சிறுகதை முக்கியப் பதிவுகள் 

ஒரு சொல் (சிறுகதை)

Loading

அதிராம்பட்டினம் பயணத்திற்கான துணிகளை இஸ்திரி போட்டுவிட்டுச் சாப்பிட உட்கார்ந்ததில் நிறைய தாமதமாகிவிட்டது. மணி மூன்றாகிவிட்டிருந்தது. வழக்கமாக வானொலியில் திருச்சிராப்பள்ளியிலிருந்து ஒலிபரப்பாகும் மதியம் ஒன்றே முக்கால் மணிக்கான மாநிலச்செய்தி தொடங்கவும் நான் சோற்றில் கை வைக்கவுமாக சரியாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு தலையை வைக்கவும் மெத்தைக்குப் பக்கவாட்டில் செருகிக்கிடந்த செல்பேசி குரல் மங்கி ஒலித்தது.

“அய்யா வணக்கம் பேசலாமுல்லா?”

“சொல்லுங்க குமரேசன் பேசலாம்.”

“சிருங்கி பஸ்பம் கேட்டிருந்தீங்கள்ல, அதுக்குத்தான் அடிச்சேன்.”

“ரொம்ப நன்றி குமரேசன். நான் வாட்சப்புல அனுப்புன முகவரிக்கே அனுப்பிடுங்க. காசு எவ்வளவு? நான் ஜி பேல போட்டுர்றேன்.”

“சரி, சரி.”

“வேறென்ன செய்தி குமரேசன்?”

“டாக்டரோடயே நேரம் சரியாப்போவுது, சார்.”

“ஆமா அது அப்டித்தான். அதுவும் இவருக்குப் பேர் இருக்கிறதுனால கூட்டம் வருந்தானே?!”

“சாப்டீங்களா, குமரேசன்?”

“தம்பி பையனுக்கு நிச்சயதார்த்தம்.“

“ஓ அப்டியா, “என்ன பண்றான்?”

“விப்ரோல வேல பாக்குறான்.”

“எங்கயோ நல்லபடியா இருந்தா சர்தான்.”

“ஆமாய்யா உண்மதான். எல்லாம் ஒங்க ஆசீர்வாதம்.”

“வேறென்ன குமரேசன்?”

“வேறென்னத்தப்போட்டு. காலயாவுனா மதியாமகுது, மதியாமானா சாயந்திரமாகுது, சாயந்திரமானா ராத்திரியாவுது, ராத்திரியாவுனா மறுபடியும் காலயாவுது. என்னத்தவிர எல்லாமே ஓடுது உருளுது.”

“என்ன எல்லாம் தத்துவமா இருக்கே குமரேசன்!“

“வேறென்ன ஐயா, உண்மயத்தானே சொல்றேன். ஒரு நாளய்க்கும் இன்னொரு நாளய்க்கும் என்ன வித்தியாசம்?”

குமரேசனின் சொற்களில் ஏறியிருக்கும் வெம்மை அவரது தலையிலிருந்தா வயிற்றிலிருந்தா? குழம்புவதற்கு அவகாசமில்லை,

“சரி நீங்க சாப்டீங்களா குமரேசன்?

“நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சிடுச்சி.”

“சரி, சரி.”

குமரேசனுக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நாகஸ்வர தலைமுறை. எனது அணுக்க நண்பரும் ஒளிப்படக்கலைஞருமான நீலகண்டன் மூலமாக குமரேசனை சென்னை புத்தகக் கண்காட்சியில் வைத்துப் பழக்கம். குமரேசனின் அண்ணன், தம்பி எல்லோருமே நாகஸ்வர தவில் கலைஞர்களாக ஓரளவு பரவாயில்லாமல் இருக்க, இவரின் நிலைகொள்ளா படபடப்புத் தன்மையினால் சராசரி வாழ்க்கை வாய்க்கவில்லை. தனித்தீவு வாழ்க்கைதான்.

