டமைப்பில் உயர்ந்து செல்வதற்கு ஹனஃபி மத்ஹபைக் கற்க வேண்டிய சமூகச் சூழலொன்று உருவானது. இதனால், இஸ்லாமிய உலகின் பல பாகங்களிலும் ஏனைய மத்ஹபுகளைக் கற்பதற்கான ஈர்ப்பு குறைந்துகொண்டே போனது. அவற்றைக் கற்ற பல அறிஞர்களும் வேலை வாய்ப்பு, அரச ஒழுங்கு என்கிற அடிப்படையில் ஹனஃபி மத்ஹபுக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டிய சமூக நிர்ப்பந்தம் உருவானது. இதன் பொருள், ஏனைய மத்ஹபுகளும் அவற்றின் அறிவுச் செயற்பாடுகளும் முழுமையாக ஒதுக்கப்பட்டன என்பதல்ல. மாறாக, சமூகத்தின் பல மட்டங்களிலும் அவை இடம்பெற்றிருந்தன என்றாலும், மையமான முக்கியத்துவத்தை அவை பெற்றிருக்கவில்லை.”

இத்தகைய கட்டமைப்பு மாற்றங்களுக்குப் பிறகும் ஃபகீஹ்களையும் முஃப்திகளையும் சுற்றிச் சுழன்ற பாரம்பரிய சமூக வாழ்வும், உரையாடல்களும், அதற்குரிய அந்தஸ்தும் முழுமையாக அறுந்துவிடவில்லை. மாறாக, தமது அன்றாட வாழ்வில் அவ்வாறான உரையாடல்களின் விளைவாக தோன்றம் பெற்ற அபிப்ராயங்களுக்கே மக்கள் முன்னுரிமை வழங்கினார்கள். அவற்றையே இஸ்லாமிய ஷரீஆவின் வழிகாட்டல்களாக ஏற்றுப் பின்பற்றினார்கள். சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ முறைப்படுத்தல்கள் ஒருபுறம் நிகழ்ந்துவந்தாலும், இயல்பான சமூக வாழ்வு பல நூற்றாண்டுகள் கடந்துவந்த அந்தப் பாரம்பரியத்தையொட்டியே நகர்ந்துசென்றது என்கிறார் ஹல்லாக்.

4. நவீன தேசிய அரசும் இஸ்லாமியச் சட்ட மரபும்

காலனியமும் அதைத் தொடர்ந்துவந்த தேசிய அரசுக் கட்டமைப்பும் இஸ்லாமியச் சட்டப் பாரம்பரியத்தையும், அது உருவாக்கிய தற்சார்பு சமூக வாழ்வையும், தத்துவார்த்த அடித்தளத்தையும் முழுமையாகச் சிதைத்துள்ளது என்ற கருத்தையே நூலின் இரண்டாம் பகுதியில் வாயில் ஹல்லாக் வலியுறுத்துகிறார்.

காலனியம் அறிமுகம் செய்த நவீன தேசிய அரசின் கீழ் இஸ்லாமியச் சட்டவாழ்வைக் கடைபிடிப்பதென்பது எளிதன்று. ஏனெனில், தனக்குக் கீழாக, தனது தேவைகளுக்கு ஏற்பவே சட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் அதை சகலரும் கேள்வியின்றி பின்பற்ற வேண்டும் என்றும் நவீன தேசிய அரசுகள் கருதுகின்றன. ஆனால், இஸ்லாமிய ஷரீஆவோ தனக்கும் சமூகத்திற்கும் இடையிலான உரையாடலில் அரசு தலையிடக் கூடாது என்று சொல்கிறது. சமூகத்தை விவாதத்திற்கும் உரையாடலுக்கும் அழைப்பதோடு காலம், இடம், சூழல் பரிமாணங்களைக் கருத்தில் கொள்ளும் ஒரு கோட்பாடாக இஸ்லாமிய ஷரீஆ தன்னை முன்நிறுத்துகிறது.

