கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 3

Loading

தக்ஃபீரிகள் எவ்வாறு தமது அரசியல் நிலைப்பாடுகளை பிரதானமாக ‘தக்ஃபீரின்‘ (குஃப்ரு குற்றம் சுமத்துவதன்) மீதே அமைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும், அதற்கான ஊற்று எங்கிருக்கிறது என்றும் சென்ற பதிவில் சுருக்கமாக தொட்டுக் காட்டியிருந்தோம்.

தக்ஃபீரின் அடியாக அமைந்த தமது நிலைப்பாடுகளை அவர்கள் எவ்வாறு நாசகரமான முறைமையைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதையும், திருகலான மொக்கை வாதங்களை கொண்டுவந்து எப்படி அவற்றை நியாயப்படுத்த முயல்கிறார்கள் என்றும் இப்பதிவில் சுருக்கமாகக் காண்போம்.

இவர்களின் குதர்க்கமான வாதங்களை நாம் கேள்விக்குட்படுத்தினால், நாம் “அல்லாஹ்வின் ஒளியை வாய்களால் ஊதி அணைக்க” முயல்வதாக கொக்கரிக்கிறார்கள். போகட்டும் என்று விடுவோம். சரி, மேலும் தாமதிக்காமல் பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்.

இத்தக்ஃபீரிகள் தாம் நிகழ்த்தும் பச்சைப் படுகொலைகளையும், மனிதகுலத்துக்கு எதிரான மாபெரும் குற்றங்களையும் இரண்டு கட்டங்களாக அரங்கேற்றுகிறார்கள்.

1. முதற்கட்டமாக, அவர்கள் யாரைக் கொலை செய்யப் போகிறார்களோ அல்லது யார் மீது தாக்குதல் நடத்தப் போகிறார்களோ அவர்கள் மீது ஒன்று வெளிப்படையான தக்ஃபீரை பிரகடனம் செய்கிறார்கள்; அல்லது, அவர்களைக் கொலை செய்வது ஆகுமானதே என்பதற்கு மிகத் தளர்வானதும் நீதியற்றதுமான சாக்குபோக்குகளை முன்வைக்கிறார்கள். இதன் மூலம் அவர்களைக் கொலை செய்வதற்கான ‘சட்டபூர்வ ஏற்பினை’ மோசடியாக உருவாக்குகிறார்கள்.

2. அடுத்த கட்டமாக, அந்தக் கொலைகளையும் தாக்குதல்களையும் ஆகக் கொடூரமானதும் வக்கிரமானதுமான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து நடத்தி முடிக்கிறார்கள். அவற்றை அணு அணுவாக இரசித்து வீடியோ பதிவுகள் எடுத்து, ஸ்பெஷல் எஃபக்டுகள் சேர்த்து பொது வெளியில் பரப்புகிறார்கள். அவற்றுக்கு உரிமைகோரி அகங்காரத்துடன் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். உலகெங்குமுள்ள தமது ஆதரவாளர்களும் ஆங்காங்கே இதே போன்று படுகொலைகளையும் தாக்குதல்களையும் நிகழ்த்த வேண்டுமென உசுப்பேற்றி விடுகிறார்கள்.  இதுவெல்லாம் “இஸ்லாமிய அடிப்படையில் சரியானவை” என்றும், “இன்னும் சொல்வதானால் இதுதான் உண்மை இஸ்லாம்” என்றும் மூளைச்சலவை செய்கிறார்கள்.

இவ்விரு கட்டங்களையும் ஒரு முடிவுறாத நச்சுச் சுழற்சியில் மீண்டும் மீண்டும் அரங்கேற்றுகிறார்கள். தக்ஃபீரிகளின் முறைமையைப் புரிந்து கொள்வதற்கான சரியான சட்டகம் இதுதான். இதனை நன்கு மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.
ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பல்வேறு காரணங்களைக் கூறி மக்களையும், போரில் பிடிபடும் கைதிகளையும் ‘சட்ட பூர்வமாகவே’ கொலை செய்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொண்டு கடந்து செல்வோம்.