குன்றக்குடி அடிகளார், எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி பல துறைப் பிரபலங்களிடம் வேலை பார்த்திருக்கிறார். திரைத்துறை, வானொலி, தொலைக்காட்சியில் தற்காலிகப் பணி. தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் மேகாலயா சென்று தவில் வாசித்தது முதல், வானொலியின் உள்ளூர் நிலையத்தில் வேலை பார்த்த வடநாட்டு இயக்குனர் பிரேம்குமார் பன்சலின் பெண்பித்துவரை புனிதமான, புனிதமற்ற எல்லா விஷயங்ளும் அனுபவங்களும் குமரேசனுக்கு அத்துப்படி. தனக்கு எதிரில் இருப்பவர் தன்னைப் பற்றி ஏதோ தப்பாக நினைக்கிறார் என இவர் நினைத்தாலே போதும். அவரிடமிருந்து விலகி விடுவார். இந்தப் பதட்டத்தினால் பல வேளைகள் பட்டினி கிடக்க வேண்டி வந்திருக்கிறது குமரேசனுக்கு. தானும் நீலகண்டனும் வெறுந்தேயிலையில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்து சாப்பிடாமலே பல நாள்கள் கழித்ததையும் சொல்லியிருப்பதை மனத்தில் வைத்துதான் கேட்டேன்.

“சரி குமரேசன், சாப்டீங்களா?”

“என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. நானும் பாக்குறேன். உடாம தொரத்தி தொரத்தி சாப்டாச்சா சாப்டாச்சானு கேக்குறீங்க?”

குளிருக்குள் நெருப்பு கலந்தது.

“என்னாச்சி குமரேசன்?” என் முதுகு வியர்த்தது.

“நீங்க மட்டுமில்ல சார் பாக்குறவன்லாம் கேக்குறான். சாப்டீங்களா, சாப்டீங்களான்னு”?

“சாப்டீங்களான்னு கேக்குறதுல என்ன தப்பு?”

“ஆறு மாசத்துக்கு முன்னாடி கடையத்துல பண்ணையில கூப்டாங்கன்னு போனா அங்க நான் தண்ணிக்கொழாய கைல தூக்க முன்னாடியே அங்குள்ள பொடிப்பையன் நான் யாருங்கறத தெரிஞ்சிக்கிட்டு என்ன பாத்து கேக்குறான். “

“என்ன கேட்டான் அவன்?”

“அந்த் மாதிரி எடத்துல நிக்க முடியுமா அய்யா. கைல காசில்லாம திர்னவேலிக்கே ரயில் ஏறிட்டேன்.”

“இவ்ளோ பெரிய ஆளான நீலகண்டனே சாப்டீங்களான்னு கேக்குறாரு.”

“ஏன் அப்டி கேட்டு என்ன வதைக்கிறீங்க நீலகண்டன்னு கேட்டேன். ஒங்கள மாதிரியே அவரும், சாப்டீங்களான்னு கேக்குறதுல என்ன தப்பு ன்னு கேக்குறாரு.”

குமரேசனுக்கு மூச்சு வாங்குவது தெளிவாகக் கேட்டது.

“நல்லா கேட்டுக்குங்க சார். இத மாதிரி கேட்டதுனாலதான் நான் சாவ வேண்டி வந்ததுனு எழுதி வச்சுட்டுதான் போவேன்.”

என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவசரத்திற்குச் சொற்கள் அகப்படவில்லை. சூடு தணியட்டும் என்பதற்காகச் சில நிமிடங்கள் கழித்துப் போடலாம் என்றெண்ணி இணைப்பைத் துண்டித்தேன். நான் சொன்னதைத் திரும்ப நினைத்துப் பார்த்தேன். கிண்டலும் பண்ணவில்லை. வேறு எதுவும் தப்பாகவும் சொல்லவில்லை. குமரேசனுக்குக் கஞ்சா, தண்ணி பழக்கம் எதுவும் இருக்குமோ?! சீச்சி. அது அடிக்கிற ஆளா இருந்தா கண்ணுக்குக் கீழே சத தொங்கிடுமே! நாம பாக்கரப்போ ஆள் வெறப்பால்ல இருந்தாப்புல. நினைத்து முடிப்பதற்குள் குமரேசனிடமிருந்து மீண்டும் செல்பேசி ஒலித்தது.

“நான் ஒன்னும் ஒங்க கிட்ட தப்பா பேசலையே, குமரேசன்?”

“இப்டி சாப்டாச்சான்னு கேட்டதுனாலதான் நான் பல எடங்கள்ல வேலய உட வேண்டி வந்தது.”

