சிறுகதை முக்கியப் பதிவுகள் 

ஆசான் (சிறுகதை)

’ஆசான் என்றால் இவரல்லவா ஆசான்?!’ என்றவாறே புத்தகத்திற்கு மூன்று முத்தங்களை எண்ணிக் கொடுத்தான் கமால். அந்த வரிகளைக் கடந்து அவனால் மேற்கொண்டு வாசிக்கவும் இயலவில்லை. ’தத்துவ நூல்கள் புனிதப் பிரதிகளுக்கே உரிய வாசிப்பு ஒழுங்கைக் கோருபவை அல்லவா?!’ என்றவாறே மேற்கொண்டு வாசிக்கும் உந்துதலைப் பிடித்து நிறுத்தினான்.

அவர் எழுதிய வரிகள் எவ்வளவு சத்தியம்! இருட்டில் நெருப்புப் பந்தம் கொண்டு எழுதுவதைப் போலல்லவா எழுதியிருக்கின்றார்?! ஆசானின் அந்தச் சொற்களை அவரே வழிகாட்டியபடி தன் மூளைப்பெட்டிக்குள் போட்டுக் குலுக்கியெடுத்துத் தன் சொந்த வரிகளாக்கிச் சிந்தித்தான்.

’எவ்வளவு சிறந்த மனிதர்களாக இருந்தாலும், ஆக உயரமான சிகரத்தை அடைந்தாலும் எல்லா உச்சங்களும் அவற்றைத் தாண்டிய உச்சங்களைச் சந்திக்காமல் போவதில்லை. அந்த உச்சங்களின் முடிவில் இறைவன் மனிதனின் முட்டாள்தனம் நிறைந்த பொறாமை மூட்டைகளைப் பார்த்து சிரிப்பான்தானே?! ஒன்றைக் கொண்டு ஒன்று சமநிலைப்படும் இந்த வாய்ப்பாட்டைப் புரிந்து கொண்டால் எல்லாமே சரியாகிவிடும்’ எனத் தனது சொற்களால் சொல்லிக் கொண்டான் கமால்.

தான் என்னதான் சிந்தித்தாலும் ஆசான் போட்டிருக்கும் கருங்கல் அஸ்திவாரத்தைத் தாண்ட இயலாது என்ற உண்மை தெளிவானதால் கமாலின் உடலும் மனதும் சோர்ந்தது. தலையிலிருந்து எரி மெழுகு உருகியது. அவரை விட்டால் தனக்கு வழிகாட்டுபவர் யாருமில்லை என்ற நினைவு வர கழிவிரக்கம் ஊற்றாகிப் பெருகியது.

தனது பசிக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்ற பச்சையான யதார்த்தம் உள்ளங்காலிலிருந்து சுடவே வெற்றிச்செல்வனின் ‘தரிசனத்திற்கு இப்பால்‘ என்ற திண்டு அளவு நூலின் இருபத்தியிரண்டாம் பக்கத்தை மீண்டும் புரட்டினான்.

”தன்னை முன்னுக்கு நிறுத்தியே எல்லாவற்றையும் பார்க்கும் சுயம் சார்ந்த போக்கும், தான் இடம்பெறாத சங்கதிகளை அலட்சியப்படுத்தும் தனக்குள் ஒடுங்கும் தன்மையும், தன்னுடைய அறிவுக்கூர்மையின் எல்லைக்கு வெளியே உள்ளவற்றின் மீதான கடுகடுப்பும்…”

எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிகின்றது?! ஆசான் என்ன ஜின்னா? மனிதனா? கடற்கரை மணற்பரப்பில் விழுந்த வைரத்துணுக்கைக்கூட கண்டுபிடித்து விடலாம். ஆனால் மனித மனத்திற்கோ கரையும் இல்லை, கங்குமில்லை. இருளுக்குள் இருளாய் ஒளித்திருக்கும் அதன் அழுக்குகளை அதைச் சுமக்கும் மனிதனால்கூட கண்டுபிடிக்க முடியாதே!

