நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: முஸ்லிம் ஸ்பெயின் அழிப்பும், நிகழ்கால இந்தியாவும்

Loading

ஒரு படைப்பு அதன் இலக்கியச் சுவைக்காகவும், அது உண்டாக்கும் கிளர்விற்காகவும் வாசிக்கப்பதோடு, அது பேசும் அரசியலுக்காகவும்தான் மனங்கொள்ளப்படுகின்றது. கிரானடா நாவல் பேசும் அரசியலின் தகிப்பு நம்மை முழுமையாக தன் வசம் எடுத்துக்கொள்கின்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் இன்றைய தினத்திற்குள்ளும் அதன் கணத் துகள்களுக்குள்ளும் சொரிகின்றது. சிலுவையின் இடத்தை காவி அனிச்சையாகவே மாற்றீடு செய்துகொள்கின்றது. நிகழ்கால இந்தியாவுடன் கிரானடாவின் பனுவலை இணைத்துப் பார்க்காமல் வாசிப்பதென்பது ஒரு வகையில் கள்ள வாசிப்பில்தான் சேர்த்தி.

கிரானடா ஒன்றாம் நாவலின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் சலீமாவின் மீதான மத விசாரணையையும், அதன் பிறகு கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த கஷ்டிலியப் படையாளிகளால் அவள் கொலைக்களத்தை நோக்கி அழைத்துச் செல்லும் படலத்தையும் வாசித்துக்கொண்டிருக்கும் நாளில்தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளியாகின்றது. கர்நாடகக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கான மாநில அரசின் தடையை உறுதிப்படுத்திய தீர்ப்புதான் அது. இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஓர் அத்தியாயம் தனது கூட்டாளியை இரத்தக் கவிச்சி மாறாமல் நோக்கி புன்னகைத்துப் புளகமெய்திய தருணம்.

“உனது புழுதியில் சஜ்தாவின் (சிரம் பணிதல்) தடங்கள் மறைந்துக் கிடக்கின்றன. உனது புலரிக்காற்றிலோ தொழுகைக்கான மௌன அழைப்பொலிகள்” ஸ்பெயினைப் பற்றி பெருங்கவி அல்லாமா முஹம்மது இக்பாலின் துயரம் ததும்பிய வரிகளினூடாக ஐநூறு ஆண்டுகளின் பேரடுக்கு நம்மைத் திணறடித்து எழுகின்றது.

அம்மணமாக ஓடிவரும் ஒரு பெண்ணோடு தொடங்கி, மத விசாரணையின் நிறைவில் உயிருடன் கொளுத்த அழைத்துச் செல்லப்படும் சலீமாவோடு நிறைவடைகின்றது கிரானடா நாவலின் முதல் தொகுதி.

குஜராத், கஷ்மீர், தில்லி அடங்கலாக நாடு முழுக்க முஸ்லிம்களை நர வேட்டையாடிக் கொண்டிருக்கும்போதே “சப்கா சாத் சப்கா விகாஸ்” (எல்லோருடனும் எல்லோருக்குமான வளர்ச்சி) என ஆளுங்கட்சியால் எப்படி முழங்க முடிகின்றதோ அதேபோல, ஸ்பெயின் முஸ்லிம்களின் அனைத்து வித பாதுகாப்புக்குமான சட்ட ரீதியான உத்திரவாதத்தை அளித்துக்கொண்டே ஆங்காங்கே மொத்தமாகவும் சில்லரையாகவும் தற்செயலாக நடந்தது எனத் தோன்றும்படியாக அதன் ஆட்சியாளர்களால் அவர்கள் துடைத்தழிக்கப்படுகின்றனர்.

கஷ்டிலிய ஆக்கிரமிப்பு காட்டுத்தீயாகி எல்லாப் பகுதியிலும் சுற்றி வளைத்த நிலையில், ஃபெர்டினாண்டு & இசபெல்லா இணையரின் அதிகாரம் என்ற நெடிய மலையிடமிருந்து, பற்றிப் படர்ந்து வருகின்றன இன அழித்தொழிப்பின் கொடுங்கரங்கள். அந்த இழிவை எதிர்கொள்ள அகப்பை, கரண்டி, அரிவாள்மனை என்ற சமையலறைத் தளவாடங்களையும் உழு கருவிகளையும் துழாவுகின்றனர். அந்த நேரத்து கசாயத்தைக் காய்ச்சி முதலும் முடிவுமான முயற்சியைத் தொடங்குகின்றனர் அங்குள்ள முஸ்லிம்கள்.

