கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆணவத்திலிருந்து அவமானம் வரை: இஸ்ரேலை உலுக்கிய அந்த பத்து மணிநேரம்

Loading

[ALJAZEERA தளத்தில் வெளிவந்த From hubris to humiliation: The 10 hours that shocked Israel எனும் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.]

அறபு நாடுகளுடனான இயல்பான உறவு மற்றும் அரசியல் திட்டம்குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐ.நா. சபையில் உரையாற்றிய சில தினங்களிலேயே இஸ்ரேலுக்கு அரசியல்ரீதியாகவும் ராஜதந்திரரீதியாகவும் ஒரு மரண அடியைக் கொடுத்திருக்கிறது ஃபலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ். உச்சபட்ச வலிமையுடன் திகழும் அடக்குமுறை அரசின் மீதான, ஏதுமற்ற எளிய மக்களின் புறத்திலிருந்து நிகழ்த்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலால், ஒட்டுமொத்த இஸ்ரேல் அதிர்ச்சியிலும் ஃபலஸ்தீன் ஆராவாரத்திலும் உள்ளது. கடந்த சனிக்கிழமை (07/10/2023), ஃபலஸ்தீன ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ், காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் வான், கடல் மற்றும் நிலம் வழியாக மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, நன்கு செயல்படுத்தப்பட்ட மின்னல்வேகத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட்டன. மேலும், இஸ்ரேலிய இராணுவத்தையும் அந்நாட்டின் தெற்குப் பகுதிகளையும் நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீனப் போராளிகள் தாக்கினர். இதில் 600க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்; பல இஸ்ரேலிய வீரர்களும், பொதுமக்களும் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

ஹமாசின் இந்தத் தாக்குதலின் நோக்கங்கள் ஒன்றும் இரகசியமானவை அல்ல. அவற்றில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, சட்டவிரோதக் குடியேற்றம், ஃபலஸ்தீன மதச் சின்னங்களை — குறிப்பாக ஜெருசலத்தில் உள்ள அல்அக்ஸா இறையில்லத்தை — இழிவுபடுத்தியது போன்றவற்றுக்காக பதிலடி கொடுத்து தண்டிப்பது என்பது முதன்மையானது. இரண்டாவதாக, இஸ்ரேலின் இனவெறி ஆட்சியை ஆரத்தழுவி அதை இயல்பாக்கும் நடவடிக்கைகளுக்கு இசைந்துகொடுக்கும் சஊதி உள்ளிட்ட அண்டை அறபுத் தேசங்களுக்கு எச்சரிக்கை செய்திகொடுப்பதும், இறுதியாக, இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் பல ஃபலஸ்தீன அரசியல் கைதிகளை விடுவிக்கும் வகையிலான ‘பணயக்கைதி பரிமாற்றம்’ என்பதுமாகும்.

இருபது வருடங்களுக்கு மேலாக இஸ்ரேலியச் சிறையில் வாடிய ஹமாசின் தலைவர் யஹ்யா அஸ்சின்வார் இப்படியான கைதிகள் பரிமாற்றத்திலேயே விடுவிக்கப்பட்டார். மற்ற ஃபலஸ்தீனர்களைப் போலவே, இஸ்ரேலிய வன்முறையில் தனது மனைவி, மூன்று வயது மகள் மற்றும் ஒரு கைக்குழந்தையை ஹமாஸ் இராணுவப் பிரிவின் தலைவரான முஹம்மது ளைஃப் பறிகொடுத்துள்ளார். அதற்காகப் பழிவாங்கும் அம்சமும் இதில் தெளிவாக உள்ளது. இஸ்ரேலுக்கு, இந்தத் தாக்குதல் நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்; ஆனால், வரலாற்றுரீதியாக அது ஆச்சரியமானது இல்லை.

