Uncategorized 

தசவ்வுஃப்பின் தோற்றமும் வளர்ச்சியும்

Loading

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போல இஸ்லாத்தின் நிழலில் உருவாகியதே தசவ்வுஃப் கலை. அது பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சிலர் தசவ்வுஃப் ஒரு இஸ்லாமியக் கலை என்பதையே ஏற்க மறுத்து, இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில் கிரேக்க தத்துவம், பாரசிகப் பண்பாடு ஆகியவற்றின் தாக்கம் காரணமாகத் தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு கலையாக இதைக் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு தசவ்வுஃப் தவறாகப் புரியப்படுவதற்கும், அறிமுகப்படுத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்த அம்சங்கள் பற்றி ஆராய்வது ஒரு நீண்ட விளக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்லும். சுருங்கக்கூறின், தசவ்வுஃப் அல்லது சூஃபி என்ற பதம் சிலபோது ‘Mysticism’ என்ற பதப் பிரயோகத்தோடு இணைத்துப் பேசப்படுதல், தசவ்வுஃபின் பெயரால் பிரபலப்படுத்தப்படும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணான கருத்துகள், சூஃபி தரீக்காக்களின் சில செயல்பாடுகள் போன்றவை தசவ்வுஃப் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

தசவ்வுஃப் என்ற கலையைக் குறிக்க கையாளப்படும் சூஃபித்துவம் போன்ற பதங்கள் உண்மையில் தசவ்வுஃப் என்ற பதம் புலப்படுத்தும் கருத்துகளைக் குறிக்கப் பொருத்தமானவை அல்ல. ‘தசவ்வுஃப்’ என்ற கலைக்கான அடிப்படைகள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயே காணப்பட்டன. இஸ்லாமிய வணக்கங்கள், கிரியைகள் அனைத்தும் இரு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. ஒன்று, மனிதனின் புற உறுப்புக்களோடு தொடர்புடைய, புலன்களுக்குப் புலப்படும் வகையிலான புறக் கிரியைகள். மற்றது, உள்ளத்தோடும் ஆத்மாவோடும் தொடர்புடைய, புலன்களுக்குப் புலப்படாத அகக் கிரியைகள்.

உதாரணமாக, தொழுகை பற்றிக் குறிப்பிடும் குர்ஆன், ருகூஃ, சுஜுது போன்ற புறக்கிரியைகள் பற்றி மட்டுமன்றி உள்ளத்தோடு தொடர்புடைய இறையச்சம், பணிவு, உளத்தூய்மை ஆகிய அம்சங்களையும் குறிப்பிடுகின்றது. நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களோடு தொடர்புடைய கிரியைகளை குர்ஆன் விளக்கும்போது அவற்றுள் உள்ளடங்கியுள்ள மனிதனின் உள்ளத்தையும் ஆத்மாவோடு தொடர்புடைய அம்சங்களையும் விளக்குகின்றது.

இதுபோலவே எல்லா வகையான வணக்கங்கள், கிரியைகள் பற்றி விளக்கும்போதும் அவற்றுடன் தொடர்புடைய உளநிலை பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகின்றது. புறக் கிரியைகளோடு தொடர்புடைய சட்டவிதிகளை குர்ஆன், சுன்னாவின் ஒளியில் விளக்கும் கலையை பிக்ஹுள்-ளாஹிர் (புறம் சார்ந்த அல்லது வெளிப்படையான பிக்ஹ்) என்பதாக நாம் அழைக்கிறோம். அதேசமயம், புறக் கிரியைகளோடு தொடர்புடைய உள்ளம் அதன் தன்மை, செயல்பாடுகள், உளத்தூய்மை, பரிசுத்தமான எண்ணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய விதிகளை விளக்கும் கலையை பிக்ஹுல் பாதின் (மறைவான பிக்ஹ்) எனலாம். இந்த பிக்ஹ் பாதினே தசவ்வுஃப் ஆகும்.

நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் குர்ஆன், பின்வரும் வகையில் அதனை விளக்குகிறது. எழுத்தறிவில்லாத மக்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரைத் தெரிவுசெய்து அவன் அனுப்பி வைத்தான். அவர்கள் அதற்கு முன்னர் பகிரங்கமாக வழிகேட்டிலிருந்தனர். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பித்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.
(அல்குர்ஆன் 62:2)

மக்களுக்கு திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்தல், அவர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் போதித்து நெறிப்படுத்துதல், அவர்களுடைய உள்ளங்களின் கறைபோக்கி மாசகற்றித் தூய்மைப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய பணிகள் பற்றி இங்கு குறிப்பிடப்படுகிறது. இவற்றுள் உள்ளத்தை தூய்மைப்படுத்துதல் (தஸ்கியதுந் நஃப்ஸ்) என்ற பணியினடியாக வளர்ந்த ஒரு கலையே தசவ்வுஃப். எனவே, தசவ்வுஃப் என்பது மக்களின் உள்ளங்களில் படிந்துள்ள கறைகளையும் மாசுகளையும் அகற்றிப் புனிதப்படுத்தி, இறை திருப்தியைப் பெறும் நிலைக்கு அதனை உயர்த்தும் தஸ்கியதுந் நஃப்ஸின் வழிமுறைகள் பற்றி விளக்கும் கலையாகும்.

நபி (ஸல்) அவர்களது சமூகத்திற்கு ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு மனிதரின் உருவில் வந்து, சன்மார்க்கம் பற்றிய மூன்று வினாக்களைக் கேட்க, அதற்கு நபிகளார் பதில் பகர்கின்றார்கள். முதலில் இஸ்லாம் பற்றியும், இரண்டாவது ஈமான் என்றால் என்ன என்பது பற்றியும் வினவ நபியவர்கள் அது பற்றி விளக்குகிறார்கள். மூன்றாவதாக, இஹ்ஸான் என்றால் என்னவென்று கேட்கப்பட, ‘நீர் இறைவனைக் காணுவது போன்று அவனை வணங்குவதாகும். ஏனெனில் நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்க்கின்றான்’. இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் ஈமானின் அடிப்படையில் அகீதாவும், இஸ்லாமியக் கிரியைகளின் அடிப்படையில் ஷரீஆவும், இஹ்ஸானின் அடிப்படையில் தசவ்வுஃப்பும் இஸ்லாமியக் கலைகளின் முக்கியப் பிரிவுகளாக வளர்ச்சியடைந்துள்ளன.

பிற்காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் தோன்றி வளர்ந்த ஹதீஸ், ஃபிக்ஹ், தப்ஸீர் போன்ற கலைகளுக்கான அடிப்படைகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் காலப்பிரிவில் காணப்பட்டது போன்று பிற்காலத்தில் ஒரு தனிப்பட்ட பிரிவாக வளர்ச்சியடைந்த தசவ்வுஃபின் அடிப்படைகளும் காணப்பட்டன. இஸ்லாம் ‘தீனுல் பித்ரா’ எனும் மனிதனின் இயற்கைக்குப் பொருத்தமான ஒரு மார்க்கமாகும். மனிதர்கள் இயல்பிலேயே வித்தியாசமான தன்மைகளைப் பெற்றுள்ளனர். இஸ்லாம் வலியுறுத்தும் உலகப் பற்றற்ற மனநிலை, இறையச்சம், முற்றிலும் இறைவனை சார்ந்து வாழும் பண்பு ஆகியவற்றை மிக வேட்கையோடு பின்பற்றிய நபித்தோழர்கள் பலர் காணப்பட்டனர். ‘சுஹ்த்’ எனும் உலகப் பற்றற்ற வாழ்வை மேற்கொண்ட இந்த நபித்தோழர் எவருமே சூஃபி என அழைக்கப்படவில்லை. இதற்கான காரணத்தையும் தசவ்வுஃபின் தோற்றத்தையும் இமாம் குஷைரி தனது ரிஸாலாவில் பின்வருமாறு விளக்குகின்றார்.