“இங்க உள்ள ரேடியோ ஸ்டேசன்ல நான் கேசுவல் ஆர்ட்டிஸ்டா வேல பாக்குறப்போ எங்க கைய குலுக்க வேண்டி வந்துருமோன்னு பயந்து தூரத்துல என்னைய கண்டவுடனேயே கையத் தூக்கி விஷ் பண்ணுவாங்க, இல்லாட்டி வணக்கம் சொல்றாங்க.”

“சாப்டாச்சானு கேக்குறதுக்கும் கைய தூக்கி வணக்கம் சொல்றதுக்கும் என்ன சம்பந்தம், குமரேசன்?”

“ஒங்களுக்கும் புரியலியா? இல்லாட்டி வேணுன்னே புரியாதது மாதிரி கேக்குறீங்களா?”

என்னடா இது கால்மிதி துடைப்பானைத்தான் இழுத்தோம். ஆனால் இங்கு ஒரு மலையே நகருகின்றதே. வம்பு கூடிக்கொண்டல்லவா போகின்றது?

“இவனோட கை குலுக்க வேண்டி வந்திரக்கூடாதுங்கற ஆட்கள்தான் சாப்டாச்சான்னு கேக்குறாங்க. இதுக்குதான் நான் கலியாணமே பண்ணிக்கிறல தெரியுமா? வமிசாவழி வரைக்கும் நோண்டுவாங்கன்னு.”

இதற்கு மேல் வளர்ப்பது சரியில்லை எனத் தோன்றியது. பத்து தடவைகளாவது மன்னிப்புக் கேட்டிருப்பேன். அப்போதும் குமரேசன் பேச்சை விட்டபாடில்லை.

பிரேம் குமார் பன்சலின் லீலைகள் பற்றி கேட்கவும்தான் பேச்சின் வேகம் கொஞ்சம் தணிந்தது. பேச வேண்டும் என்பதற்காகத் தொடர்பில்லாத விஷயங்களையெல்லாம் இழுத்துப் பேசி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது.

மாலையும் திரும்பக் கூப்பிட்டேன். போன் மணி அடிக்காது என்பதிலிருந்து பல எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. நான்கைந்து அடிகளிலேயே எடுத்துவிட்டார்.

“சார்! பேசண்டுங்க நெறய வந்திருக்காங்க. நான் அப்றம் கூப்பிடறேன்” என்றார். அச்சம் நீங்கியது.

குமரேசன் சராசரிக்கு ஒரு புள்ளி குறைவுபோல. இல்லாட்டி ஒரு சொல்லுக்கு இப்டி ஏன் குதிக்கணும்? யார் கண்டது என்னது எங்க இளகியிருக்குதுன்டு?”

o0o

குமரேசனுடனான மேற்கண்ட உரையாடலுக்குப்பிறகு அடுத்தாற்போல சில நாட்களிலேயே பெருந்தொற்று முடக்கம் தொடங்கிவிட்டது. நானாக அவருக்கு போன் போடுவதில்லை. அவர் அழைத்தாலும் பல மணி நேரம் கழித்துதான் திரும்பக் கூப்பிடுவேன். ஏதாவது ஒரு வேக உச்சியில் இருந்து அழைத்திருந்தால் அது இறங்குவதற்கும் நேரமும் அவகாசமும் வேண்டுமே?!

பெருந்தொற்று தொடங்கியவுடன் யோகா செய்யுங்கள், புத்தகத்தை வாசியுங்கள். இசை கேளுங்கள். வானொலிப் பேழை வாங்குங்கள். வீட்டுத்தோட்டம் போடுங்கள். கதை எழுதுங்கள். நாங்கள் எழுதும் கதைகளை வாசியுங்கள். வீட்டாருடன் அன்பாக இருங்கள். அழைக்க மறந்த நண்பர்களுடன் நீங்களாகப் போய் பேசுங்கள், புது சட்டை போடுங்கள், விதம் விதமாக வீட்டில் ஆக்கி உண்டு களித்திருங்கள். இதுபோன்ற ஒரு ஓய்வான தருணம் மொத்தமாக, குலையாக உங்களுக்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை என இலக்கியவாதிகள் தொடங்கி ஆன்மிகவாதிகள்வரை விதவிதமான அறிவுரைகள், வழிகாட்டுதல்கள்.

உணவு, பலசரக்கு, மருந்து இவற்றைத் தவிர எல்லா வணிகமும் தரைக்குத் தம்பியாய் படுத்துவிட்டன. எங்கள் வணிகத்தைப் பற்றி தனியாகச் சொல்லவே தேவையில்லை. இலங்கையிலிருந்து வானூர்தி வந்தால்தான் எங்களுக்குத் தொழிலே.