வெகுமக்களின் ஏற்பின் வழியாக மாபெரும் வலைப்பின்னலையும் வல்லமையையும் ஒருங்கே கொண்டமைந்த அதிகாரத்தையும், அதன் வேர்க்கால்களையும் பற்றிய அறிதல், புரிதல் எதுவுமில்லை. தெருமுனைப் போராட்டங்கள் வழியாகவும், இன்னும் ஒருபடி மேலே போய் தனியாள் அழித்தொழிப்பு, தெருச் சண்டை என்ற செயல்முறைகளின் வழியாகவும் மட்டுமே இந்துத்துவ நாஜிசத்தைத் தகர்த்துவிடலாம் என்ற மூடநம்பிக்கையில் திளைக்கும் சில இளைஞர்களைப் போலவேதான் அங்கும் நடந்திருக்கின்றது. மலைகளிலும் பொதும்புகளிலும் கொஞ்சம் பேர் கரந்தடி தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். ஆனால் அவை எதுவும் கஷ்டிலியர்களிடமிருந்து கிரானடாவை ஸ்பெயினைக் காத்திட இயலவில்லை.

நாம் பெரிய தடுப்பரண்களாக, காக்கும் கலன்களாக கருதிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றம், அரசியல் யாப்பு, நீதிமன்றம் , மனித உரிமை, ஊடகம் என அனைத்தும் யானைக்காலடி புல் போல நசுங்கி மடிகின்றன. யார் கண்களையும் கட்டாமலேயே எல்லோரையும் சாட்சியாக்கி நிறுத்தி முழுப் பகல் வெளிச்சத்தில் காப்பரண்களையே கொலைக் கருவிகளாய் உருமாற்றுகின்றது சிலுவை/ இந்துத்துவ இரசவாதம்.

கஷ்டிலிய ஆக்கிரமிப்பின் தீய்ந்த நெடி கிரானடாவை மூச்சடைக்க வைத்துக் கொண்டிருக்கும்போது, தங்களிடம் எஞ்சியிருக்கும் வாழ்வின் மிச்ச சொச்ச உயிர்த்தடங்களில் ஆசுவாசங்கொள்கின்றது சமூகம். கஷ்டிலிய ஆக்கிரமிப்பின் செய்திகள் கூடிக்கூடி வர அபூ ஜஅஃபர் என்ற மனிதர் தன்னைச் சுற்றி நடப்பவைகளைத் தன் எளிய எண்ணங்களின் உரைகல்லில் அவ்வப்போது உரைத்துப் பார்க்கின்றார். வெய்யில் காய்ந்தால் அதன் பின் மழையும் வரும்தானே என்ற சராசரி எதிர்பார்ப்பின் ஓடமாக வாழ்க்கை நகர்கின்றது. நாட்கள் எதுவும் தன் பிடிக்குள்ளும் விருப்பங்களுக்குள்ளும் நிற்கப் போவதில்லை என உணரும் ஒரு பொழுதில் அவர் தன் நம்பிக்கையை முதலில் இழக்கின்றார் கூடவே தன் உயிரையும்.

இங்கு அபூ ஜஅஃபர் என்பது பெருங்கடலிலிருந்து அள்ளப்பட்ட ஒரு சிரங்கை நீர். ஸ்பெயினைப் போலவே இந்தியாவிலும் கோடிக்கணக்கான அபூ ஜஅஃபர்கள்.

***

திருச்சிராப்பள்ளியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மறுமலர்ச்சி’ என்ற முஸ்லிம் லீக் சார்பு வார இதழில் 35 வருடங்களுக்கு முன்னர் ஒரு கேள்வி விடை வெளி வந்திருந்தது. அதில் இந்தியாவில் பாஜக ஆட்சியமைக்குமா என்றொரு கேள்வி. “அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அதன் பிறகு என்ன உறவு என்பதை தீர்மானிக்கலாம்” என்று பதிலளிக்கப்பட்டிருந்தது. மறுமலர்ச்சி இதழில் இந்தக் கேள்வி விடை வெளியான காலகட்டத்தில்தான் “முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம் – கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது” என்ற சிற்றேடும் எழுதி வெளியிடப்பட்டது (ஆசிரியர்: வி.டி.இராஜசேகர், தமிழாக்கம்: மு. குலாம் முகம்மது).

அந்தக் குறுநூலில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கின்றது:

“உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாப்பின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?

இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை. அதாவது, இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர் இந்த இந்து வெறியர்கள்.”

இந்தத் துண்டறிக்கை வெளிவந்திருக்கும்போது, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டிருக்கவில்லை. இதை எழுதி 35 ஆண்டுகளுக்குள் தீர்க்கதரிசியின் எதிர்வுபோல ஒரு சொல் விடாமல் அனைத்தும் அவலத்திலும் கசப்பிலும் தோய்ந்த பேருண்மையாகிவிட்டன.