அவர்கள் நிகழ்த்தும் கொலைகளும் தாக்குதல்களும் “இஸ்லாமிய அடிப்படையில் சட்டபூர்வமானவை” என்ற அவர்களின் வாதத்திலுள்ள அபத்தத்தை எளிதில் விளக்குவதற்காக, அவர்களே மிகவும் பெருமையுடன் உரிமைகோரும் சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.

முதலாவதாக, தக்ஃபீரிகளின் “இமாம்” அபூ முஸ்அப் அல்-ஸர்காவி (ரஹ். ????) அவர்களின் லட்சணத்தைப் பார்ப்போம்.

// நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த “sectarian war” தான் ஈராக் ஆக்கிரமுப்புப் படைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. இந்த sectarian war இன் காரண கர்த்தாவான இமாம் (Anyhow I am going to call him Imam, you like it or not) ஸர்காவி (ரஹி) அவர்கள் ஈராக்கில் இருந்த முழு சுன்னி மக்களுக்கு எதிராக ஷீயாக்களும் இதர ஆயுத குழுக்களும் யுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஷீயாக்களின் கோயில்கள் மீதும் அவர்கள் கூடுமிடங்களிலும் குண்டு வைத்து தகர்த்தார். அதன் மூலம் முழு ஈராக்கையும் “political unrest” நிலைக்கு கொண்டு வந்ததன் மூலமே ஈராக்கில் அமெரிக்காவின் கைபொம்மைகளான எந்த தாகூத் அரசாலும் சிறிது காலம் கூட நிலைத்து நிற்க முடியவில்லை.//

மேற்கோள் காட்டப்பட்ட இப்பத்தியில் நீங்கள் சில முக்கிய பகுதிகளை உற்று கவனிக்க வேண்டும்.

// இந்த sectarian war இன் காரண கர்த்தாவான இமாம் (Anyhow I am going to call him Imam, you like it or not) ஸர்காவி (ரஹி) அவர்கள் ஈராக்கில் இருந்த முழு சுன்னி மக்களுக்கு எதிராக ஷீயாக்களும் இதர ஆயுத குழுக்களும் யுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஷீயாக்களின் கோயில்கள் மீதும் அவர்கள் கூடுமிடங்களிலும் குண்டு வைத்து தகர்த்தார்.//

“ஷியாக்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் சுன்னி முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கிறார்கள்; எனவே, இஸ்ரேலிய ஸியோனிஸ்டுகளை விடவும் இந்த ஷியாக்கள்தான் நமது முதன்மை எதிரிகள்” என்று முஷ்டியை முறுக்கும் எனது இலங்கை அஹ்லுஸ் சுன்னா சகோதரர்களும் ‘மத்திய கிழக்கு அரசியல் நிபுணர்களும்’ இவ்வார்த்தைகளை கொஞ்சம் காதுகளை அகலத் திறந்து கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

//இந்த sectarian war இன் காரண கர்த்தாவான இமாம் ஸர்காவி (ரஹி)//

//ஈராக்கில் இருந்த முழு சுன்னி மக்களுக்கு எதிராக ஷீயாக்களும் இதர ஆயுத குழுக்களும் யுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக//

//வேண்டுமென்றே ஷீயாக்களின் கோயில்கள் மீதும் அவர்கள் கூடுமிடங்களிலும் குண்டு வைத்து தகர்த்தார்//

உலகின் அப்பகுதியில் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் (உங்கள் வார்த்தைகளில் கூறினால்) ‘உட்பிரிவுவாதப் போர்’ இயற்கையாக உருவான ஒன்றா அல்லது ஏகாதிபத்தியவாதிகளும் தக்ஃபீரிகளும் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கியதா என்பதைப் புரிந்து கொள்வதற்கான அதிமுக்கிய சூட்சுமத்தை மேற்காணும் மேற்கோள்கள் சுருக்கமாக விளக்குகின்றன. புரிந்துகொள்ள மனமுள்ளோர் புரிந்து கொள்ளுங்கள்.

