கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1

Loading

ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் சாதித்திருப்பது என்ன?

அனைத்துக்கும் முதலாக, அரச-சமூக மட்டத்தில் இஸ்லாமிய முன்மாதிரியை செயல்படுத்த வேண்டுமென உழைக்கும் முஸ்லிம்களுக்கு ISIS போன்ற தக்ஃபீரி குழுக்கள் மிகப்பெரிய பின்னடைவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு இதே விதமானவொரு இலவச சேவையை ‘சவூதி’ அரேபியா ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறது என்று நான் சொன்னால் ISIS ஆதரவாளர்கள் ஒப்புக்கொள்ளவா போகிறார்கள்?!

‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ என்பன போன்ற மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் யாவும் இன்று முற்றிலும் ‘கெட்ட வார்த்தைகளாக’, ‘வசவுச் சொற்களாக’ ஆக்கப்பட்டு விட்டதற்கு நாம் இந்த தக்ஃபீரிகளுக்கும் மிகப் பெருமளவு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

உலக மக்களின் மனங்களில் இஸ்லாத்தைக் குறித்த பிழையான சித்திரத்தை ஏற்படுத்துவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவற்றின் அசல் பாத்திரத்திற்கு மீளச் செய்வதற்கும் மௌலானா மௌதூதி, சையித் குதுப் உள்ளிட்ட கணக்கிலடங்கா முஸ்லிம் அறிஞர்களும் செயல்வாதிகளும் தம் வாழ்வையே அர்ப்பணித்து வந்திருக்கிறார்கள். இது முதல் வகையினர்.

எனினும், எதிரிகளின் மேற்கூறிய வகை தாக்குதலுக்கு முகம்கொடுக்க திராணியில்லாமல், தோல்வி மனப்பான்மையுடன், காலில் விழாத குறையாகக் கெஞ்சும் பாணியில் இஸ்லாமிய எண்ணக்கருக்களுக்கு சமாதான விளக்கங்கள் கூற முற்படுவோர் இரண்டாம் வகையினர்.

தக்ஃபீரிகளின் தோற்றத்திற்குப் பிறகுதான் இரண்டாம் வகையினர் முளைத்தனர் என்று நாம் வாதிடுவதாக தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். ஆரம்பத்திலிருந்தே இப்படியொரு வகையினரும் இருந்தே வந்துள்ளார்கள். எனினும் நாம் கூறவருவது இதனைத் தான்:

ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் இஸ்லாத்தையும் அதன் அமலாக்கத்தையும் குறித்த தம்முடைய குறுக்கல்வாத புரிதல்களாலும், கட்டற்ற வன்முறையையும் பலாத்காரத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமது அமலாக்க முயற்சிகளாலும் நிலைமையை மிக மோசமான சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.

இவை இஸ்லாமிய அடிப்படையில் ‘மிகச் சரியானவை’ என்று வேறு பெருமையாக நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொள்கிறார்கள். தங்களுடைய ‘சாதனைகளை’ ஹாலிவுட் ரேஞ்சுக்கு வீடியோ எடுத்து விளம்பரமும் செய்து கொள்கிறார்கள். அவை எல்லாம் “முஃமின்களின் நெஞ்சங்களை குணப்படுத்தும்” என்றும், “குஃப்பார்களின் நெஞ்சங்களில் அச்சத்தை விதைக்கும்” என்றும் மொக்கையான வாதங்களை முன்வைக்கிறார்கள்.

இஸ்லாத்தை அதற்குரிய அசலான, பரந்த நோக்குடன் இவர்களால் ஒருபோதும் சிந்திக்க முடியாது என்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். சித்தாந்த ரீதியிலும், செயல் அளவிலும் சமரசமற்ற முறையில் இஸ்லாத்தை உயர்த்திப் பிடிப்போரின் நிலைப்பாடு இவர்களால் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம், சமரசம் செய்துகொள்ளவும் அடகுவைக்கவும் தயாராகவுள்ள போக்கினரின் நிலைப்பாடு அதிக கவனத்தையும் அதிக பின்பற்றாளர்களையும் வென்றெடுப்பதற்கு இவர்கள் வழிவகுத்துத் தந்துள்ளார்கள்.

இது தற்செயலாக நடந்திருக்கிறது என்று நான் கருதவில்லையென்றாலும், நடந்திருப்பது இதுதான் என்பதில் எவரும் பெரிதாக கருத்துமுரண்பட முடியாது என்பதாலேயே நான் இதற்கு அழுத்தம் கொடுப்பதுடன் போதுமாக்கிக் கொள்கிறேன். இது எப்படி எதிரிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது என்பதை விளக்க முற்பட்டால், முரண்பட்ட ஆதாரங்களின் சிக்கலுக்குள் சென்று சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதால் நான் அதனை அப்படியே கடந்து செல்ல விரும்புகிறேன்.

சமரசம் செய்துகொள்ள விரும்புவோரின் போக்கு எப்படி வளர்ந்து செல்கிறது என்பதைப் பற்றி சில வார்த்தைகளைச் சொல்வதுடன் இத்தொடரின் முதல் பதிவினை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

“அரசியலுடன் மதத்தை கலக்க மாட்டோம்”, “ஒரே தலைமையின் கீழ் முஸ்லிம்கள் ஒருங்கிணைவதென்பது பலவீனமான ஒற்றை ஹதீஸை அடிப்படையாகக் கொண்ட பகல் கனவு”, “இஸ்லாத்தில் மதக் குருத்துவம் கிடையாது”, “இஸ்லாமிய அரசு என்பது ஒரு கற்பிதம்” என்பன போன்ற ‘ஆய்வு முடிவுகளையும்’ ‘வாக்குறுதிகளையும்’ இஸ்லாமியவாதிகள் என்று அறியப்படுவோர் சமீபகாலமாக துரித கதியில் அள்ளிவீசிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கவே இல்லையா?!

இதை ஒரு ஆங்கிலப் பழமொழியின் உதவியுடன் கூட புரிந்து கொள்ளலாம்: Don’t throw the baby out with the bath water.

கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள்! இஸ்லாத்தைக் குறித்த முஸ்லிம்களின் புரிதலையும் சொல்லாடலையும் படிப்படியாக ‘மதச்சார்பற்றதாக’ மாற்றியமைக்கும் பாரதூரமான ‘ஆய்வுகள்’ இவை. இவற்றைப் புரிந்துகொள்வதற்கான சூட்சுமம் இப்பதிவில் இருக்கிறது. மீண்டுமொரு முறை பதிவை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்!

Related posts

Leave a Comment