நபி (ஸல்) அவர்களின் காலப்பிரிவின் பின்னர் நபித் தோழர்களைக் குறிக்க நபியவர்களுடன் அவர்களது தோழமையைச் சுட்டும் ‘சஹாபி’ என்ற சொல்லைத் தவிர வேறு எந்தவொரு பதமும் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் நபியவர்களுடனான தோழமையைப் பொறுத்தளவில் இதனை விடச் சிறப்பான அந்தஸ்தையும் படித்தரத்தையும் எவரும் பெறல் முடியாது. ஸஹாபாக்களின் காலப்பிரிவிற்குப் பின்னர் மக்கள் அறிவு வணக்க வழிபாடுகளைப் பொறுத்தளவில் பல தரங்களையுடையோராகப் பிரிந்தனர். அவர்களில் சன்மார்க்க விஷயங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட ‘ஸுஹ்ஹாத்’ உலகப் பற்றற்ற மனநிலையுடையோன் எனவும் ‘உப்பாத்’ (பன்மையில் ஆபிதீன்) வணக்கசாலிகள் எனவும் அழைக்கப்பட்டனர். முஸ்லிம்களுள் பல பிரிவுகள் தோன்றி நூதன கொள்கைகளை அறிமுகப்படுத்தி அவர்களும் இப்பதங்களைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ய முனைந்த நிலைமையே அஹலுஸ் சுன்னாவைச் சார்ந்த நன்னெறிச் சான்றோர் தங்களை இவர்களிடமிருந்து வித்தியாசம் காட்டிக் கொள்வதற்காக சூஃபி என்ற சொல்லைப் பயன்படுத்தினர். தசவ்வுஃப் சூஃபி என்ற பதம் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே பிரபல்யமடைந்தது.(ரிஸாலா குஷைரிய்யா)

இப்னு கல்தூனும் தனது முகத்திமாவில் இதே கருத்தைக் குறிப்பிடுகிறார். தசவ்வுஃப் என்பது முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய ஷரீஆவின் அடிப்படையில் வளர்ந்த ஒரு கலையாகும். சூஃபிகளால் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள் அனைத்தும் புகழ்பெற்ற சஹாபாக்கள், தாபிஈன்கள் மத்தியில் காணப்பட்டவையாகும். இறைவனிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு, முற்றிலும் இறைவனைச் சார்ந்திருத்தல், உலகப்பற்றின் கவர்ச்சிகளிலிருந்து ஒதுங்கியிருத்தல், செல்வம், பதவி, அந்தஸ்து ஆகியவற்றின் மீது பற்றற்ற நிலையை மேற்கொள்ளுதல் ஆகிய இபாதத்கள் நபித் தோழர்களிலும் சலஃபுஸ் சாலிஹீன்களிலும் காணப்பட்டன. ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் பிற நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து சமூகத்தில் ஏற்பட்ட செல்வத்தின் பெருக்கம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் உலகக் கவர்ச்சியையும் ஆடம்பர வாழ்வையும் நோக்கித் தீவிர ஈடுபாடு காட்டியபோது, அவற்றை விட்டு ஒதுங்கி தங்களது ஆத்மீக தூய்மையைப் பேணுவதற்காக இறை வணக்கத்தில் ஆழமாக ஈடுபட்டோர் சூஃபிய்யா, சூஃபிகள் என இனங்காணப்பட்டனர்.
(அல் முகத்திமா)

இப்னு கல்தூன் குறிப்பிடும் இத்தகைய பிரிவினர் எளிய வாழ்வை மேற்கொண்டு (சூஃப்) எனும் கம்பளி ஆடையை அணிந்தனர். கால ஓட்டத்தில் தங்களின் ஆத்மிக பரிசுத்தம், உளத்தூய்மை, இறையன்பு ஆகியவற்றை அடிப்படை நோக்காகக் கொண்ட இப்பிரிவினர் தங்களுக்கு உரிய நெறிமுறைகள், கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தனர். இதுவே தசவ்வுஃபின் ஆரம்பக்கட்டமாகும். ஆரம்பகால சூஃபிகளாக ஹஸனுல் பஸரி, மஃரூப் அல்கர்கி, ஜுனைத் அல்பக்தாதி, ஸரீஅஸ் ஸிகதி, ஸுன்னூன் அல்மிஸ்ரி, ராபிஅதுல் அதவியா, புலைல் பின் இயாழ், ஹாரிஸ் அல்முஹாபிஸி ஆகியோரைக் குறிப்பிடலாம். உலக வாழ்வைப் பொறுத்தளவில் பற்றற்ற மனநிலையைக் கடைப்பிடித்த இவர்கள், முற்றிலும் உலகப் பற்றிலிருந்து ஒதுங்கி சமூகப் போராட்டத்திலிருந்து விடுபட்டு நிற்கவில்லை. இவர்கள் பலர் சமூக வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இமாம் ஹஸனுல் பஸரி போன்றோர் தங்களுடைய சொற்பொழிவுகள் மூலம் மக்களினதும், ஆட்சியாளர்களினதும் உள்ளங்களில் இறை பக்தியையும் மறுமையின் பால் பற்றையும் தோற்றுவித்தனர். புலைல் பின் இயாழ், அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீதைச் சந்தித்து அவரது ஆடம்பர வாழ்வைக் கண்டித்தார். புகழ்பெற்ற சூஃபிகளான ஷகீக் அல் பல்கி (ஹி. 194) ஹாதிம் அல் அஸம் (ஹி. 227) ஆகிய இருவரும் ஜிஹாதில் கலந்துகொண்டு பங்களிப்புச் செய்தனர்.