புத்தகத்தை மூடும்போது நள்ளிரவைக் கடந்திருந்தது. மனைவி நிஷா வாய் பிளந்து தூங்கிக்கொண்டிருந்தாள். அவளது தலையணையருகில் கிடந்த செல்பேசியில் ’ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப்பாலகன்’ என்ற பாடலை நாகூர் ஹனீஃபா பாடிக்கொண்டிருந்தார். அதை எடுத்து நிறுத்தி மேசைப்புறம் வைத்தேன். ஹனீஃபாவின் பாடல்களுக்கப்புறம் சாலி காக்காவின் பாடல்களும் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

தூங்கும் யாரைக் கண்டாலும் பாவமாகத்தான் இருக்கின்றது. உனது வாயில் கொசுக்களுக்கும் கொஞ்சம் இடங்கொடேன் என அவளை எழுப்பிச் சொல்லத்தான் ஆசை. பாவம் வயதான உம்மா, இளைப்புக்காரத் தங்கச்சி, வயதுக்கு வந்த இரண்டு மகன்கள், காலை பத்து மணிக்கு விடியும் சிறுநீரக நோயாளியான இன்னொரு தங்கச்சி, இனி அரை நூற்றாண்டைத் தாண்டிய நான் என அனைவரின் மையப்புள்ளியும் இவள்தான். உப்பில்லாமல், உறப்பில்லாமல், மிளகு சேர்த்து, இனிப்பு குறைத்து என மூன்று வேளைகளும் மூன்று வகையான சமையல். இனி இடைவேளைகளில் மருந்து அவித்துக் கொடுப்பது, வெந்நீர் போடுவது என ஒரு மருத்துவமனையையும் தாண்டிய வேலைகளின் அம்பாரம் அவளுக்கு. பாவம் இனி அவள் உறங்கட்டும்.

நைட் லாம்பும் இரவிற்குத் தொந்திரவை அளிக்கும் என்பதால் படுக்கும்போது எப்போதுமே முழு இருளாக்கி விடுவதுதான் வழக்கம். எல்லா ஓசைகளையும் தனக்குள் ஒடுக்கிக்கொள்ளும் இரவு கிடைப்பது என்பது ஒரு குவளை நிறையப் பழச்சாற்றைச் சிந்தாமல் சிதறமால் முழுமையாக அப்படியே அருந்துவது போன்றது. இரவிற்கு அப்புறம் பழமையானது என்று பார்த்தால் இருபத்தேழு வருடங்களாக என்னுடன் இரவைக் கழிக்கும் மனைவி மட்டும்தான்.

மணி பன்னிரண்டரை. மூத்திரம் பெய்துவிட்டு வந்து படுக்கை விரிப்பை உதறிவிட்டு கொஞ்ச நேரம் படுக்கையில் உட்கார்ந்திருந்தேன். நீரின் மேல் மிதக்கும் மெழுகுத்திரையாகி மிதக்கத் தொடங்கின அந்தச் சொற்கள். அந்த முதலிரண்டு வரிகளும் சாதாரணமானவைதான். ஆனால் கடைசி வரியிலதான் பஞ்சே இருக்குது. அது சாதாரணமாத் தெரியிற பாரமானது. உயர்ந்த மனிதர்களின் சல்லித்தனத்தை இழுத்துப்போடும் பெரும் மேதமை.