அத்தைக்கு மீசையும் தாடியும் வளர்ந்து வழிந்து கொண்டிருக்கும்போது அபூ ஜஅஃபர்கள்,

“எல்லாம் அல்லாஹ் பாத்துக்குவான்”

“சாதி வேறுபாடுகளைத் தாண்டி அவர்களால் ஒன்றிணைய முடியாது”

“இராமர் கோயிலைக் கட்டீட்டா அதோட அவன் அரசியல் முடிஞ்சிடும்”

“ஆட்சி அதிகாரத்துக்கு வர்ற வரைக்கும்தான் கலவரம் பண்ணுவான்.”

“அவன்தான் நாடியவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கின்றான். நாடியவர்களிடமிருந்து அதைப் பறிக்கின்றான்”

“நம்ம கிட்டயே ஒத்தும இல்லியே”

“நம்ம ஈமான் சரியில்ல”

“எல்லோரும் அவனவன் வேலையப் பாத்துக்கிட்டு இருக்கும்போது ஒனக்கு மட்டும் என்ன பிரச்சின?”

“எல்லாத்துக்கும் என்ன நடக்குதோ அதுதான் நமக்கும் நடக்கும்”

கிரானடா நாவலின் அபூ ஜஅஃபரைப் போலவேதான் கண்கள் திறந்திருக்க வாய் பிளந்திருக்க இந்து ராஷ்டிரம் தூலமாகித் துலங்கி வரவர இங்குள்ள அபூ ஜஅஃபர்களின் அறிவும் மனதும் கைவிடப்பட்ட அம்மண முடிவை அள்ளியணைத்துக்கொள்கின்றன.

***

வணக்க வழிபாடு, பிறப்பு, இறப்பு, திருமணச் சடங்குகள், பெருநாள், பள்ளிவாயில், பண்பாடு, ஆயுதம், பொதுக் குளியலறை என எல்லா உரிமைகளும் உடைமைகளும் வெங்காயத்தின் தோல் உரிக்கப்படுவதைப் போன்று ஒவ்வொன்றாக ஸ்பெயின் முஸ்லிம்களிடமிருந்து கழற்றி எடுக்கப்படுகின்றன.

ஸ்பெயின் முஸ்லிமைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து நெருப்பிலிட்டுக் கொல்வதற்கான காரணமாக அவன்/அவளிடம் இருக்கும் இஸ்லாமிய இறை நம்பிக்கை ஒன்றையே போதுமாக்குகின்ற இடத்திற்கு வந்து சேருகின்றன அங்குள்ள அரசின் மத விசாரணைகள்.

வாழ்வின் எல்லா வண்ணங்களுடனும் விரிந்து மலர்ந்து கொண்டிருக்கும் பன்மலர் நந்தவனமான ஸ்பெயினை, பகலை அந்தி இருள் கவ்விப்பிடிப்பது போல தனது அறியாமையும் வன்மமும் கலந்த இருளால் விழுங்கிப் போடுகின்றது ஃபெர்டினண்டு – இசபெல்லா ஆட்சி.

ஒரு கண்டத்தட்டு நகர்த்தப்படும்போது அதன் அதிர்வலையை ஏனைய கண்டத்தட்டுகளும் பெறுவதைப்போலவே இந்தியத் துணைக் கண்டமும் அதன் வாழும் சாட்சியாக நிற்கின்றது.

ஸ்பெயினை எரித்த சிலுவையின் வன்ம தொடர்ச்சியால் எனது ஊரான காயல்பட்டினமும் மூன்று முறை எரித்துச் சூறையாடப்பட்டிருக்கின்றது. அதனால்தான் கிரானடா நாவல் இன்னும் நெருக்கமான இடத்திலிருந்து கொண்டு உலுக்குகின்றது.