இஸ்லாமிய ஷரீஆ வெறும் சட்டமாக (Law) மட்டுமின்றி பண்பாடுகளை நோக்கிச் சமூகத்தை அழைத்துச் செல்வதற்கான உரையாடலாகவும் வேலைத்திட்டமாகவும் இருக்கிறது. எனவேதான், ஷரீஆவும் அதன் சமூகப் பிரசன்னமான இஸ்லாமிய ஃபிக்ஹும் மனித நடத்தையை வாஜிப் (கடமையானவை), மன்தூப் (பரிந்துரைக்கப்பட்டவை) , ஹறாம் (தடுக்கப்பட்டவை), ஹலால் (அனுமதிக்கப்பட்டவை), மக்றூஹ் (தவிர்க்கப்பட வேண்டியவை) போன்ற பன்முகப் பெறுமானங்களில் வகைப்படுத்தப்படுகின்றன.

ஆனால், அரசு (State) அத்தகைய பன்மைத்துவத்தை அங்கீகரிப்பதில்லை. அது ஒற்றைத் தன்மையைப் (uniformity) போதிக்கிறது; கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது. தனது எதிர்பார்ப்புகளுக்கும் சர்வதேச அழுத்தங்களுக்கும் ஏற்ப சமூகத்தைப் பட்டைதீட்டுவதற்கு முயற்சிக்கிறது. சமூகம் தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்கிறது. தன் மீதான விசுவாசத்தைக் கேள்விக்குட்படுத்தாமல் நம்பிக்கைகளை மீளக்கட்டமைக்குமாறு கோருகிறது.

ஆகமொத்தத்தில், புதியதொரு உலக ஒழுங்கின் முன்னால் நிற்கிறது இஸ்லாமிய ஷரீஆ. சமூகத்தின் மீது கட்டுப்பாட்டையும் அழுத்தத்தையும் பிரயோகிக்கும் இப்படியொரு கடுமையான உலக ஒழுங்கை இதுவரை ஷரீஆ சந்தித்தில்லை என்கிறார் ஹல்லாக். மேற்கூறப்பட்ட கோட்பாட்டுப் பின்புலத்தோடு நவீன தேசிய அரசும் இஸ்லாமிய ஷரீஆவும் மோதிக்கொண்ட வரலாற்றுப் பின்னணியை நோக்கி வாசகர்களை அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

5. இஸ்லாமியச் சட்டவாழ்வும் அதை செயலிழக்கச் செய்வதற்கான காலனிய வியூகமும்

முஸ்லிம் உலகின் பொருளாதார வளங்களைச் சுரண்டிச் செல்வதுதான் காலனியத்தின் ஒற்றைக் குறிக்கோள். ஆனால், அதை அடைந்துகொள்வதற்கு பலப்பிரயோத்தை மட்டும் நிரந்தரத் தீர்வாகக் காலனியம் கருதவில்லை. மாறாக, அதைவிட இலாபகரமானதும் பலமானதுமான வழிமுறையொன்றை காலனியம் பின்பற்றியது. ஐரோப்பிய தேசிய அரசுக்குரிய பண்புகளின் ஒளியில் முஸ்லிம் உலகை மாற்றி வடிவமைப்பதுதான் அந்த வழிமுறை.

இதற்கு காலனியம் மூன்று விஷயங்களைச் செய்தது:

1. ஒரு மைய அதிகாரத்தில் மூலம் நாட்டை ஒழுங்குபடுத்துதல் (Centralization).

2. அரசாங்கத்தின் கட்டளைகளைச் செயல்படுத்தும் பொதுநிர்வாக ஏற்படுத்துதல் (Bureaucracy).

3. திறந்த பொருளாதாரத்தை ஆதரிக்கும் சட்டங்களையும் சட்டத்தின் ஆட்சியையும் (Rule of Law) நிலைநிறுத்துதல்.