இஸ்ரேலின் தொழில்நுட்பமான ‘ஹுப்ரிஸ் ஐயன் டோம்’, எதிரிகளின் எப்பேர்பட்ட ஏவுகணைத் தாக்குதலையும் அனாயசமாக எதிர்கொள்ளும் என்று பெருமையடித்த இஸ்ரேலின் திமிர்பிடித்த தலைவர்கள், தற்போது தலைகுனிந்து நிற்கின்றனர். தங்களை யாரும் வெல்லவே முடியாது என்று இறுமாப்புடன் எதிரிகளை அவர்கள் தொடர்ந்து குறைத்தே மதிப்பிட்டனர். எனினும், 1973 அக்டோபரில் தொடுக்கப்பட்ட அதிரடி அறபுத் தாக்குதலுக்குப் பிறகு, ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக, அடுத்தடுத்து வந்த இஸ்ரேலியத் தலைவர்களுக்கு, மீண்டும்மீண்டும் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

1982இல் லெபனான் மீதான இஸ்ரேலியப் படையெடுப்பை அடுத்து, லெபனான் ஆற்றிய எதிர்வினை, 1980 மற்றும் 2000களில் ஃபலஸ்தீன இன்திஃபாளா எழுச்சி, ஐம்பது வருடங்களுக்கும் மேலான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்கள் ஆகிய எதுவுமே இஸ்ரேலியத் தலைவர்கள் எதிர்பார்க்காமல் நடந்தவைதாம். குறிப்பாக, ஹமாசின் இந்த அதிரடியான ஆபரேஷன் அல்-அக்ஸா ஃபிளட் தாக்குதலை, இஸ்ரேலிய இராணுவமும், அதன் சிவில் தலைமையும்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஹமாசின் இந்த வெற்றி, இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் இராணுவத்தின் தோல்வியை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. எங்கும் பரவிய ஒற்றர்கள், ஆளில்லா விமானங்கள், கண்காணிப்புத் தொழில்நுட்பம் போன்றவற்றைக் கொண்டதாக இஸ்ரேலின் அதிநவீன நெட்வொர்க் இருந்தபோதிலும், ஹமாசின் தாக்குதலைக் கண்டறிந்து முன்கூட்டியே தடுக்க அதனால் முடியவில்லை.

ஆனால், இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் அதன் உளவு மற்றும் இராணுவத் துறைகளின் தோல்விக்கும் அப்பாற்பட்டது; இஸ்ரேலுக்கு இதுவோர் அரசியல், உளவியல் பேரழிவு ஆகும். வெல்ல முடியாத அரசு என்று மார்தட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, இத்தாக்குதல் அதன் பலவீனத்தையும் படுமோசமான இயலாமையையும் காட்டியுள்ளது. ஃபலஸ்தீனை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, மத்தியக் கிழக்கு பகுதிக்கு தன்னை புதிய தலைமையாக ஆக்கிக்கொள்வதற்கான அதன் திட்டங்களுக்கும் இது பேரிடியாய் அமைந்துள்ளது.

இஸ்ரேலியர்கள் பயத்தில் தங்கள் வீடுகளையும், நகரங்களையும் விட்டு வெளியேறும் காட்சிகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர்களின் கூட்டுநினைவில் நிலைத்திருக்கும். தாக்குதல் நடத்தப்பட்ட அந்த நாள், இஸ்ரேலின் வரலாற்றில் மிக மோசமான நாள். ஒரு முழு அவமானத்தைத் தேடித்தந்த நாள்.

அசைக்க முடியாதவராக, ஆறாவது முறையாக அதிகார சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஆராவார பரப்புரையாளர் நெதன்யாகு, இனி எப்படி வாய்வார்த்தைகளால் ஜாலம் காண்பித்தாலும், இந்த அவமானத்தைத் துடைக்கவோ மாற்றவோ முடியாது. சனிக்கிழமை காலை உலகம் கண்டதை மறக்கச்செய்ய, இஸ்ரேலுக்கு இனி ஒரு வாய்ப்பு கிடைக்காது. வெறித்தனமான இஸ்ரேலின் வீண் மாயைகளில் இடி இறங்கியுள்ளது.