“இல்லை, நாங்கள் ஷியா-சுன்னா என அடித்துக் கொண்டுதான் சாவோம்” என்று அடம்பிடிப்பீர்கள் என்றால் அதற்கு நான் என்ன செய்வது, எக்கேடும் கெட்டுப் போங்க…!

சரி, மீண்டும் தக்ஃபீரிகள் முன்வைக்கும் தர்க்கத்தின் பக்கம் திரும்புவோம். ஷியா “கோயில்கள்” என்று குறிப்பிடுவதை கேட்டு யாரும் குழம்ப வேண்டாம்; ஷியாக்களின் பள்ளிவாசல்கள் தான் அவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. அதுதான், ஏற்கனவே ஷியாக்களை ‘காஃபிர்கள்’ என்று அறிவித்தாயிற்றே!

பிறகு அவர்களின் பள்ளிவாசல்களையெல்லாம் ‘கோயில்கள்’ என்று தானே அழைக்க முடியும்.  ச்சே…. எல்லாவற்றையும் விவரமாக விளக்கிச் சொன்னால்தான் உங்களுக்குப் புரிகிறது. என்னவோ போங்க.

“அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளை முறியடிக்க வேண்டுமென்றால், ஷியாக்களையும் சுன்னாக்களையும் வேண்டுமென்றே மோதவிட வேண்டும்.”

உங்கள் யாருக்கும் இராணுவ தந்திரம் பற்றி ஆனா ஆவன்னா கூடத் தெரியவில்லை. ஞான சூனியங்கள்! உங்களை எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு கொலை கூட செய்ய முடியாது… வெளங்கிரும்…

அறுபது எழுபது வருடம் பழையதாகி பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களை, மக்களை எல்லாம் தூர விலகிப் போகச் சொல்லிவிட்டு குண்டு வைத்து தகர்ப்பது போல் கொஞ்சமும் உறுத்தலின்றி மிக எளிதாகக் கூறுகின்றனர், “இமாம்” ஸர்காவி ஷியாக்களின் “கோயில்களையும்” ஒன்று கூடுமிடங்களையும் வேண்டுமென்றே குண்டுவைத்து தகர்த்ததார் என்பதாக.

நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் மக்கள் நிறைந்திருக்கும் நிலையில் மிகச் சக்தி வாய்ந்த கார் அல்லது மனித வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட “ஷியா காஃபிர்களை” கொன்று குவித்து நடத்தப்பட்ட “இஸ்லாமிய” இராணுவ தந்திரோபாய நடவடிக்கைகள் அவை.

இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் உங்களுக்கு “ஈமானை முறிக்கும் பத்துக் கோட்பாடுகள்” பற்றி தெரிந்திருக்க வேண்டும்; அடுத்து, இவையெல்லாம் எப்படி ‘இஸ்லாமிய ரீதியில் மிகச் சரியானவை’ என்பதற்கான ஆதாரங்கள் தெரிந்திருக்க வேண்டும்; இறுதியாக, கொஞ்சமாவது இராணுவ உத்திகள் பற்றிய ஞானம் வேண்டும்.”

இவை எதையுமே அறியாத நம்மைப் போன்ற மூடர்கள், “அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அணைத்துவிட முடியுமா”? நிச்சயம் முடியாது!

“இஸ்லாமிய அடிப்படையில் மிகச் சரியான, ஆதாரபூர்வமான தாக்குதல்கள்” என்று ISIS உரிமை கோரிய இன்னும் சிலவற்றை தொடரின் நான்காவது பதிவில் அலசுவோம்.

Related posts

Leave a Comment