முஸ்லிம் உலகில் பல நூற்றாண்டு காலம் நிலவிய பொதுச்சமூகத்தை மையப்படுத்தி விரிவடைந்துவந்த இஸ்லாமியச் சட்டப் பாரம்பரியத்தை மேற்கூறப்பட்ட தனது தேசிய அரச இயந்திரத்திற்கு எதிரானதாக காலனியம் பார்த்தது. ஏனெனில், மேற்கத்திய நவீனத்துவ உலகக் கண்ணோட்டத்தின்படி, ஓர் அரசு தனக்குக் கீழ் வாழும் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குதான் சட்டம். அது அரசின் உடைமை. அரசின் மேற்பார்வையின் கீழ், அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தியே சட்டம் செயற்பட வேண்டும். அது மட்டுமன்றி, சமூகத்தின் மீது சட்டத்தைத் திணிக்கும் அதிகாரம் ஓர் அரசுக்குத்தான் இருக்கிறது.

இந்தப் பின்புலத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போதே, இஸ்லாமியச் சட்டவியலின் பன்மைத்துவத்தையும் சமூகத்தை மையப்படுத்தி அது வளர்ச்சியடைந்த பாங்கையும் மேற்கத்திய காலனியம் தனக்கும், தான் உருவாக்க விரும்பும் அரசை மையப்படுத்திய சமூக ஒழுங்குக்கும் சவாலானதாகக் கருதியது ஏன் என்பது தெளிவாக விளங்கும். நவீன தேசிய அரசின் கீழ் முஸ்லிம் உலகைக் கொண்டுவருவதில் காலனியம் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் இஸ்லாமியச் சட்டப்பாரம்பரியமும், அதன் பன்மைத்துவமும்தான்.

இஸ்லாமியச் சட்டவாழ்வு கொண்டிருந்த சிந்தனைப் பன்மைத்துவத்தைச் சிதைப்பதற்கு ஒரு பிரதான வியூகத்தை காலனிய சக்திகள் நடைமுறைப்படுத்தின. இஸ்லாமியச் சட்டம் நவீன சட்டநூல்களின் வடிவில் தொகுப்பாக்கம் (Codify) செய்யப்பட்டது. அதற்கு காலனிய அறிஞர்கள் பின்வரும் நியாயங்களை முன்வைத்தனர். சட்டங்கள் நிலையானதாக இருக்க வேண்டும்; காலம் , சூழல், தனிநபர்களது சமூகச் சூழல் என்ற அடிப்படையில் சட்டங்கள் மாறுபட்டுச் செல்ல முடியாது. எனவே, இஸ்லாமியப் பாரம்பரிய ஃபிக்ஹை தொகுத்துக் கொண்டால், சமூகங்களை ஆள்வதற்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இலகுவாக இருக்கும். தொகுக்கப்பட்ட சட்டங்கள் நிலையானவை மட்டுமன்றி, சகல பிராந்தியங்களிலும் ஒரே சட்டத்தை அமல்படுத்தவும் முடியும் என காலனிய கீழைத்தேயவாதிகள் வாதிட்டனர்.

இந்தப் பின்னணியில் தொகுக்கப்பட்ட இஸ்லாமியச் சட்டத் தொகுப்பை ’Islamic Law’ என காலனிய சட்டச் சிந்தனையாளர்கள் பெயரிட்டார்கள்.

6. இஸ்லாமியச் சட்டச் சிந்தனையும் நவீன Islamic Law-வும் ஒன்றா?

மேற்குலக காலனியத்தின் ‘Islamic Law’ என்ற நவீன கருத்தாக்கத்தின் மோசமான விளைவு என்னவென்றால், இஸ்லாமியச் சட்டப்பாரம்பரியம் கொண்டிருந்த கருத்துப் பன்மைத்துவமும், அதன் பரந்த சமூக விவாதங்களும் அரசின் தேசிய மற்றும் பொருளாதார இலக்குகளுக்கு ஏற்ப செம்மையாக்கம் செய்யப்பட்டதே. மேலும், இஸ்லாமியச் சட்டப்பாரம்பரியமானது அதன் உலகநோக்கு, அதன் சூழலியல் பின்புலம் (Ecology), அது உருப்பெற்று வளர்ந்த சமூக சூழல் என்பவற்றிலிருந்து அது பிரித்தெடுக்கப்பட்டு புதியதொரு அதிகார தளத்தில், புதியதொரு நோக்கத்திற்காக ‘Islamic Law’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.