“எவ்ளோ நாள்தான் ஃபிளைட் பறக்காம இருக்கும்?! ரண்டு மூணு மாசத்துல நெலம சரியாயிடும்னு” சொல்லி நானும் கதை எழுதத் தொடங்கி அது வளர்ந்து குறுநாவலாக மாற, வீட்டுத்தோட்டத்தில் நின்ற சக்கைப்பழம் அறுப்புக்குத் தயாராகிவிட்டது. குலையும் கதர் சாரமுமாக முகநூலில் படமும் போட்டாகிவிட்டது. எல்லா மேல்பூச்சு பகட்டுகளும் முடிந்த பிறகுதான் இது ஒரு முடிவிலி என்ற பட்டறிவு பிறக்கின்றது.

பெருந்தொற்று முடக்கில் நான் நண்பர்களுக்கு போன் போட்டேனோ இல்லையோ, ஆனால் உள்ளூர் சாமி மய்யித்து பக்ரீ, கோழிக்கோடு ரமேஷ் அளியன், துபையிலிருக்கும் அதிரை அமீன், புருணையில் இருக்கும் தம்பி மகன் அப்துல் காதிர், உண்மை என்றும் பொய் என்றும் சொல்லவியலாத பேருவளை ஹோமியோபதி டொக்டர் ஜலாலுத்தீன் ஆகியோர் கூப்பிட்டனர்.

இதில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் காக்கா அல்லது மச்சான் உறவுமுறை சொல்லி “செலவுக்கு வேண்டுமா?” எனக் கேட்டனர்.

அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு அரை நாளுக்கு அழுது தீர்த்தேன். “நீ வேலை வெட்டியில்லாமலல்லவா இருக்கிறாய்?” என்ற பேருண்மை மூளையின் எல்லா அடுக்குகளிலும் விழித்துக்கொண்டது.

அதன் பிறகான எல்லா தொலைபேசி உரையாடல்களிலும் “உங்கள் தொழில் எப்படி இருக்கிறது?” என்ற இடத்தை நான் எப்படிக் கடக்கிறேன் என்பதை வைத்துதான் உரையாடலின் மீதி பகுதியும் குளிரா நெருப்பா எனத் தீர்மானமாகும்.

திருமண விருந்தொன்றில் சந்தித்த கல் வியாபாரியிடம் சாப்பாடு தாலம் வந்துசேரும் வரைக்கும் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில் அவன் தன் செல்பேசி திரையைக் காட்டினான். கொழும்பு காலி முக கடலைத் தூர்த்து அறுநூற்றி அறுபத்தைந்து ஏக்கரில் சீனா கட்டிவரும் நவ துபை நகரத்திற்கு ஒரு இலங்கைக்காரனும் போக முடியாதாம். சீனக் கடவுச்சீட்டுதான் செல்லுமாம். அல்லது சீன அலுவலர் அனுமதி தரணுமாம். மொத்த சிலோனும் சீனாக்காரன் மடியில விழுந்த பிறகு கல் வியாபாரமும் சில்லரை வணிகமும் மிஞ்சுமா என்ன? எல்லோருக்கும் ஈரப்பலாக்காய்தான்.

இரண்டாம் முடக்கும் தொடங்கிவிட்டது. தொழிலின்மையின் கனம் வானம், நிலத்தின் இருப்பைப் போல பேருருக்கொள்ளத் தொடங்கியது. சுபஹில் தொடங்கி லுஹர் வரைக்கும் உச்சகட்டம். மதியம் மட்டும் இடைவேளை. மாலையில் அதுவும் தூங்கி எழுந்துவிட்டு நம் முன் வந்து இரை கேட்டு நிற்கும். எங்கும் தப்பிக்க இயலாது. மனைவி, மகள் என எல்லோர் முகங்களும் அழிந்து இப்போது அவ்விடத்தில் பணத்தாள்களின் நிறமும் மணமும் கூடியிருந்தது.

முதல் முடக்கில் போன் போட்ட ஒருவர் கூட போடவில்லையே?! அப்படி போட்டாலும் கூட அது விசாரிப்புகள், ஊர் பலாய் என மட்டுமே முடிந்துவிடும்.

