குறும்பதிவுகள் 

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்

விசாலமான வாசிப்பு ஒரு மனிதனை கடும்போக்குவாதத்திலிருந்தும் குறுகிய சிந்தனையிலிருந்தும் விடுவிக்கலாம். அறியாமையும் அறைகுறையான, மேம்போக்கான அறிதலும் கடும்போக்குவாத்தின் பக்கம் மனிதர்களை இட்டுச்செல்லக்கூடியவை.

பொதுவாக கடும்போக்குவாதிகள் தங்களின் வட்டத்தைத் தாண்டி எதுவும் வாசிப்பதில்லை அல்லது எதுவும் வாசிப்பதே இல்லை. அதிகபட்சம் தங்கள் இயக்கத்தை, சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்களின் உரைகளைக் கேட்பதோடு அவர்கள் நிறுத்திக்கொள்கிறார்கள். மற்றவர்களின் புத்தகங்களை வாசிப்பதை தங்களுக்கு அவசியமற்ற ஒன்றாகக் கருதுகிறார்கள் அல்லது அவற்றால் தாங்கள் வழிதவறிவிடுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

எந்தவொன்றும் அதன் எதிர்மறையைக் கொண்டே நன்கு அறியப்படுகிறது. ஜாஹிலிய்யாவைப் பற்றி அதிகம் அறிந்தவர் இஸ்லாத்தின் சிறப்பையும் அது மனித வாழ்வுக்கு எந்த அளவு அவசியம் என்பதையும் அறிந்து கொள்வார். கசப்பின் கடுமையை உணர்ந்தவரால்தான் இனிப்பின் இனிமையில் லயிக்க முடியும் என்கிறார் செய்யித் குதுப்.

நம்முடைய ஈமான் எந்தவொன்றாலும் அசைக்க முடியாத உறுதியான அடித்தளத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும். ஈமான் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. ஆன்மிகத்திற்கும் அறிவுக்கும் தொடர்பே இல்லை, அறிவுக் கண்களை மூடிக்கொண்டு சொல்லப்படுவதை அப்படியே நம்புங்கள் என்று இஸ்லாம் கூறவும் இல்லை. திருக்குர்ஆனில் “நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?”, “புரிந்துகொள்ள மாட்டீர்களா?” போன்ற வாசகங்கள் இருநூறுக்கு மேற்பட்ட வசனங்களில் இடம்பெற்றுள்ளன என்கிறார் யூசுஃப் அல்கர்ளாவீ.

வஹீயைப் போன்று அறிவும் மனிதனுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குதான். இரண்டும் இறைவன் மனிதனுக்கு அளித்த அருட்கொடைகள்தாம். ஒன்று மற்றொன்றை மறுக்காது. ஒன்று மற்றொன்றுடன் முரண்படாது. ஆனால் அறிவு எல்லைக்குட்பட்டது. வஹிக்கு எந்த எல்லையும் இல்லை. அறிவால் புரிந்துகொள்ள முடியாததை வஹியின் மூலமாக அறிந்துகொள்கிறோம்.

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும். சலிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றும். ஓரிடத்தில் தேங்கிவிட்டால் விரைவில் அழுக்கடைந்து விடுவோம். வாழ்க்கையின் அலுவல்கள் நம்மை தின்னத் தொடங்கிவிடும். ஆழமான வாசிப்பு நம் அறியாமையை நமக்கு உணர்த்துகிறது. மேம்போக்கான வாசிப்பு நம்மை செருக்கில் ஆழ்த்துகிறது.

கேளிக்கைகளில் மூழ்கியிருப்போருக்கு வாழ்வு குறுகியதுதான். வாழ்வு தனக்குள் மறைத்து வைத்திருக்கும் இரகசியங்களை அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. இன்பமான வழியில் நேரத்தைக் கடத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் அவர்கள் பெற்றிருப்பதில்லை. கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகத்தானே தெரியும். அவர்களின் வாழ்வில் பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழாது. ஒரு இயந்திரத்தைப் போல அப்படியே இயங்கி ஓய்வதைத் தவிர தங்களின் வாழ்க்கையில் பெரிதாக எந்த ஒன்றையும் அவர்கள் சாதித்து விடுவதில்லை.

மனிதன், வாழ்வு மறைத்து வைத்திருக்கும் இரகசியங்களை அறிய முற்படும்போது அவனது வாழ்வு அர்த்தம்மிகுந்ததாக மாறுகிறது. வாழ்வு மறைத்து வைத்திருக்கும் இரகசியங்களை அறிய அறிய அவனைச் சுற்றி படர்ந்திருக்கும் மூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கும். தான் படைக்கப்பட்ட நோக்கத்தை கண்டடையும் மனிதன் பேரின்பத்தை உணர்கிறான். இந்தப் பாதையின் வழியாக ஆன்மீகத்தைச் சென்றடைபவனும் லௌகீக வாழ்வில் வெற்றி காண்பதற்காக ஆன்மீகத்தின் பக்கம் ஒதுங்குபவனும் சமம் அல்ல. உண்மையில் அந்தப் பயணம் சுவாரசியமானதும்கூட. அதன்மூலம் அவன் அன்றாட வாழ்வின் அலுவல்கள் ஏற்படுத்தும் சலிப்புகளிலிருந்தும் விடுபட முடியும். கேளிக்கைகளைவிட மிகச் சிறந்த மாற்றுகளையும் அவன் பெற்றுக்கொள்ள முடியும். கேளிக்கைகள் ஒரு கட்டத்தில் அலுப்பூட்டக்கூடியவையாக மாறிவிடும். அவை வாழ்வை அர்த்தமற்றதாக ஆக்கிவிடக்கூடியவையும்கூட.   

வாழ்க்கை நம்மிடம் முடிவடையாத தேடலை வேண்டி நிற்கிறது. அள்ள அள்ள குறையாத கருவூலங்களை அது தன்னுள் கொண்டுள்ளது. விரும்புவோர் வேண்டிய மட்டும் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அது என்றும் வற்றாத ஜீவ ஊற்று. தாகிப்போர் தாகம் தணியும் அளவுக்கு அருந்திக் கொள்ளலாம். எளிதாக சிறைச்சாலைகள் நம்மைச் சுற்றி உருவாகி விடுகின்றன. பல சமயங்களில் நம்மை நாமே சிறைப்படுத்தியும் கொள்கிறோம். ளெலகீகவாதிகளின் கண்ணோட்டத்தில் வாழ்க்கையை நாம் அணுகினால் மீள முடியாத சிறைச்சாலைகளில் சிக்கிக்கொள்வோம்.

Related posts

Leave a Comment