bulldozer politics bjp tamil afreen fatimaகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் பயங்கரவாதம்: இஸ்ரேலைப் பின்பற்றும் இந்தியா

Loading

பாஜக, ஆர்எஸ்எஸ் முதலான சங் பரிவார சக்திகள் தொடர்ச்சியாக இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கும்பல் கொலை, ஹிஜாப் தடை, ஹலால் சர்ச்சை, அஸான் சர்ச்சை, ராமநவமி வன்முறை, வெறுப்புப் பரப்புரைகள், புல்டோசர் அரசியல், ஞான்வாபி மசூதி விவகாரம் என தினந்தோறும் முஸ்லிம்களின் இருப்பும் அடையாளமும் கொடுந்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

இதன் நீட்சியாகவே தற்போது முஹம்மது நபியை இழிவாகப் பேசி, முஸ்லிம்கள் மீதான தன் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளனர் பாஜக பிரமுகர்களான நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர். இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து இந்திய அரசும் அதைத் தவறென்று ஒப்புக்கொண்டு மண்டியிட்டது. தவறிழைத்தவர்கள் மீது பாஜக கண்துடைப்பு நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் இந்த நிமிடம் வரை அவர்களைக் கைது செய்யவில்லை.

நுபுர் ஷர்மாவையும் நவீன் ஜிண்டாலையும் கடுமையான சட்டங்களில் கைது செய்ய வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, பிஹார், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா என நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் மீது சில மாநிலங்களில் காவல்துறை படுமோசமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்தது வன்மையாகக் கண்டனத்துக்குரியது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முதஸ்ஸிர், சாஹில் ஆகிய அப்பாவி இளம் முஸ்லிம்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். நாடு முழுக்க 400க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் உ.பி.யில் மட்டும் இதுவரை சுமார் 310 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சமூகச் செயல்பாட்டாளர் அஃப்ரீன் பாத்திமா உள்ளிட்ட முஸ்லிம்களின் வீடுகளை இடித்துத் தள்ளுகிறது ஆதித்யநாத் அரசு.

அரசியல் அமைப்புச் சட்டம் என ஒன்று இருப்பதைக் கொஞ்சமும் மதிக்காத பாஜக அரசு மேற்கொள்ளும் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கே முற்றிலும் விரோதமானது.

உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.

இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.

எமது கோரிக்கைகள்

• நுபுர் ஷர்மாவையும் நவீன் ஜிண்டாலையும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

•  வெறுப்புப் பேச்சுக்கு இடமளித்த டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீதும் சட்ட நடவடிக்கை வேண்டும்.

• ஜார்கண்டில் கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

• கைது செய்யப்பட்டுள்ள அஃப்ரின் பாத்திமாவின் தந்தை உள்ளிட்ட அனைத்துப் போராட்டக்காரர்களையும் விடுவிக்க வேண்டும்.

• வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் போல் முஸ்லிம் வெறுப்புக் குற்றங்களுக்கு எதிரான தனிச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் இயற்ற வேண்டும்.

(நுபுர் ஷர்மாவுக்கு எதிராக நேற்று நாகூர் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு போராட்டம் நடத்தியது. அதில் அந்த அமைப்பு வெளியிட்ட பத்திரிகைச் செய்தி.)

Related posts

Leave a Comment