நான்கைந்து மாதங்கள் இருக்கும். தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் தன்னைத்தேடி வந்த விருதுகளை நிராகரித்தது பற்றி ஆசான் ”முகில் குவைக்கு யாராவது நீர் பாய்ச்சுவார்களா?” என்று நகைத்தார். சிரிப்பு குன்றாமலேயே தொலைக்காட்சிக்காரரை உக்கிரமாகவும் பார்த்து வைத்தார். ”விருதுகளுக்காகச் செய்யப்படும் எத்தனங்களை என் நகக்கண்கூடச் செய்யாது” என்று ரௌத்திரம் கொண்டார். ஆசானது இந்தச் சொற்கள் எதிராளிகளால் பெரிதாக எள்ளப்பட்டாலும் ஒரு வாரத்திற்கு அவர்தான் பேசுபொருளாகியிருந்தார்.

படைப்பின் உச்சியில் நிற்பவனுக்கு இந்தக் கர்வம் இல்லையென்றால் அவன் தூசியையும்விட எடையற்றவன்தான். அவரின் கோபம் சரிதான் எனக் கமாலுக்குத் தோன்றியது.

மீண்டும் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் போலிருந்தது. விளக்கைப் போட்டால் பாவம் இவளின் தூக்கம் வேறு கெடும். வேண்டாம் என்றவாறே ஆசானின் இணையதளத்தைப் பார்ப்பதற்காக செல்பேசியைத் திறந்தேன். முகப்புப் படத்தில் வட்டப்பாறையில் கால் பாவாமல் நின்றபடி சிரித்துக்கொண்டிருந்தார்.

‘அண்ணலின் உயிர் மை’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை இருந்தது. மேலோட்டமாகப் பார்த்து வரும்போது ஒரு வரியில் என் கண் குத்தி நின்றது.

அண்ணலின் காலடிகளில் அவரைக் கொல்ல விதிக்கப்பட்டவன் கிடந்து மன்றாடினான். ”அண்ணலே! நீங்களே உங்கள் கைகளால் என்னை முடித்துவிடுங்கள். அப்போதுதான் நான் உங்களின் உயிரைப்போக்கும் அந்தக் கொடும் கணத்தை நான் பார்க்காமலும் சந்திக்காமலும் இருக்க முடியும்.”

“இளைஞனே! என்னுடைய இறப்பில்தான் என்னுடைய வாழ்க்கை உள்ளது. நான் என் சொந்தக் கூட்டை விட்டு எவ்வளவு நாள்தான் பிரிந்திருக்க முடியும்?!”

கடைசியில் தன்னுடைய கொலையாளியின் கருவிக்கு அண்ணல் தன்னை ஒப்புக் கொடுத்தார். தன் ஆன்ம விருப்பத்தை அந்த இளைஞன் வழியாக நிறைவேற்றிக் கொண்டார். கொன்றவனை அவனுடைய குற்றவுணர்ச்சியிலிருந்து விடுவித்தார். கொன்றவனும் கொல்லப்படுபவனும் இணையும் அவசங்களுக்குள் சென்று முயங்கும் பெருந்தருணமாக அது இருந்தது. ஊழானது தன் தர்க்கத்தை அடைந்துகொள்ளத் தன் உடலையே நடைவழியாக்கினார் அண்ணல்.

ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழையை ஒரே வரியில் உடன்பாடான திசையில் புரட்டிபோடும் இரசவாதம். ஒரு தேசத்தின் அச்சாணியை முறித்துப்போட்ட கொடுஞ்செயல் ஒரு எளிய தர்க்கத்தின் வழியாக வேறொன்றாக ஆகிவிட்டது. பொங்கிப்பொங்கி கிளம்பியவை முனை மழுங்கி என் மடியிலேயே வந்து விழுந்தன. மூளையின் களைப்பு உடலுக்கும் இறங்கித் தூக்கம் தன் வரவாக வந்தடைந்தது.

அது தெற்குகரை. ஆசிரமத்திலிருந்து பிரிந்து செல்லும் கல்பாவிய சாலையும் தென்பட்டது. ஆகவே அது களக்காடெல்லாம் இல்லை. சந்தேகமே இல்லை. தெற்குகரையேதான். ஆசிரம சாலையின் வலது ஓரத்தில் மண் வழித்தடமொன்று சரிந்து இறங்குகின்றது.