பேராசிரியர் ஹல்லாக் பிரபல மானுடவியலாளர் தலால் அஸதின் ஒரு கருத்தை சுட்டிக்காட்டுகிறார். ”காலனியத்திற்குப் பிந்திய அரச கட்டமைப்புகளின் இலக்குகளுக்கு ஏற்ப சமூகத்தை சீர்திருத்த வேண்டிய தேவை எழுந்தது. அதற்காக மேற்குலக காலனியம் உருவாக்கிய அரசியல் வியூகமே ‘Islamic Law’ என்பது. அதற்கும் இஸ்லாமியச் சட்டப்பாரம்பரியத்திற்கும் (அல் ஃபிக்ஹுல் இஸ்லாமி) எந்த ஆத்மார்த்தத் தொடர்பும் இல்லை. இரண்டும் வெவ்வேறு உலகநோக்குகளுடனும் பின்புலத் தத்துவங்களுடனும் உருவாக்கம் பெற்றவை. அதேபோல், வித்தியாசமான வாழ்வொழுங்குகளில் தோற்றுவிக்கப்பட்டவை. இன்னும் தெளிவாகச் சொன்னால், இஸ்லாமிய ஃபிக்ஹ்ப் பாரம்பரியத்தை சமூக நீக்கம் செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டதே ‘Islamic Law” ஆகும்.”

இத்தகைய கோட்பாட்டுப் பின்புலத்தின் மீது நின்று உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் இறுதிக் காலப்பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட ‘தன்ழீமாத் சீர்திருத்தங்களை’ அடுத்தாக பகுப்பாய்வு செய்கிறார் வாயில் ஹல்லாக். தன்ழீமாத் என்பது சமூகத்தை ஓர் அரச அதிகாரத்தின் கீழ் ஒழுங்குபடுத்துதல் (Ordering) என்பதாகும். மேற்குலக காலனிய சக்திகளிடம் கடன்பட்டு சிறுமைப்பட்ட உஸ்மானிய சாம்ராஜ்ய தலைமைகள், ஜரோப்பாவின் அழுத்தங்களுக்கு ஏற்ப சாம்ராஜ்யத்தை மறுவரையறை செய்யும் முயற்சியின் ஒரு கட்டமாக தன்ழீமாத் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்கிறார் பேராசிரியர்.

மிகக் குறிப்பாக, உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பிராந்தியங்களின் சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கிலேயே உஸ்மானியத் தலைமைகளுக்கு ஜரோப்பா அழுத்தம் தந்தது. அதை இலகுவாக அடைந்து கொள்வதற்கு பாரம்பரிய இஸ்லாமியச் சட்ட மரபின் சமூகத் பாத்திரத்தை மறுவரையறை செய்யுமாறு பிரான்ஸூம், இங்கிலாந்தும் வலியுறுத்தின. இந்த அழுத்தங்களே இறுதியில் ஹனஃபி மத்ஹபை தொகுக்கும் ‘மஜல்லதுல் அஹ்காம் அல் அத்லிய்யா’ செயல்திட்டமாக வடிவம் பெற்றது என்கிறார் பேராசிரியர் வாயில் ஹல்லாக்.

7. காலனிய காலத்தில் வக்ஃப் சொத்துகளும் முஸ்லிம் தனியார் சட்டமும்

இஸ்லாமிய சட்டப்பாரம்பரியத்தின் சமூகவியல் தொழிற்பாட்டை செயலிழக்கச் செய்வதில் காலனியமும், அது உருவாக்கிய தேசிய அரசுகளும் செயல்படுத்திய மற்றொரு வியூகம் வக்ஃப் சொத்துகளை அரசுடமையாக்கியது.

காலனியத்தின் வருகையுடன் வக்ஃப் சொத்துகள் பொதுச் சந்தையில் விற்பனைக்காக விடப்பட்டன அல்லது அரசுடைமை ஆக்கப்பட்டன. இதனால், பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரமான கல்வி உற்பத்தியும், அதைத் தாங்கி நின்ற சமூக ஒழுங்கும் அடுத்தடுத்து இடிந்து விழ ஆரம்பித்தன.

