கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்

நேற்று தான் நண்பர் பாரதியுடன் ஹைதராபாதில் உள்ள சார்மினார் போய் வந்தேன். இந்தோ – இஸ்லாமிய நகரப் பண்பாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியமான நகரம் ஹைதராபாத். ஆனால் அங்கு இருந்த வரலாற்று கட்டிடங்களை எல்லாம் பார்க்கும்போது ஏனோ வருத்தமும், அச்சமும் தான் மேலிட்டது. தற்கால அரசியல் சூழலை எல்லாம் பார்க்கும்போது இப்பண்பாட்டின் எதிர்காலத்திற்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வியே மேலெழுந்தது. சார்மினார் தூண்களை ஒட்டிய ஒரு சிறிய கோவிலும் அதைச் சுற்றி பேரிகேட்கள் போட்டு மூன்று, நான்கு காவல்துறை அதிகாரிகளும் இருந்தனர். சார்மினார் உண்மையில் இந்துக்கோவிலான பாக்கியலக்‌ஷ்மி கோவிலை இடித்துக்கட்டியது என்று சர்ச்சையைக் கிளப்புகிறார்களாம் இந்துத்துவவாதிகள். ராம நவமி போன்ற விழாக்கள் வரும்போது பெரிய, பெரிய பள்ளிவாசல்களெல்லாம் திரையிட்டு மறைக்கப்படுகிறது.

இது போன்ற தூலமான அச்சுறுத்தல்கள் ஒருபக்கம். இன்னொரு பக்கம் இந்துத்துவவாதிகள் பொது அரசியல் விவாதங்களில் எந்தளவு வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எல்லாவற்றையும் விட அது இன்னும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மோடியை விமர்சிக்கும் பலரும் கூட இன்று இந்துத்துவம் வகுத்திருக்கும் அரசியல் விவாத எல்லைகளுக்குள்ளேயே பேச வேண்டியிருக்கிறது. இது மிகவும் முக்கியம். நமது விவாதத்தின் எல்லைகளை யார் வகுக்கிறார்கள், அதன் terms ஐ யார் தீர்மானிக்கிறார்கள் என்பதே விவாதத்தில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது. உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose’ நாவலில் மத்திய கால ஐரோப்பாவின் கிறித்தவ மத விசாரணை சபைகளைப் பற்றி ஒரு பகுதி வரும். அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க எத்தகைய வாய்ப்பும் இல்லாத கையறுநிலையை மிக அழகாக படம்பிடித்திருப்பார் உம்பர்ட்டோ ஈக்கோ. அதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபருக்கு பேசும் வாய்ப்பு எல்லாம் வழங்கப்படும். ஆனால் எந்தெந்த சொற்களுக்கு என்னென்ன பொருள் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தில் மத விசாரணை சபை தான் இருக்கும். வட இந்திய ஆங்கில மீடியாக்களைப் பார்க்கும்போது The Name of the Rose இன் மத விசாரணை சபைகளும், அதன் நெறியாளர்களைப் பார்க்கும்போது மத்திய கால விசாரணை அதிகாரிகளும் தான் நியாபகத்திற்கு வருகிறார்கள்.

மீடியா நெறியாளர்கள் ஒரு விசாரணை அதிகாரி போன்று யார் தேசியத்திற்கு நம்பகமான சுயங்களாக இருக்கிறார்கள், எது தேசியத்தின் அதிகாரபூர்வமான அரசியல் கோட்பாடு, யார் யாரெல்லாம் அதை மீறும் Hereticகள், எது போலி மதச்சார்பின்மை, எது உண்மையான மதச்சார்பின்மை என்றெல்லாம் தீர்மானித்துக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் ஆட்டவிதிகளை தங்களுக்குச் சார்பாகவும், தங்களது எதிரிகளுக்கு disadvantage ஆகவும் கடுமையாக்கிக்கொண்டே செல்கிறார்கள்.