ஐரோப்பாவை உலுக்கிய சிலுவைப் போரின் தொடர்ச்சியைத்தான் ஃபெர்டினண்டும் இசபெல்லாவும் ஸ்பெயினுக்கு எடுத்துச் சென்றனர். 1492ல் நடந்த ஸ்பெயினின் வீழ்ச்சியோடு சிலுவைப் போர் நெருப்பானது ஆசிய கண்டத்திற்கு போர்த்துக்கல் தேசத்தால் கடத்தப்படுகின்றது. மேலும் சில நூற்றாண்டுகளுக்கு சிலுவை நெருப்பு நின்று எரிந்தது. 1496ல் வாஸ்கோடகாமா அந்த வன்மத்தைச் சுமந்தவனாக கேரளக் கரையினில் வந்திறங்குகின்றான். அவன் வந்திறங்கிய கால் நூற்றாண்டுகளுக்குள் சிலுவைப் போர் காயல்பட்டினம் உள்ளிட்ட தமிழகக் கரையையும் கருக்கிப்போட்டது. சலீமாவைப் போலவே பழவேற்காடு தொடங்கி கோவா, இலங்கை வரை போர்த்துக்கீசியரின் மத விசாரணை கொலைப் படலத்திற்குள் பட்டு மாள்கின்றனர் மனிதர்கள். அவர்களைப் பற்றிய எண்ணிக்கையும் இல்லை, கணக்குமில்லை. இந்தியக் கரைகளில் நடந்த அந்தக் காலனியாதிக்கத் தடங்களை அறிந்திட போர்த்துக்கல்லின் ஆவணங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவலம்.

காலத்தின் அடித்தட்டில் பாசி பிடித்துக் கிடக்கும் வரலாற்றின் சங்கேதக் குறியீடுகளில் ஒளிந்திருக்கும் ஓர்மைகளையும் இன்ப துன்பங்களையும் பொருத்தி வடிவமாக்கி எழுப்பி நிறுத்த புனைவினால்தான் இயலும். அதை ரள்வா ஆஷூர் எல்லா நிலைகளிலும் சாதித்துள்ளார். அந்த வகையில் இன்றைய இந்தியச் சூழலுக்கு இந்த நாவலின் வரவு பெரும் கொடையே. நாவலை அறபி மூலத்திலிருந்து கச்சிதமாகத் தமிழாக்கியிருக்கின்றார் முனைவர் பீ.எம்.எம். இர்ஃபான். இம்முக்கதைகளின் மீதமுள்ள இரு தொகுதிகளும் விரைவில் வெளிவர வேண்டும்.

பயணமொன்றில்தான் கிரானடா நாவலை நான் வாசிக்க நேர்ந்தது. அதைப் பார்த்த இளம் நண்பர்கள் சிலர் உரையாடலைத் தொடங்கினர். காவி இந்தியா ஸ்பெயின் எனப் பேச்சு தீவிரமாகியது. நான் இடையிட்டு, “இன்றைய சிக்கலை நாம் மிக அமுதச் சுருக்கமாகப் புரிந்துகொள்ள வி.டி.இராஜசேகரின் அந்த சிற்றேட்டைப் படியுங்கள். இணையத்தில் இருக்கின்றது. நான் வாட்ஸ்அப்பில் வேண்டுமென்றால் அனுப்புகின்றேன்” எனச் சொன்னவுடன் பதறிவிட்டார்கள். காரணம் கேட்டதற்கு, அரசாங்கம் எல்லாத்தையும் வாட்ச் பண்ணுதாம்.

சிலுவைக்காரர்கள், இந்துத்துவ நாஜிகள் உள்ளிட்ட ஆதிக்க ஆற்றல்கள் எப்போதும் தங்கள் இரையை வீழ்த்துவதில் அவசரங்காட்டுவதில்லை. தாங்கள் வீசியிருக்கும் தூண்டிலை முழுமையாக இரை மீன் கவ்வுவதற்கு நூறு ஆண்டுகள் ஆனாலும் சரியே. ஆழ்ந்த மூச்செடுத்து அவை காத்திருக்கின்றன.

அது தன் கொடுவாளை நம் கழுத்தில் இறக்கும் முன்னர் வலியை நாம் உணரா வண்ணம் நமது நம்பிக்கையையும் துணிவையும்தான் முதலில் போக்கடிக்கும். தூண்டிலில்தான் தன் இரையிருக்கின்றது என நம்பும் மீனைப்போலவே நாமும் கொடுவாளுக்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் நாளில் வேட்டை இனிதே முடிவிற்கு வந்து விடுகின்றது. இந்த ஏற்பாடுகள் எதுவும் இருளின் மறைவுகளில் ஒன்றும் நடக்கவில்லை. இந்தத் துன்பியல் நாடகத்தின் பார்வையாளர்களே பல நேரங்களில் அதன் பங்காளிகளாகவும் மாற்றப்படுகின்றனர்.