போர்க் களத்தில் பகைவர்களின் பயங்கர போராயுதங்கள் முட்டி மோதுகின்ற நிலையில் ஹாதிம் அல் அஸம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘நிச்சயமாக நான் இந்த இடத்தில் எனது மனைவியுடன் கழித்த திருமண நாளின் முதலிரவின் இன்பத்தை அனுபவிக்கின்றேன்’. ஹாதிம் அல் அஸமின் ஆத்மீகப் பக்குவம் அவரது உயிருக்கே பேராபத்து நிறைந்திருந்த அந்தப் போர்க்களத்திலும் இறைநேச இன்பத்தில் அவரை மெய்மறக்கச் செய்திருக்கிறது.

இப்ராஹிம் இன்பு அத்ஹம் என்ற சூஃபி மகான் பைசாந்திரியர்களுக்கு எதிரான பல போர்களில் கலந்துகொண்டார். அபுல் ஹஸன் அலி அஷ்ஷாதிலி ஹிஜ்ரி 684ல் மன்லாராவில் நடைபெற்ற கிறிஸ்தவர்களுக்கெதிரான சிலுவைப் போரில் பங்குகொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. ஷெய்க் அப்துல் காதிர் ஜீலானியின் உருக்கமான உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவுகள் ஆயிரக்கணக்கான பாவிகளை நன்நெறியின் பால் திருப்பின. அவை அப்பாஸிய ஆட்சியாளர்களையே ஆட்டங்காணச் செய்தன. அவர்களுடைய சொற்பொழிவுகளில் உள்ளடங்கிய ‘புதூஹுல் கைப்’, ‘பத்ஹுல் ரப்பானி’ போன்ற நூல்கள் இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

எனவே, தசவ்வுஃப் என்பது செயலின்மை, அசைவற்ற நிலை, உழைப்பின்மை ஆகியவற்றைப் போதிக்கும் துறவறக் கோட்பாடன்று. தசவ்வுஃபின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றான ‘ஷுஹ்த்’ என்னும் பற்றற்ற நிலையானது உள்ளத்தின் கீழ்நிலை உணர்ச்சிகளுக்கு எதிராகப் போர் தொடுப்பதோடு இஸ்லாமியப் பணியிலும் போராட்டத்திலும் ஈடுபடும் வகையில் இறைநேசம், மறுமையின் பால் பற்று, உலக வாழ்வைத் துச்சமாக மதிக்கும் மனநிலை ஆகிய பண்புகளை உள்ளத்தில் தோற்றுவிக்கிறது.

தசவ்வுஃபின் வரலாற்று வளர்ச்சியில் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு ஒரு முக்கிய கால கட்டமாகும். இக்காலப் பகுதியிலேயே தசவ்வுஃப் பற்றிய நூல்கள் முதன்முதலில் தொகுக்கப்பட்டன. ஏனெனில், இக்காலப் பகுதியில் சூஃபிகள் என்ற வேடம் தரித்து சமூகத்தில் தோன்றிய பலர் தூய்மையான தசவ்வுஃபை பல வழிகளில் மாசுபடுத்த முனைந்தனர். இதுவே தசவ்வுஃப் நூல்கள் தொகுக்கப்பட முக்கிய காரணியாக அமைந்தது. தசவ்வுஃப் பற்றிய சரியான தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கோடு இந்நூல்கள் தொகுக்கப்பட்டன. இந்நூல்களுள் அபூ நஸர் அஸ்ஸர்ராஜ் எழுதிய கிதாபுல் உம்மா, அல்கலாபாதியின் கிதாபுத் தஅர்ருப் லீ மத்ஹபி அஹ்லுத் தசவ்வுஃப், அபூதாலிப் அல்மகசியின் கூதுல் குலூப், அல்குஷைரியின் அர்ரிஸாலா ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