வக்ஃப் பொருளாதாரத்தின் நிலைமாற்றத்தின் தாக்கம் பாரம்பரிய இஸ்லாமியச் சமூகத்தின் குடும்ப ஒழுங்கு, சமூக ஒழுங்கு, அறிவு நிறுவனங்களது இயக்கம் ஆகிய பல தளங்களில் எதிரிரொலித்தது. பொதுச் சமூகத்திற்கும் சட்டவியலாளருக்கும் இடையிலான தொடர்பு மழுங்கடிக்கப்பட்டது பற்றியும் பேராசிரியர் ஹல்லாக் விளக்குகிறார். சுதந்திரமான சமூக இயக்கத்தை உத்தரவாதப்படுத்தும் காரணியாக இருந்து வந்த வக்ஃப் சொத்துகளை அரசுடமையாக்கியவுடன் சமூகம் தானாகவே செயலிழந்து விட்டது என்கிறார்.

அடுத்து, காலனியத்திற்கு முன்னும் பின்னும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் போக்குகள் எப்படி இருந்தன என்பது குறித்து நூல் பகுப்பாய்வு செய்கிறது. இஸ்லாமிய தனியார் சட்டங்களை காலனிய சக்திகள் விட்டு வைத்தார்கள். இறுதிவரை மேற்கத்திய சிவில் சட்டங்களினால் அதை மாற்றியமைக்க முடியவில்லை. ஆனால், சர்வதேச பொருளாதார நலன்கள் மற்றும் உள்ளக அரசியல் நலன்களுக்கு ஏற்ப மிக மோசமாக அச்சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் பெண்களின் திருமண வயதெல்லை வரையறை செய்யப்பட்டது. திறந்த உற்பத்திப் பொருளாதார ஒழுங்கிற்கு ஏற்ப சமூக வாழ்வை சீரமைக்கும் நோக்கில் திருமண வயதெல்லையை மாற்றியமைக்க வேண்டிய தேவை மேற்குலகில் எழுந்தது. அதே மாதிரியான நிலை முஸ்லிம் உலகிலும் பரவ ஆரம்பித்தபோது, அங்கும் அந்த வரையறையை காலனிய சக்திகள் ஏற்படுத்தி, முஸ்லிம் தனியார் சட்டத்திலும் அத்தகைய மாற்றங்களைச் செய்தன.

மேற்குலகின் காலனியமும், அது அறிமுகம் செய்த தேசிய அரசும் கூட்டுக் குடும்பங்களை விரும்புவதில்லை. காரணம், அரசுக்கு சார்பாக இருக்க வேண்டிய விசுவாசத்தை அந்த அகன்ற குடும்பத்தின் தலைவர்கள் அல்லது கோத்திரத் தலைமைகள் பகிர்ந்துகொள்வார்கள் என்பதுதான். இப்படியான உலகநோக்கிற்கு ஏற்ப இஸ்லாத்தின் வாரிசுரிமைச் சட்டங்களும் வக்ஃப் சட்டங்களும் சீர்திருத்தப்பட்டன. அதற்கு ஆதாரவாக பாரம்பரிய ஃபிக்ஹில் காணப்படும் சிதறிய கருத்துக்கள் தெரிவு செய்யப்பட்டு ஷரத்தாக்கம் செய்யப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்குலகில் எழுந்த பெண்ணியவாத அலை சர்வதேச ரீதயான பேசுபொருளாகியது. காலப்போக்கில் அந்த அலை முஸ்லிம் உலகை நோக்கித் திரும்பியது. இஸ்லாமிய உலகில் செயல்படுத்தப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டம் ஆணாதிக்கவாத ஷரத்துக்களைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்தி எழுதும் செயல்திட்டத்தை அரசாங்கங்கள் ஆரம்பித்தன. இம்முறை பலதாரமணத்தைக் கட்டுப்படுத்தல், ஆண்கள் தலாக் சொல்லும் உரிமையை வரையறை செய்தல், பெண்களின் தொழில் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துதல் போன்ற நவீன பெண்ணியல்வாதச் சிந்தனைகளுக்கு ஏற்ப ஷரத்தாக்கம் செய்யப்பட்டது.