“நீ குதிரையில் அமர்ந்திருக்கும்போது உன் கையிலிருந்து சவுக்கு கீழே விழுந்தால்கூட அதை நீ யாரிடமும் எடுத்துக் கேட்காதே” என்ற ஹதீதை நேசிக்கும் மனத்தின் மறுபக்கம்தான் இப்படி எதிர்பார்க்கின்றது. என்னில் நானே வெளுத்துப்போன மெய்கணம்.

ஒவ்வொரு சுஜூதிலும் “வ அஃனினி பி ஃபள்ழிக்க அம்மன் சிவாக் ” என்று கேட்டால் மட்டும் போதுமா? மனத்தின் கையைத் தாழ விடாதே மண்டையனே! அவர்களுக்கும் எனக்கும் எல்லோருக்கும் வாழ்வாதாரமளிக்கிற அந்த முடிவற்ற களஞ்சியக்காரனிடம் மட்டுமே கேள்!

இப்படியாக, சொந்தத் தொழில்குறித்த நிலையில்லாத தன்மை தலைக்குள் நஞ்சாகி ஏறிக்கொண்டிருக்கும் நாளில், அதுவும் ஒரு முழு அடைப்பு நாளில் மார்த்தாண்டத்தில் உண்ணியப்பம் செய்து கடைகளுக்குக் கொடுக்கும் கூட்டாளி போன் போட்டான்.

“காக்கா, ஒங்க யாபாரம் நடக்கா?”

“ஒன் வியாபாரம் எப்படி?”

“கடை அடைச்சிருக்கும்போது என் யாபாரம் எப்படி நடக்கும், காக்கா?”

“அதுதான் இங்கயும்.”

இந்தப் பேச்சு முடிந்த மூன்றாவது நாளில் சென்னையிலிருந்து ஒரு போன். இவன் பெயிண்ட் கடை வைத்திருக்கிறான். இவனும் ஒரு மாதமாகக் கடையை அடைத்து வைத்திருக்கிறான்.

“காக்கா, வியாபாரம் எதுவும் நடக்குதா?”

“சிலோனுக்கு ஃபிளைட் உட்டாத்தான் எங்களுக்கு யாபாரம்.”

“இங்க என்னமும் நடக்கலியா, காக்கா?”

“நாந்தான் நடக்குறேன். இனிமே யார் போன் போட்டாலும் யாபாரத்த தவிர மத்ததுலாம் பேசுங்கோன்னு சொல்லப்போறேன்” என்று சொன்னேன்.

“இப்பிடியே சும்மா இருக்க முடியாதில்லியா, காக்கா?”

“நான் என்ன வேணுன்னா ஒழய்க்கப் போகாம இருக்கிறேன்? எல்லாப்பக்கமும் வாசலை மூடிட்டு ஆயிரம் மீற்றர் ஓட்டம் ஓடுன்டா எப்பிடி?”

“ம்ம்…”

“இருபத்தஞ்சு வருஷம் கால் நூற்றாண்டு உழச்சுப்போட்டுதான் இக்கிறேன். மாசச் செலவுக்கு இல்லன்னு சொல்லி யார்ட்டயும் போய் நின்னதில்ல. இன்னிக்கு இந்த மாதிரி சிக்கல். புது முயற்சி எடுத்தா கொஞ்ச நாளய்க்கு நடக்குது, அப்புறம் வாய் பாக்க வேண்டியீக்குது. அல்லாஹ்தான் தரணும். காச உண்டாக்க முடியலன்டா எவன்டயும் போய் நிக்க மாட்டேன். அது மட்டும் உறுதி. பேசாம தோல்விய ஒத்துக்கிட்டு மல்லாக்கப் படுத்துறுவேன்.”

சிரித்தான் அவன்.

மீண்டும் வாரக்கடைசியில் பெயிண்ட் கடைக்காரனிடமிருந்துதான் போன்.

கால்வாசி கதைகளுக்குப் பிறகு, “காக்கா, யாபாரம் நடக்குதா?” என்றான்.

உச்சியில் சுடு ஆணம் கொதித்தது. “மசிருலதான்டா நடக்குது.”

அவன் இணைப்பை துண்டித்தானா, நான் துண்டித்தேனா என்று தெரியவில்லை. செல்பேசியை எடுத்து குமரேசனுக்கு போட்டேன்.

“நீங்கள் அழைக்கும் எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.”

o0o

Related posts

Leave a Comment