தசவ்வுஃபின் வரலாற்றில் அடுத்த முக்கிய கட்டம் சூஃபி தரீக்காக்களின் தோற்றமாகும். ஷேக் அப்துல் காதர் ஜீலானி (மரணம் 1166) பைஅத் முறையை அறிமுகப்படுத்தி மக்களை ஆத்மீக வழியில் நெறிப்படுத்தி, பண்படுத்தி, இறைதிருப்திக்கு இட்டுச் செல்லும் தரீக்கா எனும் மெஞ்ஞான வழியை அறிமுகப்படுத்தினார்கள். இவர்களால் நிறுவப்பட்ட காதிரிய்யா தரீக்கா சிரியா, துருக்கி, கெமருன், கொங்கோ, மொரிடானியா, தன்ஸானியா போன்ற ஊர்களிலும் மத்திய ஆசியாவில் கோக்கேசிய பிரதேசத்திலும் பரவியது.

மொரோக்கோவில் ஷேக் அபுல் ஹஸன் ஷாதுலியினால் (மரணம் 1258) நிறுவப்பட்ட ஷாதுலியா தரீக்கா வட ஆப்பிரிக்கா, எகிப்து, கென்யா, தன்ஸானியா மற்றும் ஆசியப் பகுதிகளில் பரவியது. ஷெய்க் பஹாஉத்தீன் நக்ஷபந்தியினால் நிறுவப்பட்ட (மரணம் 1390) நக்ஷபந்தியா, மத்திய ஆசியா, இந்தியா, இந்நோனேசியா, துருக்கி ஆகிய பகுதிகளில் பிரபல்யம் பெற்றது. இது தவிர டிஜானியா, நிஸ்தியா, மல்லவியா போன்ற பல தரீக்காக்கள் கால வளர்ச்சியில் தோற்றம் பெற்றன. இஸ்லாத்தின் பரவலிலும், பிரஞ்சு, இத்தாலிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான போராட்டத்திலும் இத்தரீக்காக்கள் வகித்த பங்கும் அளப்பரியது.

இந்தோனேசியாவில் முஸ்லிம்களுக்கும் டச்சுக் காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்களில் காதிரிய்யா தரீக்கா மிக முக்கிய இடத்தை வகித்தது. அல்ஜீரியாவில் 1832 – 1837 காலப்பகுதியில் நடந்த பிரஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மாபெரும் ஜிஹாதை மேற்கொண்ட அமீர் அப்துல் காதிர் ஜஸாஇரி காதிரிய்யா தரீக்காவின் ஷெய்குகளில் ஒருவராக விளங்கினார். திஜானியா தரீக்காவும் அல்ஜீரியாவில் பிரஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் சிறப்பான பங்களிப்பை மேற்கொண்டது. மத்திய ஆசியாவில் ரஷ்ய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஜிஹாதில் நக்ஷபந்தியா தரீக்கா முக்கிய பங்களிப்பை செலுத்தியது.

குர்ஆன், சுன்னாவின் தூய கோட்பாடுகளில் அமைந்த தசவ்வுஃப் கலை பிற கலாசார, பண்பாட்டுத் தாக்கங்கள் காரணமாக ஒரு தத்துவச் சாயலைப் பெற்றதை அக்கலையினுடைய முக்கிய காலகட்டமாகக் குறிப்பிடலாம். ஆரம்பகால சூஃபிகள் தங்களின் இறைச் சிந்தனை, இறை தியானம், இறைத் திருப்தி ஆகியவற்றிலேயே முற்றிலும் கரிசனம் செலுத்தினர். ஆனால், இந்தத் தூய தன்மை கொண்ட தசவ்வுஃப் பிற்காலத்தில் தத்துவச் சாயலைப் பெற்றது. இதனால் இறைவன், அவனது தன்மை, பண்புகள், பிரபஞ்சத்தில் அவனது வெளிப்பாடு முதலான தத்துவச் சிந்தனையில் சிக்கியது. இக்காலப் பிரிவிலேயே வஹ்ஜதுல் அஜாத், ஹுலூல் ஹக்கீகதுல் முஹம்மதிய்யா போன்ற கோட்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன. கிரேக்கத் தத்துவம், பிளேட்டனியா நியோ கோட்பாடு வேதாந்தத் தத்துவம் போன்ற தத்துவங்கள் தசவ்வுஃபில் தாக்கத்தை ஏற்படுத்தியன.

