கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 2

Loading

ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்களை நாம் ஏன் ‘தக்ஃபீரிகள்’ என்கிறோம் என்பது பற்றிய சுருக்கமான விளக்கத்தை தொடரின் இவ்விரண்டாம் பதிவில் காணலாம்.

“தக்ஃபீரிகள்” என்பதன் மூலம் நான் நாடுவது இதனைத்தான்:

இஸ்லாத்தின் சில அடிப்படையான விடயங்கள் தொடர்பாக தமது புரிதலுக்கு மாற்றமான புரிதல்களை கொண்டிருக்கும் பிற முஸ்லிம்களின் மீது “இறைநிராகரிப்பு” (குஃப்ரு) குற்றம் சுமத்தி, அவர்களின் உயிரையும் உடமைகளையும் ஆகுமாக்கிக் கொள்வதில் மிகத் தாராளமான போக்கினை கைக்கொள்ளும் மனநிலை கொண்டவர்களையும், அதை நடைமுறையில் செயல்படுத்த முனைபவர்களையும் குறித்தே நான் இங்கு ‘தக்ஃபீரிகள்’ என்று பேசுகிறேன்.

எனது மேற்கண்ட கூற்றிலிருந்து, தக்ஃபீரிகள் மீதான நமது ஆட்சேபணை இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது என்பது விளங்கும்.

1. ‘ஈமானை முறிக்கும் பத்து விடயங்கள்’ எனும் வஹாபிச கோட்பாட்டை இக்குழுக்கள் மிகத் தளர்வாக, தாராளமாகப் பிரயோகித்து, அவ்விடயங்களில் தம்முடன் உடன்படாத ஏறக்குறைய பிற முஸ்லிம்கள் அனைவரும் “இறைநிராகரிப்பு” (குஃப்ரு) குற்றத்திற்கு ஆளானவர்கள் என்று நேரடியாகவோ மறைமுகவோ வலியுறுத்துகிறார்கள்.

2. அதன் தொடர்ச்சியாக மிகப் பலவீனமான, சப்பை காரணங்களை கூறிக்கொண்டு தம்முடன் கருத்து மாறுபடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களின் இரத்தத்தை ஓட்டுவதற்கும் கூட இவர்கள் தயக்கம் காட்டுவதில்லை.

இப்பின்னணியில் தான் நாம் ISIS பாணி குழுக்களை ‘தக்ஃபீரிகள்’ என்கிறோம்.
இதனைப் புரிந்து கொள்வதில் எவருக்கேனும் ஏதேனும் சிரமங்கள் உண்டா?

இதில் முதலாவது அம்சத்தை மட்டும் (அதாவது அவர்களின் ‘தக்ஃபீரிச’ சித்தாந்தம் பற்றி மட்டும்) இப்பதிவில் சுருக்கமாகக் காண்போம்.

(அதனை நடைமுறைப்படுகிறோம் என்ற பெயரில் அவர்கள் எப்படியெல்லாம் வரம்பு மீறிச் செல்கிறார்கள், நாசகார விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள் என்பதை அடுத்த பதிவுக்கென ஒதுக்கி வைப்போம், இன்ஷா அல்லாஹ்.)

‘ஈமானை முறிக்கும் பத்து விடயங்கள்’ என்று வஹாபிசம் குறிப்பிடும் அம்சங்களுள் சில மிக இலகுவாக துஷ்பிரயோகம் செய்வதற்கான வாசல்களைத் திறந்து விடுபவை. அவற்றை துஷ்பிரயோகித்தே இந்த ISIS போன்ற தக்ஃபீரி குழுக்கள் பிற முஸ்லிம்களின் மீது சகட்டுமேனிக்கு ‘குஃப்ரு’ குற்றம் சுமத்தி வருகின்றனர். இதைத் தான் நாம் ‘தக்ஃபீரிசம்’ என்கிறோம்.

அவர்களின் தக்ஃபீரி சித்தாந்தம் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றது என்பதற்கு இரு உதாரணங்களை மட்டும் நான் இங்கு தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

‘ஈமானை முறிக்கும் மூன்றாவது விடயம்’:

அதாவது, “எவரொருவர் இணைவைப்பாளர்களின் இறைநிராகரிப்பை (குஃப்ரு) பிரகடனம் செய்யவில்லையோ; அல்லது, அவர்களுடைய குஃப்ரு குறித்து சந்தேகத்தில் உழல்கிறாரோ; அல்லது, அவர்களுடைய வாழ்க்கை முறையை / மார்க்கத்தை சரியானதென்றோ ஏற்புடையதென்றோ கருதுகிறாரோ அவரும் -அறிஞர்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் அடிப்படையில்- குஃப்ரில் விழுந்தவராகிறார்.”

[என் குறிப்பு: இக்கோட்பாடு வெளிப்படையில் “இணைவைப்பாளர்களின் இறைநிராகரிப்பை” குறித்துப் பேசினாலும், இதற்கு தக்ஃபீரி குழுக்கள் வழங்கும் விளக்கங்களை படிப்பீர்களாயின், அவர்களுடைய புரிதலை விட்டு மாறுபட்ட புரிதல்களைக் கொண்ட பிற முஸ்லிம்களையும் அது உள்ளடக்கும் என்பது தெளிவாகப் புலப்படும்.