நாட்டின் அதிகாரப்பூர்வ சட்டமாக அதைப் பிரகடனப்படுத்தினார்கள். இவையெல்லாம் ஃபிக்ஹை ஒப்பீடு செய்தல், காலத்திற்குப் பொருத்தமான நிலைப்பாட்டை பாரம்பரிய சட்ட சீர்திருத்தங்களிலிருந்து தெரிவு செய்தல் போன்ற சுலோகங்களின் அடிப்படையிலும் பெரும் அறிஞர்களது பங்கேற்போடும்தான் அரங்கேறின என்கிறார் வாயில் ஹல்லாக்.

இங்கு வாயில் ஹல்லாக் சொல்லவரும் கருத்து மிக நுணுக்கமானதாகும். எந்தக் கருத்து சரியானது அல்லது எது தவறானது என்பன குறித்து வாயில் ஹல்லாக் விவாதிக்கவில்லை. மாறாக, இஸ்லாமியக் குடும்பவியல் சட்டங்களும் அதைத் தாங்கி நின்ற பாரம்பரிய இஸ்லாமியச் சட்டச் சிந்தனை என்பது காலனியத்திற்கு முந்தைய சமூக ஒழுங்கை மையப்படுத்தி எழுந்தவை. ஒவ்வொரு மத்ஹபும் சில இடங்களில் பெண்களைக் கட்டுப்படுத்துவது போலவே, வேறு இடங்களில் பெண்களைப் பலப்படுத்துகின்றன. அவ்வாறுதான் ஆண்களுக்கும். ஏனெனில், பாரம்பரிய சமூக வாழ்வு கொண்டிருந்த அப்போதைய சமூக உறவின் உள்ளக இயங்கியலைக் கருத்தில் கொண்டே அவை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.

மேலும், சமூகமும் சட்டச் சிந்தனையாளரும் இணைந்துதான் முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். பெரிய அளவுக்கு வெளித்தாக்கங்கள் இல்லாத சமூக உரையாடலின் முடிவுகள் அவை. அக்கால குடும்ப ஒழுங்குகள், அதன் விழுமியங்கள், பெறுமானங்கள் என்பன தற்காலத்தை விட வித்தியாசமானவை.

சர்வதேச பொருளாதாரத்தின் தேவைகளுக்கும் அல்லது பிற அரசியல் தேவைகளுக்கும் ஏற்ப சமூகங்கள் மீள் வரையப்படும் உலக ஒழுங்கில் அவர்கள் வாழவில்லை. நாம் தற்போது அப்படியொரு உலகில் வாழ்கிறோம். எனவே, நவீனகால அரசியல் தளமாற்றங்களுக்குள்பாரம்பரிய இஸ்லாமியச் சட்டச் சிந்தனையானது சிக்குண்டு சின்னபின்னமாகிக் கொண்டுள்ளது என்கிறார் ஹல்லாக்.

எந்த மத்ஹபுடைய கருத்துகளையும் சட்டங்களாக (Law) காலனியத்திற்கு முந்தைய சமூகங்கள் கருதவில்லை. மாறாக, ஒரு சட்டச் சிந்தனையாளருக்கும், அவருடைய சமூகத்திற்கும் இடையிலான உரையாடலின் விளைவாக மட்டுமே அவர்கள் இஸ்லாமிய ஃபிக்ஹை பார்த்தார்கள். எனவே, ஒரு கருத்துடன் அல்லது நிலைப்பாட்டுடன் தனக்கு உடன்பாடில்லை என்று ஒருவர் கருதினால், வேறு பல சட்டச் சிந்தனையாளர்களுடன் விவாதித்து வேறு நிலைப்பாடுகளை நோக்கிச் செல்லும் சுதந்திரமான சூழல் அப்போது காணப்பட்டது. ஆனால், தேசிய அரசுகளின் வருகையுடன் இஸ்லாமிய ஃபிக்ஹ் என்பது ‘சட்டம்’ (Law) என்ற கண்ணோட்டத்தை எடுத்தது. அனைவரும் அதைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும்; இல்லையென்றால் அது அதிகாரத்தைக் கொண்டு நிலைநாட்டப்படும் எனும் நிலை உருவானது.