தசவ்வுஃபின் வரலாறு பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் ஆரம்பகால தூய தசவ்வுஃபை அத் தசவ்வுஃபில் ஸுன்னி எனவும் பிற்கால தசவ்வுஃபை அத் தசவ்வு அல்ஃபவ்ஸபி எனவும் அழைத்தனர். இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்கள் தசவ்வுஃபில் ஸுன்னியை ஏற்றுக்கொண்ட அதேவேளை தசவ்வுஃப் அல் ஃபல்ஸபியைக் கண்டித்தனர்.

எனவே, தசவ்வுஃப் என்பது குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் வளர்ந்த ஓர் இஸ்லாமியக் கலையாகும். பிற்காலத்தில் தஃப்ஸீர்களில் இஸ்ராஈலியத் என்னும் யூத மரபுக் கதைகள் நுழைந்தமைக்காக தஃப்ஸீரை நிராகரிக்க முடியாதது போல, ஹதீஸ்களில் மெழூஅத் என்னும் புனைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள் இடம்பெற்றதற்காக ஹதீஸைப் புறக்கணிக்க முடியாதது போல, தசவ்வுஃபில் அதன் வரலாற்றின் பிற்பட்ட காலகட்டத்தில் கிரேக்க, இந்தியத் தத்துவச் செயற்பாடு ஏற்பட்டு அதன் தூய்மை மாசுபட்டமைக்காக தூய உருவில் அமைந்த குர்ஆன், சுன்னாவின் போதனைகளின் அடிப்படையில் அமைந்த தசவ்வுஃபை நிராகரித்தல் முடியாது.

எமது சமகால உலகில் மேற்குலகில் ஏற்பட்டுள்ள ஆத்மீக வெறுமையானது மேற்குலகின் புத்தி ஜீவிகள் பலரை தசவ்வுஃபின் மூலம் இஸ்லாத்தில் இணையச் செய்தது. அறிவுத் துறையிலும் சிந்தனைத் துறையிலும் மிக ஆழமான புலமை பெற்றிருந்த புத்திஜீவிகள் பலர், தங்கள் வாழ்வில் நிம்மதியும், நிறைவும் பெறுவதற்கு மிக அடிப்படையான ஏதோ ஒன்றை இழந்திருப்பது போன்ற உணர்வைப் பெற்றனர். இந்த வெற்றிடமே ஆத்மீக வெறுமையாகும். இந்த ஆத்மீக வெறுமையை ஈடுசெய்ய முற்பட்ட அவர்களது முயற்சி தசவ்வுஃபின்பால் அவர்களை ஆர்வம் கொள்ளச் செய்தது. அதனடியாக இஸ்லாத்தை ஏற்று, இத்துறையில் பெரும் பங்களிப்புச் செய்யும் ஆற்றல் படைத்த முஸ்லிம் அறிஞர்களாகவும் அவர்களை மாற்றியது. இவர்களுள் மார்ட்டின் லிங்ஸ் (அபூபக்கர் சிராஜுதீன்), ரெனி கிநோன் (அப்துல் வாஹித் யஹ்யா), விக்டர் டன்னர் (அப்துல் ஜப்பார் டன்னர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர்.

உதவியவை:

  1. அபுல்ஹஸன் அலி நத்வி – அர்ரப்பானியா லா ரஹ்மானிய்யா – லக்னோ
  2. அபுல் காஸிம் அல் குறைஷ் – அர்ரிஸாலதுல் குஷைரிய்யா – காஹிரா (1966)
  3. இப்னு கல்தூன் – அல் முகத்திமா
  4. அப்துல் ஹலீம் – மஹ்மூத் கலியதுத் தசவ்வுஃப்
  5. ஸகீ முபாரக் – அத் தஸவ்வுபில் இஸ்லாமிய்யில் அக்லாகிய்யா காஹிரா (1938)
  6. அப்துர் ரஹ்மான் மதனீ, தாரிகுத் தசவ்வுஃப் அல் இஸ்லாமி மினல் பிதாயா
  7. ஹத்தா நிஹாயதில் கான் – குவைத் (1975)

Related posts

Leave a Comment