இதில் “அறிஞர்களின் ஏகோபித்த அபிப்பிராயம்” என்று அவர்கள் குறிப்பிடுவது, பல்வேறு சிந்தனைப் பள்ளிகளையும் சேர்ந்த சகல இஸ்லாமிய அறிஞர்களையும் சேர்த்துதான் என்று நீங்கள் நினைப்பீர்களாயின், உங்களைக் காட்டிலும் வெகுளி யாரும் இருக்க முடியாது. தக்ஃபீரிகள் ஏற்றுக்கொள்ளும் “அறிஞர்கள்” மட்டும்தான் அவர்களைப் பொறுத்தவரை அறிஞர்கள்.

இக்கோட்பாட்டை தக்ஃபீரி குழுக்கள் எப்படி துஷ்பிரயோகம் செய்கின்றன என்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை வழங்குவதோடு போதுமாக்கிக் கொள்கிறேன்:

அதாவது, “அல்லாஹ் அருளியதைக் கொண்டு” ஆட்சி செய்யாதவொரு ஆட்சியாளரை ‘காஃபிர்’ என்று பிரகடனப்படுத்திடத் தயங்கும் அறிஞர்களும் பொதுமக்களும் கூட இவர்களில் பெரும்பாலானோரின் விளக்கத்தின் படி காஃபிர்களாகவே கொள்ளப்பட வேண்டும்.

பிறகு ஏதேனும் சில மொக்கை காரணங்களை கூறிக் கொண்டு இவர்கள் அனைவரின் இரத்தத்தையும் ஓட்டலாம், ஒரு பிரச்சினையும் இல்லை. இத்தக்ஃபீரிகளை நாம் ஏன் “நாசகரமானவர்கள்” என்று அழைக்கிறோம் என்பதற்கு இதுவுமொரு காரணம்.]

‘ஈமானை முறிக்கும் நான்காவது விடயம்’:

அதாவது, “நபிகளாரின் வழிகாட்டுதலைக் காட்டிலும் வேறொரு வழிகாட்டுதல் அதிக பூரணமானது என்று நம்புவது; அல்லது, நபிகளாரின் தீர்ப்பைக் காட்டிலும் வேறொரு தீர்ப்பினை சிறந்ததாக நம்புவது; [அல்லது, அல்லாஹ் அருளியதை விடுத்து வேறு தீர்ப்புகளை ஏற்புடையதாகக் கொள்வது]”.

[என் குறிப்பு:  ஒருவர் நன்கு அறிந்த நிலையில் அல்லாஹ்வுடைய, நபியுடைய தீர்ப்புகளை விட மற்ற தீர்ப்புகளை அதிக பூரணமானவை என்றோ, சிறந்தவை என்றோ, ஏற்புடையவை என்றோ கொள்வது மிகத் தெளிவாக இறைநிராகரிப்பு தான் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.

எனினும் அறியாமையின் காரணத்தாலோ, குறித்தவொரு விடயத்தில் இறைவன் மற்றும் நபியுடைய தீர்ப்பு இன்னதுதான் என்று ஏகோபித்த அபிப்பிராயம் இல்லாதிருக்கும் நிலையிலோ, வேறு வகையில் புரிந்து கொள்வதற்கான முகாந்திரங்கள் இருக்கும் நிலையிலோ ஒருவர் இதனைச் செய்யும் போது, அவரை ‘காஃபிர்’ என்று பிரகடனப்படுத்துவது பற்றி இத்தக்ஃபீரி குழுக்கள் விதந்தோதும் வஹாபி அறிஞர்களே கூட கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

எனினும், இத்தக்ஃபீரிகள் ஏதேனும் மொன்னையான சாக்குபோக்குகளை கூறி, தம்முடன் கருத்துமுரண்பாடு கொள்ளும் பிற முஸ்லிம்களை ‘குஃப்ரை’ கொண்டு குற்றம் சுமத்துவதில் எப்போதும் வரம்புமீறிய போக்கையே கைக்கொண்டு வருகிறார்கள்.]

இவை போன்ற கோட்பாடுகளை பிரயோகித்து அல்லது துஷ்பிரயோகித்தே இந்த ISIS போன்ற தக்ஃபீரிகள், தம்முடைய புரிதலை விட்டு மாறுபட்ட புரிதல்களைக் கொண்ட பிற முஸ்லிம்களை காஃபிர்கள் என்று பிரகடனப்படுத்தி, அவர்களின் இரத்தத்தை ஓட்டுவதற்கு காரணங்களை தேடி அலைகின்றனர்.

அவற்றின் அடிப்படையில் தாம் நிகழ்த்தும் அட்டூழியங்களை ‘இஸ்லாமிய அடிப்படையில் மிகச் சரியானவை’ என்று வேறு பெருமையாக பீற்றிக் கொள்கிறார்கள். ஹாலிவுட் ரேஞ்சுக்கு வீடியோ எடுத்து பரப்பித் திரிகிறார்கள்.

இஸ்லாத்தையும் அதன் அமலாக்கத்தையும் மிகத் தீவிரமாக உருச்சிதைக்கிறார்கள்.
தம்முடன் கருத்து முரண்படும் முஸ்லிம்களையும் கூட ‘காஃபிர்கள்’ என்று பிரகடனப்படுத்தி அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் ஆகுமாக்கிக் கொள்வதே தக்ஃபீரிசத்தின் இரண்டாவது அம்சம்.

இது பற்றியே இத்தொடரின் மூன்றாம் பதிவில் பேசவிருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.

Related posts

Leave a Comment