பாதையின் நடுவில் எழுத்தாளர் வெற்றிச்செல்வனின் வீடு. வண்ணக்கலவை பூசினால் வீடு கொதிக்கும் என சுண்ணாம்பு பூச்சு மட்டும் அடிக்கப்பட்ட வீடு. மொட்டை மெத்தையில் நானிருந்தேன். கிழக்கே அடவி நயினார் அணையின் மதகுகள் புனல்வாய் உலைகளாகி நின்றன. கரிய மலைச்சிகரங்களின் வழியே மேகம் துருத்தி வாய் நீராகிப் பீறிட்டுக்கொண்டிருந்தது. அடிக்கும் வெய்யிலுக்குள் ஈரலிப்புக்கொண்டு மேகங்களின் சாம்பல் நிறம் கரைந்து விரவி மனத்தின் வெப்பு தணித்தது.

மாடியின் கைப்பிடிச்சுவற்றிலிருந்த பூந்தொட்டிகளிலிருந்து தரை நோக்கி வழிந்துகொண்டிருந்தன பசுந்துதிக்கைகள். அவற்றினிடையே இருந்த தைல வண்ண ஓவியச் சட்டங்கள் மூன்று கிடத்தப்பட்டிருந்தன. கண்ணாடியில் பட்டு வெய்யில் மந்தமாக மின்னியது. ஒன்றில் பாகவதப் புராணத்தின் போர்க்காட்சி. கேடயத்திற்குப் பின்னே முட்டுக்குத்தி அமர்ந்திருந்தான் படை வீரன். இன்னொன்றில் ஒன்றையொன்று முயங்கியும் விழுங்கியும் வளையமாகி கிடக்கும் பல்வண்ணப் பாம்புகள். மூன்றாவது ஓவியத்தில், உலையில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்த வெடித்துச் சிதறும் கருந்திரவமானது சூழ நிற்கும் மனிதர்களின் முகங்களில் போய் படிகின்றது. மூன்று ஓவியங்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன். மூன்றாவது ஓவியத்தில் கைகளால் வருடிக் கொடுத்தேன். உள்ளங்கையில் தீச்சுட்டது. கையை உதறியவாறே தலையை உயர்த்தவும் எழுத்தாளர் வெற்றி செல்வன் படியேறி வரவும் சரியாக இருந்தது. வழமைக்கு மாறாக கன்னங்கொழுத்து, முடி கலைந்து, வெள்ளி நிற கண்ணாடியின் ஃபிரேம் இடப்பக்கமாகச் சாய்ந்திருந்தது. சிரிப்பற்ற முகத்தில் கூரேறிய கண்கள். என்னைக் கண்டுகொள்ளாமல் மலையின் மீதும் வெற்று ஆகாயத்தின் மீதும் துளாவின.

நானாகப் போய் அறிமுகப்படுத்திக்கொண்டேன். எல்லா உணர்ச்சிகளையும் இறுக்கிப் பூட்டிய வெற்றுத்தட்டான முகம்.

”நான் நேத்து ஒங்க ஊர் பக்கம் வந்திருந்தேன்” என்றார்.

”எங்கே? எப்போது?” என நான் திரும்பக் கேட்கவும் ”நேத்து மத்தியானம் வாக்கிலே கல்லிடைக்குறிச்சி வந்திருந்தேன்” என்றார்.

”கல்லிடைக்குறிச்சிலேந்து திர்னவேலி ஒன்னேகால் மணி நேரம். திர்னவேலியிலேந்து எங்க ஊரு ஒன்னர மணி நேரமாகுமே” என்றவுடன் அவர் என் முகம் பார்க்காமல் மலையைப் பார்த்தவாறே சொன்னார், ”கேரளாவை அதிகமாகப் புகழ்ந்து எழுதாதீங்க”. அவர் இதைச் சொல்லி முடித்ததுதான் சுணக்கம் இளைஞர்களும் மாணவர்களும் அவரின் கழுத்தையும் தலையையும் தங்களது கைகளால் சுற்றி வளைத்துக்கொண்டனர். அதில் ஓர் இளைஞன் தனது சொந்தப் பிரச்னைகளை அவரின் இடது காதில் கூறுகின்றான்.