காவி இருள் கவ்வியிருக்கும் இன்றைய இந்திய அரசியலைப் பற்றி மிகவும் ஆதங்கத்துடனும், அதே சமயம் வல்லடி வாதமொன்றுடனும் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார் தாராளவாதப் போக்குடைய எனது இலக்கிய நண்பரொருவர். அவர் சொன்னதின் சாறு இதுதான், “பஷீர்! நாட்டின் வளத்தைச் சுரண்டும் தங்களின் கொள்ளைப்படலத்தை மறைப்பதற்காக இந்துத்துவ நாஜிகள் மதவெறியைக் கையிலெடுத்திருக்கின்றனர். இது தெரியாமல் உன்னைப் போன்றவர்கள் தட்டையாக எளிமையாக சமூக ஊடகங்களில் மதச் சண்டை போடுகின்றீர்கள்.”

மேற்கண்ட எனது நண்பர் மட்டுமல்ல இந்து, முஸ்லிம், இடது தாராளவாதிகளிடமும், இடதுசாரிகளிடமும் இப்படிப்பட்டக் கண்ணோட்டக் குளறுபடி இருக்கின்றது. பார்ப்பனர்கள் உள்ளிட்ட இந்து ஆதிக்க சாதியினர் இந்தியாவில் இஸ்லாமின் வாழ்வை தங்களின் இருப்பை அசைக்கும் அச்சுறுத்துலாக எண்ணித்தான் தொழிற்படுகின்றனர்.

குளித்தறியாத சிலுவைப் படையாளிகள் ஸ்பெயினின் குளியல் கூடங்களை மூடுகின்றனர். அம்மணத்தை வணங்குவோர் ஹிஜாபுக்குத் தடை போடுகின்றனர். ஒரு சித்தாந்தம் தனது முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டுதான் தன்னுடன் வாழும் மக்களைக் கொன்றொழிக்கும் பெருந்திட்டத்தில் அங்கமாகுமாறு எல்லோரையும் அழைக்கின்றது. ஒளிவு மறைவற்ற பகலைப்போல தெளிவான போர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதப் போரல்ல. அழுக்கிற்கும் தூய்மைக்கும், மானத்திற்கும் மானக்கேட்டிற்கும், பொய்மைக்கும் மெய்ம்மைக்கும் இடையேயான போர்!

***

முஸ்லிமல்லாத ஏனைய இந்தியக் குடிமக்களிடம் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

இந்திய நிலப்பரப்பை முதன்முதலாக காலனியாதிக்கத்திற்கு உள்ளாக்கிய வாஸ்கோடகாமா அதற்கு முன்னதாக கடலோர முஸ்லிம்களை அவர்களின் வணிகத்துடன் வீழ்த்தினான். பிரிட்டீசாரிடம் நவாப் சிராஜுத் தவ்லா பெற்ற தோல்விதான் இந்தியாவை இரண்டு நூறாண்டுகள் கிழக்கிந்திய கம்பெனியின் காலனிய ஆட்சிக்குள் தள்ளியது. இன்றைய காவி இந்தியாவின் முதல் இலக்கு முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால், முஸ்லிம்களை வீழ்த்திய பிறகு எஞ்சியிருக்கும் ஒவ்வொரு இந்தியரின் படுக்கையறைக்குள்ளும் அவர்கள் கடந்து வரப்போவது உறுதி.

தற்கால இந்தியச் சூழலுடன் பல வகையிலும் ஒத்துப்போகக்கூடிய ஸ்பெயினின் வரலாறு குறைந்த அளவு 13ம் நூற்றாண்டிலிருந்தாவது வாசிக்கப்பட வேண்டும். ஸ்பெயினை கஷ்டிலியப் படையினர் வஞ்சகத்திலும் கொடூரத்திலும் ஆழ்த்திக் கைப்பற்றியதைப் போலில்லாமல், கத்தோலிக்க ஸ்பெயினை முஸ்லிம்கள் தம் நன்னடத்தைகளின் வழியாகத்தான் ஆட்கொண்டனர். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் நெடிய சாதனைகள் புரிந்தவாறே இராஜாளியைப்போல ஸ்பெயினின் கிளைகளில் கூடுகட்டி குடியிருந்த முஸ்லிம்கள் நாணலைப்போல தீய்ந்து போனது ஏன்?

யூதர்கள் போதும்போதுமென்று சொன்னாலும் ஹோலோகாஸ்டிற்காக இன்னமும் மன்னிப்புக் கேட்பதை ஜெர்மனி விட்டபாடில்லை. கிரானடாவை கஷ்டிலியர்கள் பறித்ததற்கும் நமக்குமிடையே ஐநூறு ஆண்டுகள் உதிர்ந்திருக்கின்றன. இவ்வளவு பெரிய காலக்குவியலிலிருந்து ஒரு மன்னிப்போ பச்சாதாபமோ இழப்பீடோ என ஓர் இலைகூட துளிர்க்கவில்லையே?

Related posts

Leave a Comment