சுப்பிரமணிய சுவாமிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான Times Now நடத்திய இந்த விவாதத்தையே பாருங்கள். பிரகாஷ் ராஜின் இந்துத்துவ எதிர்ப்பு நேர்மையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தனது அரசியலை தீர்க்கமாக உரையாடும் வெளியே அங்கு அவருக்கு இல்லை. தனது வாதங்கள் எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் விவாத விதிகளால் disqualify செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறார். அந்த விவாத விதிகளுக்குள் நின்று அவரால் அந்த விவாதங்களை வெல்லவே முடியாது. இங்கு விவாதத்தை தீர்மானிக்கும் புள்ளி செக்குலர் தேசியவாதம். ‘இந்துத்துவத்தை எதிர்க்கும் நீங்கள் ஏன் இஸ்லாமிய அரசியலை விமர்சிப்பதில்லை?’, ’உங்களது நண்பர்களான உமர் காலித், ஷெஹ்லா ரஷீத் போன்றவர்கள் எல்லாம் மத அரசியல் நடக்கும் காஷ்மீர் இயக்கங்களை ஆதரிக்கிறார்களே? அதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?’ செக்குலர் தேசியவாதம் நிர்ணயிக்கும் விதிகளுக்குள் விவாதிக்கும் ஒரு லிபரல் இதில் தோற்கவே போகிறார்… அதுமட்டுமல்லாது அவர் அவ்விவாதத்தில் தோற்பதன் மூலம் சாதாரண இந்துக்களின் மனதில் ’தாங்கள்தான் உண்மையாக மைனாரிட்டி அப்பிஸிங் அரசியலால் victim ஆகியிருக்கிறோம்’ என்ற கருத்தும் அவர்களுக்குள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு இந்துத்துவாவை எதிர்க்கும் லிபரல்கள் தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்படும்போது அவர்கள் மையவாத நிலைபாடு எடுப்பதை நோக்கி தள்ளப்படுகிறார்கள். இப்போது காங்கிரசும், ராஹுல் காந்தியும் மதச்சார்பின்மை என்ற சொல்லாடலையே பிரயோகிப்பதில்லை. நமது பொது அரசியல் சொல்லாடல்களின் விதியை சமீபகாலத்தில் தீர்மானித்திருக்கும் இந்துத்துவர்களினால் இச்சொல் ஒரு கெட்ட வார்த்தையாக ஆக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர் நலன் என்றும் பேசுவதில்லை. ‘காங்கிரஸ் ஒரு முஸ்லிம் கட்சியாக பார்க்கப்பட்டது காங்கிரசுக்கு பாதகமாக அமைந்தது’ என்கிறார் சோனியா காந்தி. இப்போது அவர்கள் பேசுவதெல்லாம் ‘பல சமூகங்களுக்கும் இடையிலான நல்லுறவு’ என்பது மட்டும்தான். ’இந்திய லிபரலிசம்’ வந்தடைந்திருக்கும் புள்ளி இது.

இது இப்படியிருக்க ராமச்சந்திரா குஹா போன்ற எஸ்டாப்ளிஷ்மெண்ட் அறிவுஜீவிகள் அரசியல் போராட்டங்களில் புர்காவோடும் வரக்கூடாது, திரிசூலத்துடனும் வரக்கூடாது என்று பார்ப்பனியக் கொழுப்போடு கட்டுரை எழுதுகிறார்கள். இந்த மயிரை எழுதுவதகுதான் இவர்கள் தங்களை அறிவுஜீவிகள் என்று அழைத்துக்கொள்கிறார்களா என்று கோபம் வேறு வருகிறது. ’இந்திய லிபரலிசத்தின்’ பார்ப்பனியப்போக்கு இது.

இதை எல்லாம் எதிர்த்துப் போராடி விவாத மேசையை மாற்ற வேண்டிய பாராளுமன்ற இடதுசாரிகளான பிரகாஷ் காரத் போன்றவர்களோ பிஜேபியும், முஸ்லிம் லீக்கும் ஒன்றுதான் என்கிறார்கள், ஆர் எஸ் எஸும் பாப்புலர் ஃப்ரண்ட்டும் ஒன்றுதான் என்கிறார்கள். இப்படிதான் Center Left ஃபாசிஸ்ட்டுகள் வளர அனுமதிப்பார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்துத்துவவாதிகளுக்கு அமைப்பு பலம் இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தமிழ் வெகுஜனங்கள் இந்துத்துவத்தோடு முரண்படும் அவசியம் இருப்பதால் பிஜேபி எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கெனவே மேலாண்மையில் இருக்கும் கருத்தியலுக்கு உட்படாது ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பான Radical ஆன விவாத விதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கும் பெரியார் மரபும் இங்கு இருக்கிறது. அதனால் இங்கு ஓரளவு breathing space ஆவது இங்கு கிடைக்கிறது. இந்தியாவில் ஏனைய இடங்களில் எல்லாம் முஸ்லிம்களை எல்லோரும் disown செய்துகொண்டே இருக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களது அடையாளத்தின் மூலமாக இந்துத்துவவாதிகளால் தாக்கப்பட்டும், மதச்சார்பற்ற லிபரல்களால் தங்களது அடையாளத்தை துறந்து Incognito Mode உக்கு செல்லும்படியும் பணிக்கப்படுகிறார்கள்.

இன்னொரு விஷயம். The Name of the Rose நாவலை எழுதிய உம்பர்ட்டோ ஈக்கோ ஃபாசிஸத்தின் பொதுவான, நிரந்தரமான பண்புகளைப் பற்றிய தனது உர் ஃபாசிஸம் எனும் கட்டுரையில் ‘ஃபாசிஸம் எப்போதும் நவீனத்தை எதிர்க்கும். பாரம்பரியத்தை முன்னிறுத்தும்’ என்று சொல்வார். அது பொய்யாகிக்கொண்டு வருகிறது. மேற்கிலும் சரி, இந்தியாவிலும் சரி ஃபாசிஸம் தன்னை தொடர்ந்து நவீனமயப்படுத்திக்கொள்கிறது, Secularize ஆக்கிக்கொள்கிறது. கீதா பிரஸின் வெளியீடுகளில் ‘மாட்டுக்கறி தின்னும் சண்டாளன்’ என்றெல்லாம் எழுதும் இந்துத்துவம் அல்ல, இப்போது இருப்பது.

அமித் ஷா இன்னும் 50 வருடம் இந்தியாவை ஆளுவது தான் எங்களது திட்டம் என்று சொல்லியிருக்கிறார். எனக்கென்னவோ அது நடக்கும்போலத்தான தெரிகிறது…

Related posts

Leave a Comment