கண் பீளையைக்கூடத் துடைக்காமல் செல்ஃபில் இருந்த இமாம் இப்னு சீரீன் எழுதிய ’தஃப்சீருல் அஹ்லாம்’ நூலை உருவி எடுத்த வேகத்தில் பேனாக்கூடு தரையில் விழுந்து அழி ரப்பர், குண்டூசி, ரப்பர் பேண்ட் முதலானவை தரையில் திசைக்கொன்றாய்ச் சிதறின. சத்தம் கேட்டுப் பதறியெழுந்த நிஷா ஒன்றும் புரியாமல் பேப்பே என முழித்துக் கொண்டிருந்தாள். காலை வந்துகொண்டிருந்தது.

நூலைப் புரட்டினான் கமால். அமேசானில் ஆயிரம் ரூபாய் விலை காட்டியதால் ஒரு வாரத்திற்கு முன்புதான் சுல்தான் ஆலிமின் பரிந்துரையில் சென்னைக்குச் சொல்லி சலுகை விலையில் வாங்கியது. ஆங்கில மொழியாக்கத்தின் பேப்பர் பேக் பதிப்பு.

கொஞ்ச காலமாகவே நள்ளிரவு, பின்னிரவு, அதிகாலை என வந்துகொண்டிருக்கும் அவனது கனவுகளுக்கு விளக்கம் சொல்லி ஓய்ந்து போய் சுல்தான் ஆலிம் இந்த நூலை வாங்கிக் கொள்ளும்படி கமாலுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதன் முகப்பு அட்டையில் வனத்தில் மான் மரை பறவைகளுடன் நிற்கும் பேரீத்த மரத்தின் தண்டு நிலத்தின் கீழிருக்கும் இருள் நீலக்கடலுக்குள்ளும் நீள்கிறது. கூட்டங்கூட்டமாகச் செல்லும் சிறு மீன்கள். அக்கூட்டத்தின் மேல் பொன்மஞ்சள் நிறமுடைய மீனொன்றின் வயிற்றில் போய் முடிகின்றது அந்தப் பேரீத்த மரம். ஷேர்வானி அணிந்த மனிதரொருவர் அதன் ஒருபுறமும், முழு நீள அங்கியும் கழுத்தில் மாலையும் அணிந்த இன்னொரு மனிதர் மண்வெட்டியால் நிலத்தைக் கிளருகின்றார்.

நூலைப் புரட்டிய கமால், WRITER என்ற தலைப்பின் கீழ் அச்சிடப்பட்டிருந்ததை வாசித்தான். DISHONEST, CUNNING, DECEITFUL AND A FRAUDULENT PERSON என்றிருந்தது.

Related posts

One Thought to “ஆசான் (சிறுகதை)”

  1. Kollu Nadeem

    பஷீருக்கு என்னமோ என் வயசுதான் இருக்கும், ஆனால் காக்கா என்று விளித்துப் பழக்கம். ஆசையாக அப்படித்தான் இனியும் அவர் இருப்பார். “ஆசான்” ஐ எவ்வளவு காலமாக தலையில் தூக்கி சுமக்கிறோம், அவர் சொன்னதையும், சொல்லாமல் விட்டதையும் – எவ்வளவு பெரிய பாரமது, சுயபகடியின் வழியாக கமால் எப்படியோ கடந்துவிட்டான். இந்த காயல்பட்டணத்து பஷீரில் அந்த பேப்பூர் சுல்தான் எட்டிப் பார்க்கிறான்.

Leave a Comment