அரசியல் ரீதியான பிரச்னைகளுக்கு அடிப்படையான காரணங்கள் அரசியல் ரீதியானதுதானே அன்றி கலாச்சார ரீதியான வேறுபாடுகள் அல்ல. அப்படி கலாச்சாரக் காரணங்களைக் காட்டுபவர்கள் பாதிக்கப்படுபவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் வேலையைத்தான் செய்கிறார்கள்.
1930களில் நாஸி ஜெர்மனியில் இருந்து தப்பிச்சென்ற யூத அரசியல் தத்துவவியலாளர் ஹன்னா ஆரன்ட் இப்படி எழுதினார், “ஒருவர் யூதர் என்பதற்காகத் தாக்கப்பட்டால் அவர் தன்னை யூதர் எனும் நிலையிலேயே தற்காத்துக்கொள்ள வேண்டும்; ஒரு ஜெர்மானியராகவோ, உலகக் குடிமகனாகவோ, மனித உரிமைப் போராளியாகவோ அல்ல.”
இந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.