இந்தக் கட்டத்தில் தான் ஒப்பீட்டு பிக்ஹ் (Comparative Fiqh) என்ற பெயரில் அல்லது சமகாலத்திற்குப் பொருந்தும் கருத்து என்ற அடிப்படையில் ஒவ்வொரு மத்ஹபிலிருந்தும் சிதறலாக கருத்துகள் தெரிவு செய்யப்பட்டு நாட்டின் சட்டங்களாக பிரடகனம் செய்யப்பட்டன. இவை அதிகம் இடம்பெற்றது முஸ்லிம் தனியார் சட்டங்களில்தான். ஒவ்வொரு மத்ஹபும் அது வாழ்ந்த சமூக சூழலின் வெளிப்பாடுதான். அங்கு பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் அவை.

ஃபத்வாக்கள் (சட்ட அறிஞரின் தனிப்பட்ட கருத்து) செல்வாக்கு செலுத்திய இயல்பானதொரு சமூக ஓழுங்கிலிருந்து அரச அதிகாரத்தைக் கொண்டு சட்டங்கள் செயற்படுத்தப்படும் ஓர் அரசு மைய உலக ஒழுங்கை நோக்கி நாம் நகர்கிறோம் என்ற புரிதலோடு இஸ்லாமிய ஃபிக்ஹை சட்டவாக்கம் செய்யும் (Legalization) செயல்திட்டம் இடம்பெறவில்லை அல்லது அந்த அடிப்படையில் பாரம்பரிய ஃபிக்ஹ் அணுகப்படவும் இல்லை. ஒரு ஃபத்வாவை சட்டமாகப் பிரகடனம் செய்வது என்பது ஃபத்வாவின் தத்துவார்த்த அடித்தளத்தையே தகர்க்கிறது. இது பற்றிய எந்த அறிவார்ந்த உரையாடல்களும் நடைபெறவில்லை. இவ்வாறுதான் கடந்த நூற்றாண்டின் ஃபிக்ஹ் சிந்தனையின் தொழிற்பாட்டையும், அது அரசுடன் செய்த உரையாடலையும் பல்வேறு கேள்விகளுக்கு உட்படுத்துகிறார் பேராசிரியர் வாயில் ஹல்லாக்.

இறுதியாக, காலனியத்திற்குப் பிந்திய தேசிய அரசுக் கட்டமைப்பில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய இயக்கங்களின் போராட்டங்களும் காலனியம் வடிவமைத்துக் கொடுத்த உலகநோக்கிலிருந்து முழுமையாக விடுபட்டதாக இருக்கவில்லை என்கிறார் பேராசிரியர் ஹல்லாக். மாறாக, பாரம்பரிய இஸ்லாமிய ஃபிக்ஹை ‘Law’ என்ற கண்ணோட்டத்தில் புரிந்து, அதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொனியில்தான் அவர்களும் பேசினார்கள். அதாவது, சமூகத்தை தனது உலக நோக்கில் வலுக்கட்டாயமாக வடிவமைப்பதற்கான கருவியாகப் சட்டத்தை மேற்குலகம் பயன்படுத்துகிறது. இஸ்லாம் அவ்வளவு இறுக்கமாக பாரம்பரியத்தைக் கொண்டல்ல. அது சமூகத்துடன் உரையாடிய பாரம்பரியம். அது சமூகத்தின் விவாதங்களை உள்வாங்கிய நிலையில் சமூக செயல்திட்டமாக நகர்ந்து சென்ற பாரம்பரியம். அந்தப் பாரம்பரியம் காலனியத்தின் வருகையுடன்தான் உயிரோட்டமிழந்தது.

அன்று காலனிய உலகநோக்கும், தேசிய அரசு, அதன் எதேச்சதிகாரப் போக்கு முதலானவையும் விசாரனைக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக, காலனியம் உருவாக்கிய சிந்தனைச் சட்டகத்தில் தனது கருத்தியலைப் பொருத்தி அழகு பார்ப்பதை நோக்கியே பெரும்பாலான இஸ்லாமியமாக்கல் முயற்சிகள் நகர்ந்து சென்றன என்கிறார் பேராசிரியர் வாயில் ஹல்லாக்.

Related posts

Leave a Comment