கடந்த காலங்களில் நடந்ததுபோல், பெரும் இராணுவத் தாக்குதலை மேற்கொண்டு, தனது இழந்த செல்வாக்கை மீட்க இஸ்ரேல் முயற்சிக்கும். ஃபலஸ்தீனர்களுக்கு பெரும் சேதங்களையும், எண்ணற்ற உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய குண்டுவீச்சுகளை இஸ்ரேல் மேற்கொள்ளும். மேலும், படுகொலைத் தாக்குதல்களை நிகழ்த்தும். கடந்த காலங்களைப்போலவே, இது மீண்டும்மீண்டும் எத்தனை முறை நிகழ்ந்தாலும், ஃபலஸ்தீனியர்களின் விடுதலை உணர்வை அதனால் எதுவும் செய்துவிட முடியாது.

அதனால் மற்றொரு வழியில், ஹமாஸ் உள்ளிட பிற ஃபலஸ்தீன இயக்கங்களை முடிவுக்குக் கொண்டுவரப்போகிறோம் என்றுச் சொல்லி, கீழை காஸா பகுதியிலும் மேற்குக் கரையிலும் உள்ள ஃபலஸ்தீன நகரங்களில் தனது இராணுவத்தை இஸ்ரேல் மீண்டும் நிறுத்தக்கூடும். முழு ஃபலஸ்தீன தேசிய ஆணையத்தை முற்றாக அழித்து, ஃபலஸ்தீனிய நிலத்தை முழுமையாகச் செரிக்க நினைக்கும் ‘அகண்ட இஸ்ரேல்வாதிகள்’ கோட்பாட்டாளர்கள் மற்றும் இஸ்ரேலின் ஆளும் கூட்டணியின் ஆசையும் அதுதான். ஆனால், அப்படிச் செய்தால் அது ஒரு பெருந்தவறாக இஸ்ரேலுக்கு அமையும். உலக அரங்கில், முன் எப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் தனிமைப்படும். இதுவரை நெதன்யாகுவை ஆதரித்த மேற்கத்தியத் தலைவர்கள் கூட, இஸ்ரேலிய அரசாங்கத்தைவிட்டு தங்களைத் தூர விலக்கிக்கொள்ளத் தொடங்கலாம்.

ஏற்கனவே, இஸ்ரேலுக்கு அவமானத்திலும் அவமானத்தை பெற்றுத்தந்த இந்தத் தாக்குதல், இஸ்ரேலை ராஜதந்திரரீதியிலும் ஆட்சிரீதியிலும் ஏளனப் பார்வைக்கு ஆளாகியுள்ளது. மத்தியக் கிழக்கின் முடிசூடா மன்னனாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்கான இஸ்ரேலின் முயற்சிக்கு இது மிகப்பெரும் சறுக்கல். அசைக்க முடியாது என்று கருதப்பட்ட இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கிக்கொண்ட அறபு ஆட்சியாளர்கள், இப்போது முட்டாள்களைப் போல் காட்சியளிக்கிறார்கள். இதனால், தனது தோல்வியை மாற்றியமைக்க நெதன்யாகு அளவுக்கு அதிகமாகவே எதிர்வினையாற்றுவார். அப்படிச் செய்யும்போது, தனது புதிய அறபுப் நாட்டுப் பங்காளிகளிடமிருந்து மேலும் அந்நியப்படுவார்.

இத்தகைய எதிர்வினைகள் எந்த வழியில் சென்றாலும், நெதன்யாகுவின் அரசியல் அத்தியாயம் தோல்விலேயே முடியும். அதேசமயம், அவமானப்பட்டும் மண்டியிட்டும் வாழ்வதைவிட நீதிக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தமது சொந்தக்காலில் நின்று மடிவதே தம் இயல்பு என்பதை ஃபலஸ்தீனர்கள் மீண்டுமொருமுறை தெளிவுபடுத்தியுள்ளனர். இஸ்ரேலர்கள், வரலாற்றிலிருந்து படிப்பினை பெற வேண்டிய நேரம் இது.

Related posts

Leave a Comment